Thursday, December 31, 2009

சிமிண்ட் தேவையில்லை

மஸ்கட்டில் சிறு சிறு குன்றுகளை சமப்படுத்தி அதன் மேல் வீடுகள் கட்டாமல் குன்றின் மேலேயே கட்டி,வீட்டுக்குப்போக சாலையை அதன் போக்கிலே போட்டுவிடுகிறார்கள்.நடப்பதெல்லாம் வீட்டோடு சரி, வெளியில் வந்தால் மகிழுந்து தான் அதனால் அதற்கு ஏற்றாற் போல் சாலையை போட்டுவிட்டால் போதும் வீடு எந்த உயரத்தில் இருந்தாலும் கவலையில்லை.

மேடு பள்ளம் என்று மாறி மாறி இருக்கும் இடத்தில் சாலைகள் வரும் போது சரிவு எந்த பக்கம் அதிகமாக இருக்கும் இடத்தில் கான்கிரீட் சுவர் எழுப்புவது என்பது நடைமுறை.தொழிற்நுட்பம் மேம்பாடு கண்டுகொண்டிருக்கும் நிலையில் அதையும் மாற்றி அமைத்துள்ளார்கள்,இந்த முறையில் சுவருக்கு கட்டுவதற்கு மட்டும் சிமிண்ட் தேவையில்லை.கீழே உள்ள படத்தை பாருங்கள் இது அத்தனையும் முன்னமே வடிவமைத்து செய்யப்பட்ட Precast Blocks.இந்த பிலாக்குகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த இரு பிலாக்குகளுக்கு இடையே வரும் பகுதியை ஒரு சிறிய சிலாப் மூலம் அடைத்துவிடுகிறார்கள்.அவ்வளவு தான்.வேலையிடத்தில் சிமிண்ட்டுக்கு அவசியமே இல்லை.இதைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு இங்கே போட்டிருந்தேன்.பக்கத்தில் இருக்கும் Qurm பூங்காவிலும் இத்தொழிற்நுட்பத்தை புகுத்தியுள்ளார்கள்.



இப்படியெல்லாம் இருந்தாலும் நான் தங்கியிருக்கும் இடத்துக்கு பக்கத்தில் ஒரு வீடு கொஞ்சம் சாலையை விட ஒரு 3 மீட்டர் உயரத்தில் இருந்தது.சாலையை விட 10’ உள்ளடங்கியும் இருந்தது.வீட்டின் அஸ்திவாரத்துக்கும் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி வாட்டமாக மண் சரிந்து இருந்தது.

முதல் நாள் ஒரு மண் தோண்டி வந்தது மறு நாள் அந்த வாட்டமான பகுதி மழித்து எடுக்கப்பட்டது.இப்போது வீடு அதன் அஸ்திவார ஒரு பகுதி வெளியில் தெரிய ஆரம்பித்தது.இந்நிலையில் மழை பெய்தால் அந்த வீடு ஒருவழியாக சரிய ஏதுவாகியிருக்கும் ஆனால் இந்த ஊரில் தான் அவ்வளவாக மழை கிடையாதே அதனால் தான் இப்படி தைரியமாக செய்கிறார்கள் என்று நினைத்திருந்தேன்.அவர்கள் நேரம், 3 ம் நாள் “ப” வடிவத்தில் சுவர் எழுப்பினார்கள் அதுவும் Hollow Blockயில்.இந்த Hollow Blocks இவ்வகை அழுத்தத்தை தாங்கக்கூடியது அல்ல.முதலில் இந்த பகுதியை என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியாமல் இருந்தது,சுவர் எழுப்பியவுடன் புரிந்தது இவர்கள் சாலை மட்டத்தில் ஒரு மகிழுந்து நிருத்தும் இடம் செய்கிறார்கள் என்று.

3ம் நாள் சுவர் வேலை செய்யும் போதே என் நண்பனிடம் சுட்டினேன் இவ்விடத்தை பார்த்துக்கொள் என்றேன்.நீட்டு வாக்கில் உள்ள சுவர் சுமார் 7 மீட்டர் இருக்கும் அந்த சுவர் தான் பக்கத்தில் உள்ள வீட்டின் ஒரு பகுதி மண்ணை தாங்க வேண்டும்.யார் பொறியாளரோ தெரியவில்லை.3 மீட்டர் உயரத்தில் 1 மீட்டர் எழுப்பியாகிவிட்டது அடுத்த வேலை ஆரம்பிக்கும் முன்பு 3 நாட்கள் விட்டு விட்டு மழை.Flash Flood மூலம் ஓமனில் ஆறு பேர் சாவு.

மழை நின்றவுடன் வேலை ஆரம்பமானது.மீதி உயரத்தை கட்டி முடித்தார்கள்,வண்டி நிற்கும் இடத்துக்கு கீழே கற்கள் பதித்தார்கள்.காசு இருக்கே என்ன பண்ணலாம் என்று நினைத்து சுவருக்கும் சேர்த்து Tile பதித்தார்கள்.

