Saturday, May 30, 2009

சுஜாதாவுக்கு மரியாதை.

சுஜாதாவுக்கு உலகெங்கும் ரசிகர் இருப்பது ஒன்றும் பெரிதல்ல இருந்தாலும் சிங்கை நூலகம் இவரை பெருமைப்படுத்தும் விதமாக வருடா வருடம் நடைபெரும் “வாசிப்போம் நேசிப்போம்” என்ற நிகழ்வுக்காக கீழ்கண்ட புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

சிங்கையில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை மக்களிடையே பிரபலப்படுத்த ஒவ்வொரு வருடமும் பல நல்ல நிகழ்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை படிக்கவைக்கிறார்கள்.

குபுக் குபுக் என்ற சிரிப்பை வர வழைக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து போட்டுள்ளது.

Wednesday, May 27, 2009

கம்பி காட்டும் வருடி.

கட்டிடம் கட்டி 20 ~ 30 வருடங்கள் ஆகிவிட்டது அதில் ஒரு மாடியை இப்போது இருக்கும் பணியை மாற்றிவிட்டு வேறொரு பணிக்கு குத்தகை விட வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்? முதலில் புதிதாக குத்தகை எடுப்பவரை கூப்பிட்டு காண்பித்து விலையெல்லாம் பேசிட்டு பணத்தை வாங்கிட்டு போய்விடுவீர்கள்.குத்தகைக்கு எடுப்பவரும் பணம் கொடுத்தாச்சு இனி நம் வேலையை பார்ப்போம் என்று கொத்த வேண்டிய இடத்தில் உடைக்க ஆரம்பிப்பார்கள்.இது அத்தனையும் சாதாரணமாக நடைபெரும் நிகழ்ச்சிகள்.இதுவே ஒரு பெரிய நிறுவனத்தின் கட்டிடத்தில் மற்றொரு நிறுவனம் குத்தகைக்கு எடுக்குது என்றால் என்ன செய்வார்கள்? பார்போமா?

குத்தகைக்கு எடுப்பவருக்கு கட்டிட வயது முதலில் எச்சரிகை மணி அடிக்கும் அதனால் நாம் எடுக்கப்போகும் நிலையில் கட்டிடத்தின் தரத்தை சோதிப்பார்கள்.சிவில் வேலை செய்பவர்கள் கட்டிடத்தின் கான்கிரீட் அமைப்பை பார்த்தே இது எப்படி இருக்கும் என்று ஓரளவு கணித்துவிட முடியும் ஆனால் அதெல்லாம் இப்போது வேலைக்கு ஆகாது.கட்டிடத்தை சோதிக்கனும் என்றால் கான்கிரீட்டை சோதிக்கனும் என்பது அடிப்படை.கான்கிரீட்டை எப்படி சோதிப்பது?

அதற்கு பல முறைகள் இருக்கு.அதற்கு முன்பு கான்கிரீட் நிற்பதற்கு ஏதுவான கம்பி சரியாக இருக்கா என்று பார்க்கனும்.கானிகிரீட் உள்ளே உள்ள கம்பியை எப்படி சோதிப்பது?
10 வருடங்களுக்கு முன்பு என்றால் ஒரு சிறிய இடத்தை தேர்ந்தெடுத்து கான்கிரீட்டை உடைத்து அதில் இருக்கும் கம்பிகளை வைத்து முடிவு செய்வார்கள்.இப்படி செய்வது உடைந்த இடத்தை திரும்ப பூசும் போது அது மட்டும் தனியாக அசிங்கமாக தெரியும் அதோடிலில்லாமல் நாமாகவே கான்கிரீட் விரிவடைய ஒரு இடத்தை ஏற்படுத்திவிடுகிறோம்.

மேல் சொன்ன மாதிரியான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழியாக ஒரு புதிய முறையை சில நாட்களுக்கு முன்பு கண்டேன,அது உங்கள் பார்வைக்கு.

இந்த தொழிற்நுட்பத்துக்கு பெயர் “Ferroscan" இதை Hilti என்ற நிறுவனம் கண்டு பிடித்துள்ளது.இதில் அடங்கியுள்ள பொருட்கள் கீழே படத்துடன் கொடுத்துள்ளேன்.

1.நெகிழி பேபர்.



