Tuesday, July 04, 2006

கிருஷ்ணா நதிக்கரையில்..

முன்பதிவில்
ஒரு ஞாயிறு காலை காலை சிற்றுண்டியை முடித்துகொண்டு நாங்கள் 25 பேர் கிளம்பினோம்.
எங்கள் கம்பெனி வண்டி அனைவரையும் கிருஷ்ணா நதிக்கரை வரை கொண்டுவிட்டது.அக்கரைக்கு போக 2 நாட்டுப்படகுகளை வாடகைக்கு அமர்த்திக்கொண்டோம்.
அடுத்த 25 நிமிடங்களில் ஒரு சுகமான படகு பயணம் முடிந்து அக்கரையில் இறங்கினோம்.அங்கிருந்து எங்களை அழைத்துப்போக வண்டி வந்திருந்ததால் பிரச்சனை ஒன்றும் இல்லை.நண்பர்களை பார்க்கபோகும் முன்பு அந்த வழியில் உள்ள சில கோயில்களை பற்றி நண்பர்கள் சொல்லியிருந்ததால் அதை பார்கலாம் என்று முடிவு செய்து முதல் கோயில் உள்ளே போனோம்.
முதல் கோயில்: இது ஒரு சிவன் கோயில்.கிருஷ்ணா நதிக்கரையிலே உள்ளது.வெள்ளம் வரும் நாட்களிலே கோயிலை மூடிவிடுவதாகச்சொன்னார்கள்.இந்த கோயிலின் விசேஷம் இது தான்.கருவரையில் இருப்பது ஒரு உடைந்த சிவலிங்கம் அதன் மேல் பக்கத்தில் ஒரு குழி அதனுள் தண்ணீர்,அவ்வளவு தான்.இதிலென்ன விசேஷம்?அந்த குழியில் உள்ள தண்ணீரை எடுத்துவிட்டால் திரும்ப அதே பழைய நிலைக்கு வந்துவிடும் ஆனால் வழியாது.இத்தனைக்கும் நான் போன போது அந்த கோயில், நதியின் மட்டத்தில் இருந்து பல மீட்டர் உயரத்தில் இருந்தது.இப்படி பல முறை நீரை எடுத்து காண்பித்தார் அந்த சாஸ்திரிகள்.நம்மையும் தண்ணீரை எடுத்து வெளியே விட்டு பார்க்கச்சொன்னார்.அந்த பகுதி சிறிது வெளிச்சம் குறைவாக இருந்ததால் அவரே தீபாராதனை தட்டில் சூடம் வைத்து நல்ல வெளிச்சத்திலும் காண்பித்தார்.அந்த கோயிலுக்கு ஏதோ தல புராணம் சொன்னார் சரியாக ஞாபகம் இல்லை.
அடுத்தது: இது ஒரு லக்ஷ்மி நரசிம்மன் கோயில்.இதுவும் மிகச்சிறிய கோயில்.இதிலும் ஒரு அதிசயம். இங்குள்ள விளக்கை பெருமாள் பக்கத்தில் கொண்டு போனால் தீபம் ஆட ஆரம்பிக்கும் அதையே வெளியில் கொண்டு வந்தால், தீபம் எப்போதும் போல் ஆடாமல் இருக்கும்.அவரின் ஆக்ரோஷமான இடம் என்பதால் அங்கு தீபம் ஆடுவதாக சொன்னார்கள்.சில தடவை அவரே பண்ணிக்காண்பித்த பிறகு நம்மையும் அழைத்து பண்ணச்சொன்னார். காலை 12 மணிக்கு கோயில்கள் மூடப்படுவதால் அதற்கு முன்பு தரிசனத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டோம்.
மதியம் அவர்கள் Messயில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு கடைத்தெருவை சுற்றிக் கொண்டிருந்த போது கண்ணில்பட்டது "கோபுரங்கள் சாய்வதில்லை" படத்தில் தெலுங்கு பதிப்பு.தியேட்டர் உள்ளே போய் உட்கார்ந்துவிட்டோம்.படம் OK தான்.சாயங்காலம் வரை பொழுது ஓடிவிட்டது.ஊர் திரும்பும் நேரம் வந்துவிட்டதால் அனைவரும் திரும்ப படகு துறைக்கு வந்தோம்.படகு வருவதற்கு சிறிது நேரம் எடுத்ததால் அங்கேயே உட்கார்ந்து கிருஷ்ணா நதியின் அழகை ரசித்துக் கொண்டு இருந்தோம்.
கொஞ்ச நேரத்தில் திடிரென்று வானம் இருட்ட ஆரம்பித்து,பலமான மழைக்கு உண்டான அத்தனை அறிகுறிகளும் தெரிய ஆரம்பித்தது.இந்த சமயத்தில் படகும் வர ஒருவித துணிச்சலுடன் எல்லோரும் ஏறி உட்கார்ந்தோம்.போகும் போது 2 படகு வரும் போது ஒன்று தான்.கொஞ்சம் பெரிய படகு என்பதால் படகோட்டியும் ஒன்றும் பிரச்சனையில்லை என்ற சான்றிதழ் கொடுத்ததால் கிளம்பினோம்.
பாதி ஆற்றை தாண்டிவிட்டோம்.கொஞ்சம் கொஞ்சமாக காற்று வேகம் எடுக்க ஆரம்பித்தது.மழையும் சிறிது தூரலுடன் அவ்வப்போது லேசாக எங்களை நனைக்க ஆரம்பித்தது.இது போதாது என்று ஆற்றில் சிறிது பெரிதாக அலைகள் வந்துகொண்டு இருந்தது.திடிரென்று பார்த்தால் தண்ணீருக்கும் படகு மேல் மட்டத்திற்கும் வெறும் 2 அங்குலம் மட்டும் தான் இருந்தது.
படகில் இருந்த பாதிபேருக்கு நீச்சல் தெரியாது.அந்த நேரத்திலும் கிண்டலுடன் தான் வந்தோம்.பயத்தை மறைக்க வேண்டுமே!.படகை ஓட்டுவரோ தண்ணீர் வேகம் அதிகமாக இருப்பதை பார்த்து படகை இன்னும் முன்னோக்கி செலுத்த ஆரம்பித்தார் அப்போது தான் சரியாக நாங்கள் இறங்கவேண்டிய இடத்திற்கு வரமுடியும்.இதனால் இன்னும் நேரம் அதிகமானது.தண்ணீரில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கண்டம் தான்.
இந்த நிலயிலேயே நாங்கள் கரைக்கு வந்து சேர்ந்தோம்.மழையும் வரவில்லை,காற்றும் வலுக்கவில்லை.
நல்ல படகோட்டியால் அன்று நாங்கள் பிழைத்தோம்.
துணுக்கு:அங்கு முதலைகள் நடமாட்டம் உண்டாம்.இறங்கிய உடனே சொன்னார்கள்.

2 comments:

ரவி said...

அதெல்லாம் சரி...உங்களுக்கு நீச்சல் தெரியுமா ? - கொஞ்சம் படங்களையும் போட்டு இருந்தால் சூப்பரா இருந்திருக்கும்...

அடுத்தமுறை போகும்போது மறக்காமல் கேமிரா கொண்டுபோங்க...

வடுவூர் குமார் said...

ரவி
அப்ப ஏது கேமரா?
நீச்சலா? அதுக்கு தான் தனி பதிவே இருக்கே
இங்க பாருங்க...
12. http://madavillagam.blogspot.com/2006/06/blog-post_05.html