அடுத்து இப்போது சுவருக்கும் வீட்டுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப பக்கத்தில் வெட்டிப்போட்ட மண்ணை உபயோகித்தார்கள்.வேலை முடிந்தது!!!
அங்கு மண் போட போட சுவர் உள் பக்கம் வில் மாதிரி வளைய ஆரம்பித்தது.Hollow Block என்பது 3 மீட்டர் உயர மண்ணை தாங்கும் திறன் கிடையாது என்பதை இவ்வளவு வேலை செய்து தெரிந்துகொண்டார்கள்.எல்லாவற்ரையும் இடித்துவிட்டு இப்போது அந்த பகுதி தட்டி போட்டு மறைத்து வைத்துள்ளார்கள்.இடிப்பதற்கு முதல் நாள் இரவு அந்த பக்கம் போய் நின்று பார்த்த போது அந்த “வில்” தெரிந்தது,சரி வீட்டுக்காரரிடம் சொல்லுவோம் என்று கதவை திறக்கப்போனால் அது பூட்டியிருந்தது.வீட்டில் ஆட்கள் இருப்பதற்கான அறிகுறியும் இல்லை.மறு நாள் எப்படியே தெரிந்து அந்த சுவரை இடித்துவிட்டார்கள்.இப்ப வீட்டின் கதி என்னவென்று தெரியவில்லை.

Friday, December 25, 2009

25 வருடம் கழித்து.

என்னுடன் வேலை பார்த்த பழைய நண்பர்களை கண்டுபிடிப்பது என்பது பிரம்மப்பிரயத்தனமாக இருந்தது மஸ்கட் வரும் வரை.மஸ்கட்டில் நான் வேலை பார்த்த நிறுவனத்தின் கிளை இருப்பதை இணையம் மூலம் தெரிந்து இருந்தாலும் எவர் பெயரை சொல்லி தேடுவது என்ற குழப்பத்தில் ஒரு நாள் கூகிள் சாட்டில் வரும் நண்பரிடம் கேட்டேன்.அவர் இருப்பதோ வேறு அரபு நாட்டில் இவரிடம் என்ன விபரம் கிடைக்கும் என்ற சந்தேகத்திலேயே கேட்டேன்.அவரும் ஒருவர் பெயரை சொன்னதும் எனக்கு தெரிந்த பெயராகவும் இருந்ததால் அவர் அலைபேசி எண்ணை மட்டும் வாங்கிக்கொண்டேன்.தொடர்பு கொண்டு நான் நினைத்துக்கொண்டிருந்தவரும் இங்கு இருப்பவரும் ஒருவரே என்று தெரிந்தவுடன் பழைய கதைகளை பேசி மகிழ்ந்தோம்.மற்ற நண்பர்களை சந்திக்கும் எண்ணத்துடன் ஒரு உணவகத்துக்கு என்னை அழைத்து மற்ற நண்பர்களையும் அறிமுகபடுத்தி வைத்தார்.மதிய உணவே மாலை 4 மணி வரை போனது.அங்கு பேசிக்கொண்டிருக்கும் போது எனக்கு தெரிந்த மற்றொரு நபரின் பெயர் அடிபட்டவுடன் அவர் அங்க அடையாளங்களை சொல்லி “அவரா?” என்றேன். ஆமாம் அவரே தான் இங்கு தான் சோஹாரில் வேலை செய்கிறார் என்றார்கள்.எண்ணை வாங்கி பேசி மற்றொரு நண்பரை பிடித்தேன்.இப்படியே ஒரு சின்ன வட்டம் உருவானது.

கடைசியாக வாங்கிய எண் மூலம் எனக்கு 25 வருடத்துக்கு முன்பு பழக்கமான நண்பரை தொடர்பு கொண்டேன்.சிறிது நேரம் பேசிய பிறகு இன்று சந்திக்கலாம் என்று சொன்னார்.சொன்னது போல் காலையிலேயே தொலை பேசி Qurm பூங்காவிற்கு அருகில் சந்திக்கலாம் என்று சொல்லியிருந்தார்.

போன கொஞ்ச நேரத்திலேயே வந்த நண்பர் உடல் எடை குறைந்து முன்பை விட இளைத்து இருந்தார்.அவரே கூப்பிட்ட பிறகு தான் எனக்கு அடையாளம் தெரிந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

பூங்கா உள்ளே போய் சுமார் 2 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம் அவர் மூலம் மேலும் சிலரின் தொடர்புகள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.இணையம் மற்றும் சில தொடர்புகள் இல்லாவிட்டால் இவர்களை எல்லாம் திரும்ப சந்தித்து இருக்க முடியுமா? என்று தெரியவில்லை.

மணி ஒன்றானதும் மதிய சாப்பாடுக்கு எங்கு போகலாம் என்றவுடன் Ruwi இல் இருக்கும் சரவண பவன் போகலாம் என்றார்.போகும் போதே ஓட்டுனர் உரிமம் அதை எப்படி முயற்சிக்கனும் எவ்வளவு கால அவகாசம் எடுக்கும் என்ற விபரங்களை சொல்லிக்கொண்டு வந்தார்.சாப்பாடு முடிந்தவுடன் எங்கு போகலாம் என்று கேட்டார்,அப்படி எதுவும் முன் யோஜனையுடன் வரவில்லை என்பதால் “சினிமா” வுக்கு போகலமா என்றேன்.

சரி என்றார்.
முதலில் ஸ்டார் சினிமா போனோம் ஆனால் படம் எதுவும் சுவாரஸ்யமாக இல்லை.நாங்கள் எதிர்பார்த்ததோ “அவ்தார்”.அங்கு இல்லை என்றதும் Al Shatti திரை அரங்குக்கு போனோம் அங்கும் அதே தான் ஓடிக்கொண்டிருந்தது.அங்கும் அவதார் இல்லை,பிறகு அவரே சுமார் 40 கிமீட்டர் தள்ளி இருக்கும் Basta கடைதொகுதி கூட இருக்கும் சினிமா அரங்குக்கு கூட்டிப்போனார்,இதிலும் அதே படங்கள்.இத்தொகுதியின் கூரை வித்தியாசமாக இருந்தது.