இந்த பேப்பர் மேல் தான் நாம் உபயோகப்படுத்தும் வருடி (Scanner) ஓடப்போகிறது.

2.வருடி



இந்த வருடி மூலம் நாம் கம்பி இருக்கும் இடம் அதன் அளவு போன்ற விபரங்களை பெற முடியும்.இதன் உள்ளே இருக்கும் தற்காலிக நினைவகம் 9 வருடல் வரை சேமிக்க முடியும் அதற்கு பிறகு வேறு நினைவகத்துக்கு மாற்றி விட்டு பணியை தொடரனும்.

3.Slab யின் அடிப்பக்கத்தை வருடுகிறார்.



இந்த வருடி அதன் நிலையில் இருந்து 100 மி.மீட்டர் வரை உள்ள பொருட்களை இனம் காணமுடியும்.

இது தரையில்...




அந்த வருடி(Scanner) மூலம் குறுக்கும் நெடுக்குமாக ஓட்டி அதனுள் இருக்கும் நினைவகத்தில் சேமித்துவைத்துக்கொள்ளும்.அதன் பிறகு கணினி மென்பொருள் மூலம் அதன் அளவு விபரங்களை கணித்து சொல்வார்கள்.

இதன் மூலம் கான்கிரீட் உள்ளே இருக்கும் கம்பிகளின் விபரத்தை அதை உடைக்காமலே கணிக்கமுடியும்.

வருடியில் இருந்து தற்காலிக நினைவகத்து ஏற்றம் காணுகிறது.



இதெல்லாம் சரி,விலை எவ்வளவு இருக்கும் என்று யோசிக்கிறீர்களா?

கொஞ்சம் தான்,சுமாராக 7 லட்சம்.

அடுத்த பதிவில் கான்கிரீட்டை எப்படி சோதிப்பது என்பதை சொல்கிறேன்.

Friday, May 22, 2009

துபாய் சாலையும் மாமாவும்.

துபாய் சாலை


நம்மூர் மாமாவைப் போல் இல்லாமல் இவர்கள் சீருடை கலர் வித்தியாசமாக இருக்கும் அதோடு கையில் ஒரு சின்ன புத்தகமும் எழுதுகோலும் வைத்திருப்பார்.சாலை விதிகளை மீறும் வாகனங்களை நோட்டமிட்டு அதன் என்னை தலமையகத்துக்கு அனுப்பிவிடுவார்.நிரூபிக்கனும் என்ற அவசியமெல்லாம் இல்லை போல் இருக்கு.

என்னென்ன மாற்றங்கள்??

சிங்கையை விட்டு 7 மாதங்கள் துபாயில் இருந்து விட்டு வந்த பிறகு தினமும் மாற்றங்களுடன் இருக்கும் சிங்கையின் சில மாற்றங்களை பார்க்கலாமா?

நான் இருக்கும் Yew Tee பக்கத்தில் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த NTUC கடை தொகுதி முற்றாக அழிக்கப்பட்டு அவ்விடத்தில் சாப்பாட்டுக்கடைகள் முளைத்திருந்தன அதில் சீன சைவ சாப்பாட்டுக்கென ஒரு கடையும் இருந்தது.

இதற்கு பக்கத்தில் கட்டுமானம் நடந்துகொண்டிருந்த கடைத்தொகுதியின் பல புதிய கடைகளும் கீழ்தளத்தில் NTUC கடை மாற்றத்துடன் கொஞ்சம் பெரிய இடத்தில் மாற்றம் கண்டிருந்தது.நான் இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் கட்டுமான வேலை நடந்துகொண்டிருந்த HDB வீடுகள் வானத்தை நோக்கி எழும்ப ஆரம்பித்துவிட்டது.



வந்தவுடன் முதலில் சந்தித்த கோவியாருடன் Yishun பகுதியிலும் நிறைய மாற்றங்களை காண் முடிந்தது, முக்கியமாக கோமலாஸ் சாப்பாட்டுக்கடை.ஒரு காலத்தில் சாப்பாடுக்காகவே கோமலாஸ் தேடி சிரங்கூன் சாலைக்கு செல்ல வேண்டியிருந்தது.

மாற்றம் ரயிலின் உள்ளேயும் தெரிந்தது.கீழே உள்ள மாதிரி ஒளிரும் அட்டைகள்.வரப்போகும் நிறுத்தம் மற்றும் திறக்கப்போகும் கதவுகளின் இடத்தையும் காண்பிக்கிறது.