வரும் வழியில் தென்பட்ட Grand Mosque.



வித்தியாசமான கோணத்தில் Qurm பாலம்.




சினிமா பார்பதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாத்தால் திரும்ப வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் அலவளாவி விட்டு போனார். வெகு நாள் கழித்து பழைய L&T-ECC கதைகளை பேசி மகிழ்ந்ததில் இன்றைய பொழுது ஓடிவிட்டது.

Thursday, December 24, 2009

மஸ்கட்டுக்கு எப்படி போகனும்?

இப்படி சாலை வழியாகவும் போகலாம் அல்லது அந்த விவர பலகைக்கு மேலே போகும் விமானத்திலும் போகலாம்.:-)



இன்று மதியம் பழசிராஜா படம் போகலாம் என்று நானும் என் நண்பரும் கிளம்பினோம்.நான் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டேன்.நம் நண்பருக்கு இப்படி வெளியில் போனால் தான் Non-Veg சாப்பிடமுடியும் அதனால் ஒரு 10 நிமிடம் என்று சொல்லிவிட்டு உணவகம் போய்விட்டார்.வெளியில் வெய்யில் அடித்தாலும் அவ்வளவாக உறைக்காமல் இருந்தது.கொஞ்சம் தூரம் நடையை கட்டிய போது இவ்விளம்பர பலகை கண்ணில் பட்டது.அதன் பிறகு அப்படியே சாலை ஓரத்தில் நின்று போகும் வண்டிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் போது சமீபத்தில் சின்மனி வலைப்பதிவில் மஸ்கட்டை பற்றி சொல்லியிருந்தார்.பசுமையே இல்லை என்கிற தொனி பட்டது.மஸ்கட் உள்ளே பல இடங்களில் கீழே உள்ள மாதிரி தான் இருக்கும்.UAE மாதிரியே வேப்ப மரங்கள் எளிதாக வளர்கின்றன.



பழசி ராஜா எனக்கு சுமாராகத்தான் இருந்தது,ஒருவேளை மலையாளத்தில் பார்த்ததால் இருக்குமோ?சரத்குமார் குரல் நன்கு பழக்கப்பட்டுவிட்டதால் மலையாள இரவல் குரல் அவ்வளவாக எடுபடவில்லை.

Saturday, December 19, 2009

யோசிக்க வைத்திருக்கார்.

உலகமயமாக்கல்.
அமெரிக்க டாலர் பரிவர்தனை.
அரபுகளில் கையிருப்பு.(சிட்டி பேங்கை முழுங்குதல்)
எண்ணை பரிவர்தனை.
இந்திய பொருளாதாரம்.
அமெரிக்க வீட்டுக்கடன் பிரச்சனை.
இந்திய திட்டமிடல் கமிஷன்.
இந்திய மங்கையரின் சேமிக்கும் பண்பு...இதைப்பற்றி ஒன்றிரண்டு தெரியவில்லை என்றால் பொருமையாக கீழுள்ள நகர் படத்தை பார்க்கவும்.

56 நிமிட நகர் படம் திரு வெங்கடேஷ் அருமையாக சொல்லியுள்ளார்,நேரமானாலும் பார்த்துவிட்டு தான் படுக்கனும் என்று இருந்தேன்,இப்போது தான் முடிந்தது.





நன்றி:Vision India Trust.

இதை பார்க்கும் போது நம் பழைய பதிவர் திரு சிவஞானம் ஜி தான் ஞாபகத்துக்கு வந்தார்.இதை தருமி அவர்கள் பார்த்தாலும் சந்தோஷப்படுவார் என்று நினைக்கிறேன்.

அகலகட்டை இணைய இணைப்பு இல்லை என்றால் உங்களால் சரியாக பார்க்க முடியாது.

Friday, December 18, 2009

பழசி ராஜா

நேற்று வாரவிடுமுறையை தள்ளுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது இன்னும் இரண்டு நாட்கள் இருக்கு என்னும் போதே கலக்கமாக இருக்கு.இப்படிப்பட்ட மன நிலையில் இணையத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் போது சக தோழர் Star Cinema வில் பழசிராஜா 2.45 க்கு ஷோவாம் போகலாமா? என்றார்.மலையாள படம் பரவாயில்லையா? என்றும் கேட்டார்.எந்த மொழியாக இருந்தால் திரையில் வரும் காட்சிகளை புரிந்துக்கொள்ள முடியாதா என்ன என்று நினைத்து வருகிறேன் என்று சொன்னேன்.அவரும் மதிய சாப்பாட்டை முன்னதாகவே முடித்துவிட்டு சுமார் 2 மணிக்கு கிளம்பிவிட்டார்.நிறுவன ஓட்டுனர் ஃபிரியாக இருந்ததால் அவருடன் கிளம்பினோம்.தியேட்டர் வாசலில் இறங்கும் போது 2.20.நான் டிக்கெட் வாங்கும் இடத்துக்கு போய் வரிசையில் நின்றிருந்தேன்,என் நிலை வரும் போது சக நண்பர் கூப்பிட்டு ஷோ 2 மணிக்கே ஆரம்பித்துவிட்டது அடுத்த ஷோ 5.45 க்கு தான் என்றார்.3.45 மணி நேரத்தை எப்படி போக்குவது?நண்பர் என்னிடம் வேறெங்காவது போகனுமா? என்றார்.நான் கொஞ்சம் யோசித்துவிட்டு “மத்ரா” பகுதியில் ஒரு கட்டிடம் இருக்கு ஊதுபத்தி ஸ்டேண்ட் மாதிரி இருக்கும் என்றேன்.ஓட்டுனருக்கு அப்பகுதி பழக்கம் என்றதால் போனாம் ஆனால் நுழைவு பகுதி தான் எங்கிருக்கு என்று தெரியாமல் சுற்றி கடற்கரையாவது சுற்றி பார்க்கலாம் என்று கடல் பக்கம் வந்தோம்.26 டிகிரி வெய்யில் குளுமையாக இருந்தது.மீதியெல்லாம் படத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.திரும்பவும் நாளை 2 மணி ஷோவுக்கு போகலாம் என்றுள்ளோம்.