ஏற்கனவே சிங்கையை ஒரு தோட்டமாக மாற்றிக்கொண்டு வந்தாலும் இருக்கிற பசுமை போதாது என்று நினைத்து இரு பெரிய மரங்களுக்கு நடுமே சிறிய செடிகளை வைக்க ஆரம்பித்துள்ளார்கள்.காலை & மாலை வேளிகளில் சாலை ஓரம் நடக்கும் போது பறவைகளின் சத்தம் ஏதோ காட்டுக்குள் நடப்பது போல் உணர்வை கொடுக்கிறது.



இப்போதைக்கு பெயர் தெரிய வைக்கும் கட்டுமானப்பகுதியில் இருக்கும் ஒரே கட்டிடம் மெரினா பே பகுதியில் கட்டப்படும் IR என்று சொல்லப்படுகிற சூதாட்ட விடுதி தான்.கான்கிரீட்டை தவிர்த்து ஸ்டிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டப்படுவது போல் தோற்றமளிக்கிறது.



மற்றொரு கவர்ச்சி

Tuesday, May 12, 2009

மாங்காய் ஆசை.

இப்போது தான் கொஞ்ச நாட்களாக சிங்கையில் மாம்பழம் கண்ணில் பட ஆரம்பித்துள்ளது.விலையென்னவோ அதே 10 வெள்ளி - 5 பழங்கள்.கூறு கட்டி வைத்து விற்கிறார்கள்.

நான் தினமும் வேலைக்கு நடந்து போகும் வழியில் இந்த மாமரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் மாங்காயை பார்த்த உடனே கை/கண் கல்லு இருக்கா என்று தேடுகிறது.இது வேறொன்றுமல்ல நாகையில் இருந்த போது பெருமாள் கோவில் மாமரத்தில் மாங்காய் அடித்து தின்ற நினைவு.அந்த நினைப்பு இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கு போல் இருக்கு.




இங்கு இதை அடித்து தின்றால் செமத்தியான Fine கட்டணும் அதற்கு பேசாம சிரங்கூன் சாலைக்கு போய் பழமாகவே சாப்பிட்டுவிடலாம். :-)

SQL பற்றி

இந்த SQL பற்றி போன வருடம் வரை எதுவுமே தெரியாது.சில வருடங்களுக்கு முன்பு நண்பர் மா.சிவக்குமாரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது Data Base பற்றி பேச்சு வந்தது,பேசி முடித்ததும் ஓரளவு தான் புரிந்த மாதிரி இருந்தது பிறகு அந்த நினைப்பும் போய்விட்டது.

போன வருடம் நம் பதிவர் தமிழ் நெஞ்சம் கொஞ்சம் விலாவாரியாக எழுதியதும் ஆர்வம் பிறந்து என் கணினியில் நிறுவி (கொஞ்சம் அவஸ்தைபட வேண்டியிருந்தது) முயன்று பார்த்தேன்.மென்பொருள் தயார் அதை முயன்று பார்த்ததில் என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தது அதை அப்படியே தொடரலாம் என்று பார்த்தால் என்னிடம் அவ்வளவாக Data இல்லாதது புரிந்தது.இது நிறுவனங்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும் போல் இருக்கு.

சிங்கை வந்த பிறகு நூலகம் போகும் பழக்கம் தொடருகிறது அப்படி இருக்கும் நேரத்தில் ஞாயிறு Choa Chu Kang நூலகம் போயிருந்தேன்.புது இடத்தில் நிறைய வசதிகளுடன் இருந்தது.நுழைவாயிலிலேயே புது வரவுகள் என்று போட்டு கீழ்கண்ட புத்தகம் கண்ணில் பட்டது.ஏற்கனவே அனுபவம் இருந்ததால் புரிவதில் கஷ்டம் இல்லாமல் இருந்தது.மிகவும் எளிமையாக கொடுத்துள்ளார் ஆசிரியர்.



இந்த ஆசிரியர் எங்கோ கேட்ட மாதிரி இருக்கே என்ற எண்ணத்துடன் பழைய படங்களை துழாவிக்கொண்டு இருந்த போது சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு இப்படி ஒரு புத்தகம் படித்தது ஞாபகம் வந்தது.