திரையரங்குக்கு முன்னால் இருக்கும் மலைப்பகுதி




பேரீச்சை மரங்களுக்கு இடையில் இருக்கும் பஸ் நிறுத்தம்.



மத்ரா கடல் பகுதி



இது தான் அந்த ஊதுபத்தி ஸ்டேண்ட் கட்டிடம்.



மேலும் சில கடல் படங்கள்.









இதெல்லாம் நான் தான் எடுத்தேங்க...

அருமையான நகர்படம்

ஸ்டுரோக் வந்த பெண்ணின் அனுபவத்தை கூற கேளுங்கள்.இவர் நடிகையாக இருந்தாலும் “பட்டையை கிளப்பியிருபார் என்பதில் சந்தேகம் இல்லை.

நிஜ மூளை காண்பிக்கும் போது ஒரு மாதிரியாக இருந்தாலும் அது இரண்டாக இருப்பதும் அவற்றுக்குள் நிகழும் பல வேறு பரிமாற்றங்களை சொல்லும் போது ஆச்சரியமாக இருக்கு.அவருக்கு ஸ்டுரோக் வந்த போதும் அப்போதும் மூளையின் நிகழ்வுகளை அருமையாக சொல்லியிருக்கார்.



18 நிமிட நகர்படம் - கொஞ்சம் நேரம் ஒதுக்கி பாருங்கள்.

Thursday, December 17, 2009

பண விரயம்.

ஒரு நாலஞ்சு நாளாகவே வேலைக்கு அலுவலகம் போகும் வழியில் இந்த வேலை கண்ணில் பட்டு வெறுப்பேற்றிக்கொண்டு இருந்தது.அதன் காரணம்?

முன்பெல்லாம் சாலை அல்லது பாலம் (Abutment) அங்கிருக்கும் நிலத்தில் இருந்து உயரமாக கட்டும் போது மேலே உள்ள மண் சரியாமல் இருக்க ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மண்ணை சரிப்பார்கள்.இப்படி செய்தால் மழை காலத்தில் கூட சாலைக்கு ஒரு பாதகமும் ஏற்படாது.

1990 களில் எப்போதும் செய்யும் முறையில் தொழிற்நுட்பத்தை புகுத்தி சாலைக்கு(செங்குத்தாக சுவர்) எவ்வளவு இடம் வேண்டுமோ அதை மட்டும் உபயோகிக்கும் முறையை கொண்டு வந்தார்கள்.சென்னை தி.நகர் பாலம் போத்தீஸ் பக்கத்தில் எப்படி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.இது பல விதங்களில் குத்தகைக்காரர்களுக்கும் அரசாங்கத்தும் சௌகரியமாக இருந்தது.இடவிரயம் என்பது கட்டுக்குள் வந்தது.இதே முறையை தான் பல நாடுகளிலும் உபயோகப்படுத்துகிறார்கள்.மஸ்கட்டிலும் பெரும்பாலான சாலைகள் சம தளத்தில் இருந்து உயரமாக வைத்து கீழே போக்குவரத்து வரும் இடங்களில் பாலங்களை வைத்துள்ளார்கள்.

நன்றாகத்தான் செய்துள்ளார்கள் ஆனால் திடிரென்று என்னவாயிற்று என்று தெரியவில்லை அந்த செங்குத்து சுவருக்கு முட்டு கொடுப்பது போல் மண்ணை கொட்டி முட்டு கொடுக்கிறார்கள்.இது அப்படியே பழைய முறையை கையாளுவது போல் இருக்கிறது.இவர்களுக்கு இடம் இருக்கு செய்துட்டு போகட்டுமே எங்கிறீர்களா?அப்ப அந்த செங்குத்து சுவர் கட்ட ஆன செலவு?

அதைத் தான் மண் போட்டு மூடிவிடுகிறார்களே?? கீழுள்ள படத்தில் வலதுபக்கம்- அதன் மீது சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்.



வண்டியில் போகும் போது எடுத்த சில சாலைப்படங்கள்.




Wednesday, December 16, 2009

இதுக்கு காரணம் இருக்கும்?

எனக்கும் என் பையனுக்கும் வான்வெளி அதன் அமைப்புகள் மற்றும் இரவில் வானத்தையும் அதன் ஊடே தெரியும் நட்சத்திரங்களும் அதன் இருப்பிடங்களும் என்ற எண்ணங்கள் இரவு சாப்பாட்டுக்கு பிறகு மொட்டை மாடிக்கு போனால் வரும்.மனைவிக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை அதன் தொடர்பில் வரும் படங்கள் பார்ப்பதிலும் எனக்கு தெரிந்து ஆர்வம் காட்டியதில்லை.

என்னுடைய தாத்தா எனக்கு 12 வயது இருக்கும் போது வீட்டு முற்றத்தில் உட்காந்துகொண்டு தனக்கு தெரிந்தததெல்லாம் என்னிடம் கொட்டிவிட்டு போனார்.விஷயங்களை சொல்லும் போதே இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன் அதனால் தான் உன்னிடம் சொல்கிறேன் என்று என் ஆர்வத்தை தூண்டிவிட்டார்.ஒரு தலைமுறை மற்ற தலைமுறைக்கு தனக்கு தெரிந்ததை சொல்லி தகவல்கள் அழியாமல் காக்க வேண்டும் என்று நினைப்பவர்.இக்காலத்தில் இது அனைத்தையும் வட்டில்/இணையத்தில் போட்டு வைத்துவிடுவதால் அவர்கள் பேசுவதை கேட்க கூட யாருக்கும் நேரம் இருப்பதில்லை.என்னுடைய வயதான காலத்திலும் இதைத்தான் அனுபவிக்கப்போகிறேன் என்பது இப்போதே நன்றாக தெரிகிறது ஏனென்றால் நான் என்னுடைய அப்பாவிடம் பேசுவது சில வினாடிகளே,அதற்குள் மெல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பது போல் வெற்றிடம் உருவாகிவிடுகிறது.என் மனைவியிடமே அவ்வளவாக பேசுவதில்லை என்ற குறை அவ்வப்போது எழுகிறது அது என்னுடைய சுபாவமாக இருப்பதால் அப்பாவிடம் பேச விஷயம் இல்லை என்பது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.அவசியம் இல்லாத போது பேசுவதால் தான் பிரச்சனை எழுகிறது.

நான் பேசுவதே இல்லை என்ற மனக்குறையை போக்க தினமும் இரவு சாப்பாட்டுக்கு பிறகு மொட்டை மாடிக்கு நானும் என் மனைவியும் போய்விடுவோம். நான் பேசுவதையோ அல்லது அவர்கள் பேசுவதையே கேட்டுவிட்டு கொசு தன் வேலையை ஆரம்பிக்கும் போது கீழே வந்துவிடுவோம். அப்படி ஒரு நாள் பேசிக்கொன்டு இருக்கும் போது என்னுடைய இருகுழல் நோக்கி மூலம் சில நட்சத்திரங்களை பார்த்து விபரங்கள் சொல்லிக்கொண்டிருந்தேன்.அப்போது தான் ஞாபகம் வந்தது போல் "ஏங்க நான் ஒன்று சொல்ல மறந்து விட்டேன்" என்று மனைவி ஏதோ சொல்ல வந்தார்.
சொல்லு என்றேன்.

4 வருடத்துக்கு முன்பு ஒரு நாள் இரவு 9.30 மணி இருக்கும் இங்கு உட்கார்ந்துகொண்டு இருக்கும் போது எதேச்சையாக மேலே பார்த்தேன் ஒரு பெரிய Space Ship மாதிரி ஒன்றை பார்த்தேன் என்றார்.எனக்கு தூக்கிவாரி போட்டது.

மேலும் தொடர்ந்தார்.

சரி நமக்கு தான் ஏதோ என்று கண்ணை கசக்கிவிட்டு தலையை தடவிக்கொண்டு திரும்ப மேலே பார்த்தேன் ஒன்றுமே இல்லை என்றார்.இந்த விபரங்களை வைத்து சன் டிவிக்கா விபரம் கொடுக்க முடியும்.என் மனைவி Space Ship பார்த்ததாக எனக்குத்தான் சொல்லமுடியுமே தவிர வேறு பிரயோஜனம் இல்லை அதுவும் 4 வருடங்களுக்கு முன்பு.

அது ஒரு புறம் மறந்து போய் கிடக்க,சுமார் 6 மாதங்களுக்கு முன்பு நானும் மனைவியும் மாடியில் அதே சமயம்(9.30 மணி) எதிரும் புதிருமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.நான் கோயம்பேடு பேருந்து நிலையத்தை நோக்கி என்றால் அவள் மீனம்பாக்கத்தை நோக்கி.திடிரென்று ஒரு ஒளி Trapezoidal Shape யில் சிறிய அளவில கட்டிட ஓரமாக மேலெழும்பி போனது.இப்போதெல்லாம் சில நேரம் கண்ணில் வெள்ளை ஒளி வந்து போவதால் அந்த மாதிரி இதுவும் போல என்று நான் அவளிடம் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டேன்.பார்த்த சிறிது நேரத்தில் அவள் என்னிடம் கேட்டாள் நான் அந்த ஒளியை பார்த்தேனா? என்று.சரி ஏதோ நடக்குது என்று மட்டும் புரிந்தது.இந்த மாதிரி சிறிய ஒளி நகர்ந்து போவதை பார்ப்பது எனக்கு முதன் முறை அல்ல.அந்த முதல் முறை எப்போது என்று தெரிஞ்சுக்கனுமா?பதிவு பெரிசாயிடுமோ!!

பம்பாய் ஆமாம் அப்போது பம்பாய் தான். எனக்கு 30 வயதுக்கு மேல் இருக்கும்.அப்போது அங்கிருந்த மாமா வீட்டுக்கு ஒரு 3 நாள் விடுமுறைக்காக போயிருந்தேன்.மாமா வேலைக்கு கிளம்பும் முன் மணியடித்து பூஜை புணஸ்காரங்கள் முடித்து தான் அலுவலகம் போவார் அதனால் முன்னமே எழுந்து அதற்கான வேலையில் ஈடுபடுவார்.நான் அவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன வேலைக்கா போகப்போகிறேன் என்ற நினைப்பில் ஹாலில் தூங்கிக்கொண்டிருந்தேன்.மணி ஓசை கொஞ்சம் அதிகமானதும் இதற்கு மேல் வழியில் தூங்குவது நன்றாக இருக்காது என்று நினைத்து படுக்கையிலேயே உட்கார்ந்து கண்ணை விழிக்கலாமா வேண்டாமா என்ற யோஜனையுடன் இருந்தேன்.அப்போது ஒரு வெள்ளை நிற ஒளி வீட்டின் உள் இருந்து அப்படியே ஹாலை கடந்து வெளியில் போனது தெரிந்தது.ஆச்சரியமாக இருந்தாலும் யாரிடமும் அதைப்பற்றி கேட்கவில்லை.ஏதோ ஒன்று நம் அறிவிக்கு புலப்படாதது இருக்கிறது என்று தெரிந்தது.

இப்படிப்பட்ட எண்ணங்கள் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்குமோ என்னவோ,இரண்டு நாட்களுக்கு முன்பு அலுவலக கணினியில் Google Earth யில் மேய்ந்துகொண்டிருக்கும் போது 22" மானிடரில் பளிச் என்று ஒன்று வித்தியாசமாக தெரிந்தது.நீங்களே பாருங்கள்.

வெளிக்கிரக மக்களை அழைக்க அல்லது அவர்கள் கவனத்தை கவர பல்வேறு கட்டிடங்களை கட்டினார்கள் என்ற பேச்சு இருக்கும் நிலையில் வித்தியாசமான அமைப்பில் இருக்கும் கட்டிடங்கள் அவர்களை கவர்கிறதா?இதன் பின்னனி என்ன?வெளிகிரகத்தில் இருப்பவர்கள் இங்கு வருகிறார்களா? ஏன் காலையில் வருவதில்லை(பெரும்பாலும்)?

உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை முழுவதுமாக ஏன் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்ற கேள்விகள் எழாமல் இல்லை.

இது கொஞ்சம் தூரத்தில் இருந்து...



கொஞ்சம் அருகில் கட்டம் கட்டி காண்பித்திருக்கேன்.ஏதாவது வித்தியாசமாக இருக்கா?



கையை அசைப்பது போல் ஒரு உருவம்...



படத்தின் மீது சொடுக்கி பாருங்கள்.

என்ன விஜய் தொலைக்காட்சியில் வரும் "நடந்தது என்ன?" மாதிரி இருக்கா?

Friday, December 11, 2009

சற்று முன்...

மஸகட் வந்த புதிதில் இங்குள்ள பொது ஜன அதிகாரியிடம் ”இங்கு எப்போது மழை பெய்யும்?” என்றேன்.அதெல்லாம் சொல்ல முடியாது 3 அல்லது 4 வருடங்களாக மழை பெய்யாமல் கூட இருக்கும் என்றார்.

இன்று மாலை வீட்டை விட்டு வண்டியில் வெளியே போகும் போதே மழை வரக்கூடிய அறிகுறியாக கருப்பு மேகங்கள் சூழ்ந்திருந்தன ஆனால் நாங்கள் வீட்டுக்கு வரும் வரை மழை பெய்யவில்லை.

இரவு சாப்பாட்டுக்காக சப்பாத்தி போட்டுக்கொண்டிருக்கும் போது சொட்டு சொட்டு என்று தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.சரி குளிர்சாதன பெட்டியில் இருந்து தான் தண்ணீர் சொட்டுகிறது போலும் என்று நினைத்துக்கொண்டு வேலையை பார்த்தேன்.சுமார் 5 நிமிடங்களுக்கு மேலாக அதுவும் சத்தம் அதிகமாக கேட்ட போது தெரிந்தது வெளியில் மழை பெய்துகொண்டிருப்பது.நம்மூரில் மழை வருவதற்கு முன்பு கொஞ்சம் வெக்கையாக இருக்கும் அல்லது குளிர்ந்த காற்று அடிக்கும் இங்கு அப்படி எந்த அறிகுறியும் இல்லாமல் ஒரு 20 நிமிடத்துக்கு மழை பெய்தது.

Thursday, December 10, 2009

கோணல் ஆனாலும் என்னுடையது.

போன வாரம் கடற்கரை சாலையை நோக்கி நடந்து போய் கொண்டிருக்கும் போது Wadi என்று சொல்லக்கூடிய கடல் தண்ணீர் உள்வாங்கும் இடத்தில் சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள் அவர்களின் ஒருவருடைய தூண்டிலை பார்த்ததும் நம்மூர் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் வருமே அது தான் ஞாபகம் வந்தது.



பெரிதாக்கி பார்க்க படத்தின் மீது சொடுக்குங்கள்.

மேலும் சில மஸ்கட் படங்கள்.

நடப்பதே அரிதாகி வரும் இவ்வேலையில் சாப்பாடு முடிந்து மிச்சம் இருக்கும் நேரத்தில் அப்படியே காலாற நடந்து கண்ணில் பட்ட சில இடங்களை அலை பேசியில் பிடித்தேன் அது உங்கள் பார்வைக்கு.





இச்சாலைகள் Madineet Qaboos என்ற இடத்தில் இருந்து மலை இருக்கும் பக்கத்தை நோக்கியது.

வெள்ளி காலையோ மாலையோ பக்கத்தில் உள்ள கடற்கரைக்கு நடந்து போவது என்பது பழக்கமாகியிருக்கு அப்படி போன வாரம் போனது எடுத்த படங்கள்.Low Tide என்பதால் கடல் நீரால் பாறையில் ஏற்பட்டிருக்கும் கறையை காணலாம்.சுமாராக 2 மீட்டர் உயரம் தண்ணீர் இறங்கியுள்ளது.






தண்ணீர் இறங்கிய இடங்களில் விளையாட்டு கனஜோரோக நடக்கிறது.

சகஜம்.

கட்டுமானத்துறையில் சில சமயம் விசித்திரமான நிகழ்வுகள் ஏற்படுவது சகஜம் ஏனென்றால் தொழிலாளர்கள் கல்வி குறைவாக இருப்பதும்,தொழில் பற்றிய அறிவு குறைவாக இருப்பதும் தான்.நான் வேலை செய்ய ஆரம்பிக்கும் நேரத்தில் எல்லாம் பெரிய Board மற்றும் சில உபகரணங்கள் மூலம் வரை படம் தயாரித்து அதை பிரதி எடுத்து அனுப்புவார்கள்.தவறுகள் நேராமல் மிக நேரம் எடுத்து ஒவ்வொரு வரைப்படமும் செய்வார்கள்.வரை படத்தின் ஒரு பகுதி தவறானாலும் அப்படி தூக்கி கடாசிவிட்டு மறுபடியும் புதிதாக வரைய வேண்டும் என்பதால் வெகு சிரத்தையாக செய்வார்கள்.இப்போது வரைகலைக்கு என்றே மென்பொருட்கள் வந்துவிட்டதால் வரைவதும் எளிதாகி மாறுபாடுகள் செய்வதும் வெகு சுலபமாகிவிட்டது.



என்ன தான் எளிதாக வரைய முடியும்,பிரிண்ட் எடுக்க முடியும் என்றாலும் Site வேலை செய்பவர்கள் அந்த வரை படத்தை பார்த்து அதில் சொல்லியிருப்பது போல் செய்வது அதை மேற்பார்வை செய்பவரும் மற்றும் குத்தகைக்காரர்/அவருடைய தொழிலாளர்கள் கையில் தான் உள்ளது.கீழே உள்ள படத்தை பாருங்கள்.




ஆதாவது ஒரு வரைபடம் வரைந்து அதை மேம்படுத்தும் போது எந்த இடத்தை மேம்படுத்துகிறோம் என்பதை படம் வரைபவர்கள் மேகம் போல குறியிட்டு காண்பிப்பார்கள்.இங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை,முன்னறிவு இல்லாத தொழிலாளி அந்த இடத்தில் அதே மாதிரி ஓட்டை வரவேண்டும் நிறைய முயற்சி எடுத்து இப்படி ஓட்டை போட்டுள்ளார்.இது ஒரு நகைச்சுவைக்காகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் நடக்காது என்று சொல்லமுடியாது.

Thursday, December 03, 2009

மாறுகிறது பொது வினியோக முறை.

ஊருக்கு வரும் போதெல்லாம் ரேஷன் என்று சொல்லப்படுகிற பொது வினியோக முறை கடைக்கு போகும் படி நேர்ந்துவிடுகிறது.பக்கத்து வீடு/மாமா வீட்டுக்கு சாமான் வாங்க போவதுண்டு.போன முறை போன போது ஒரே ஊழியர் பில் போடுவதும் அவரே சாமான்களை எடை போடுவதை பார்த்த போது கஷ்டமாக இருந்தது.அவரைப் பாராட்டி அவரின் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் செய்தேன்,வழக்கம் போல் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.படித்தார்களா இல்லையா எனபதை கூட தெரிவிக்கவில்லை.



இந்த முறை போன போது வேறு ஊழியர் மாறியிருந்தார்.கடையில் கூட்டமில்லாத்தால் எனக்கு அவ்வளவு நேரமாகவில்லை ஆனாலும் சாமான்கள் வழங்குபவர் பக்கத்து கடையில் இருந்து வரவேண்டும் என்பதால் சிறிது நேரம் காத்திருக்கவேண்டியிருந்தது.முதலில் எல்லாம் நம் அட்டையை பார்த்து அதை ஒரு ரிஸ்டரில் எழுதி பிறகு பில் புக்கில் எழுதி அந்த ரசீதை நமக்கு கொடுப்பார்கள் ஆனால் இம்முறை அடக்கமான ஒரு கருவி அதனுடன் கூடிய பிரிண்டர் என்று நம்முடைய தகவலை அதனுள் இட்டு பில்லை அதுவே அச்சிட்டு கொடுக்கிறார்கள்.இந்த கருவியின் மூலம் அவர்களின் மேஜை சற்று மேம்பட்டு காணப்படுகிறது.அங்கிருந்தவரிடம் என்னுடைய சந்தேகங்களை கேட்ட போது..

கரண்டு போச்சுன்னா? எல்லாமே நின்றுவிடுமா?

இல்லை இதனுடன் வரும் மின்கலம் 1 மணி நேரத்துக்கு தாக்குபிடிக்கும் அதுவரை பிரச்சனையில்லை என்றார்.

அதற்கு பிறகு?? தடையில்லா மின்சாரம் கிடைக்காத வரை பிரச்சனை தான்.

இந்த கருவி மூலம் கிடைக்கும் பில் கிழிப்பதற்கு தனி திறமை வேண்டும் என்று நினைக்கிறேன் அதோடு இரு பில்களுக்கு நடுவில் இருக்கும் கார்பன் பேப்பர் இன்னும் தேவையா! என்று நினைக்கத்தோனுகிறது.இந்த மாற்றங்கள் வருவதற்கு இத்தனை வருடங்களாகிவிட்டது இதன் நீட்சிகள் மற்ற குறைகளை போக்கும் என்று நம்புவோமாக.

Tuesday, December 01, 2009

திரிசூலம்

கையில் அதிக பொருட்கள் இல்லை அதோடு போகும் வீடும் ரயில்வே ஸ்டேசன் பக்கத்தில் இருக்கு என்ற பட்சத்தில் விமானத்தில் வரும் போது சாலையை பாதுகாப்பாக கடந்து ரயிலை பிடிக்க அரசாங்கத்தின் முயற்சியில் ஒரு சப்வே இருக்கு என்ற விபரம் தெரிந்திருந்தாலும் பல முறை அதை உபயோகப்படுத்த முடியாமல் போலிருந்தது.இந்த முறை இரண்டு கைகளுக்குள் அடங்கும் சாமான்கள் இருந்ததால் அவ்வழியை முயற்சிக்கலாம் என்று விமானத்தை விட்டு இறங்கும் போதே முடிவு செய்திருந்தேன்.

மாலை 3 மணிக்கு இறங்க வேண்டிய விமானம் சென்னை எல்லையை தொடும் வரை சரியான நேரத்துக்கு தான் வந்துகொண்டிருந்தது.விமானி முதல் சிப்பந்திகள் வரை தரையிறங்க வேண்டிய ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்கள்.இன்னும் 20 நிமிடங்கள் என்று இருக்கும் போது கணினி திறையை மூடிவிட்டார்கள்.ஜன்னல் ஓர சீட்டு என்பதால் வெளிப்புற அழகை பார்த்துக்கொண்டு வந்தேன்.அடிக்கடி விமானம் திரும்புவதை உணர்ந்த போது கீழிறிருக்கும் இடம் திரும்ப திரும்ப 4 முறை வந்தது.ஊருக்கு வெளியே இருக்கும் Toll Gate தெரிந்தது.சுமார் 40 நிமிடங்கள் சென்னைக்குள் நுழைய அனுமதிகிடைக்காமல் வெளியே சுற்றிக்கொண்டிருந்தோம்.சென்னை விமான நிலையம் மிக நெருக்கடியான நிலமையை நோக்கிப்போய்கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு அடையாளம்.ஒரு வழியாக ஒரு மணி நேர தாமதமாக 4.10 க்கு தரையிறங்கினோம்.

குடியேற்றம் மற்றும் Baggage கள் ஒரு வழியாக முடிந்து வெளியே வந்தவுடன் Under Pass ஐ நோக்கி நடந்தேன்.தள்ளு வண்டியை திரிசூலம் வரை கொண்டு வரும்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.பயணச்சீட்டு வாங்குவதற்கு படியேறி செல்ல வேண்டும்.சரியான அறிவிப்பு பலகை இல்லை. பிளாட்பார்ம் 2 மற்றும் 4 என்று போட்டிருக்கிறார்கள்.இந்த இரண்டு பிளாட்பார்ம்களில் என்ன வண்டி வரும் என்ற தகவல் பலகை இருந்தால் புதியவர்களுக்கு சௌகரியமாக இருக்கும்.பிளாட்பார்ம் நுழையும் பகுதி இடது பக்கம் படிகளும் மறு பகுதியில் சரிவான ஏறும்/இறங்கும் நடைபாதை உள்ளது.இது ஒரு வேளை உடல் ஊனமுற்றவர்களுக்காக இருக்கக்கூடும்,அப்படியிருந்தால் மோட்டார் உள்ள சக்கரவண்டி தான் சரிப்படும்.பொதுவாக உபயோகப்படும் வண்டிகள் இந்த Slope இல் உபயோகப்படுத்த முடியாது.கைப்பிடி மட்டும் தரையில் பிடிப்பு இருக்கும் மாதிரி இருந்தால் ஊனமுற்றோருக்கு உதவியாக இருக்கும்.இதன் பயண்பாடு சரியாக தெரியாததால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.

ரூபாய் 5 கோடி செலவில் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இப்பணி உள்ளூர் மக்களை மனதில் நிறுத்தி செய்யப்பட்டதாகவே தோனுகிறது.இந்த மாதிரி வடிவமைப்பு மற்றும் உபயோகத்தனமையை பார்க்கும் போது நாம் போக வேண்டிய தூரம் வெகு அதிகம் என்பது மட்டும் புலப்படுகிறது.