மேற்கண்ட நூலில் பேசிக்கை மிக அழகாக புரியும்படி சொல்லியிருப்பார்.புதியவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Sunday, May 10, 2009

மழைக்கு முன்னும் பின்னும்.

துபாயில் மழை என்பதுசில வருடங்களாகவே ஆச்சரியங்களில் இருந்து மாறு பட்டு இன்னும் கொஞ்ச வருடங்களில் மழைக்காலம் என்று சொல்லும்படி ஆகிவிடும் போல் இருக்கு.கால நிலை உலகளவில் மாறுதல் கண்டுவருவதின் அறிகுறி போலும்.இதனால் கட்டுமானத்துறைக்கு சாதகமே.இதன் தொடர்பில் அடிப்படை வேலைகளை செய்ய பல குத்தகைகளை அரசாங்கம் கொடுக்கவேண்டி வரும்.

இப்போதோ அப்போதோ என்று மழைக்காக காத்திருக்கும் வேளையில்..




மழை பெய்து ஓய்ந்திருக்கும் வேளையில்.



வெய்யில் என் மண்டையை பிளக்கவைப்பதற்கு முன்பு ஓடிவந்துவிட்டாலும் விட்டுப்போன சில படங்களுக்காக இப்பதிவு.

Saturday, May 09, 2009

இது ஏன் இப்படி?

துபாயில் இருந்த போது கண்ணில் படும் சில விஷயங்கள் “ஏன் இப்படி” என்று புரியாமல் இருக்கும்.அதில் முதல் வகை சாலையில் பாதசாரி கடக்கும் இடம்,அங்கு விளக்கும் & கருப்பு/வெள்ளை கோடுகளும் இருக்கும்.இன்னும் அந்த குழப்பம் போகாமல் சிங்கையில் நின்று நான் வாகனத்தை பார்க்க, ஓட்டுனர் என்னை பார்க்க ஒரே குழப்பம் தான்.

அந்த வரிசையில் துபாயில் தினமும் நான் நடந்து போகும் பாதையில் இந்த விளம்பர பலகை.



நடப்பவர்கள் அவ்வளவு பேர் இல்லை என்பதால் நட்ட நடு பாதையில் விளம்பரத்துக்கான தூண் இருப்பதை யாரும் ஆட்சேபிக்கப்போவதில்லை.அந்த தூணினால் நமக்கு எதுவும் பிரச்சனையில்லை ஆனால் இப்படி வேலைசெய்தாலும் ஒத்துக்கொள்கிற அதிகாரிகள் இருக்கிறார்களே என்பது தான் ஆதங்கம்.பல இடங்களில் வேலை ஒருங்கிணைப்பு என்பது இல்லாதது போல் இருக்கு.

தூரத்தில் இருந்து பார்க்கும் போது விளம்பர பலகையில் எந்த பிரச்சனையும் தெரியாது,அப்படியே அதன் கால் பக்கம் பாருங்கள் (படம் 2).தூணை தாங்கியிருக்கும் Plate ம் அந்த Frame ம் நேர் கோட்டில் இல்லாமல் ஒரு பக்கம் ஒதுங்கி இருக்கும்.இது எத்தனை நாட்களாக இருக்கு.கொஞ்சம் மாற்றி கேட்கணும்....எத்தனை மாதங்களாக என்று.இதற்கிடையில் மின்சார இணைப்புக்கு தேவையான ஒயர் வேறு எங்கிருந்தோ வருகிறது.



இப்படி இருப்பது பிரச்சனையா? இல்லை/ஆம் என்று இருவகை பதில் கிடைக்கலாம்.

பணம் போட்டு இந்த வேலையை செய்யச்சொன்னவர் பார்த்தால் இந்த Plate இப்படி வெளியே நீட்டிக்கொண்டு அசிங்கமாக இருக்கு என்று கேட்கலாம் அல்லது நடந்து போகிறவர் காலை பதம் பார்த்து அவர் இவர்கள் மீது வழக்கு போடலாம்.ஆக மொத்ததில் பணிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் வேலை செய்தால் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மணல் வெளி

துபாயில் வேலையில் இருந்த போது கொஞ்ச நாள் வேலைப்பளு குறைவாக இருப்பதை பார்த்த ’தலை’ மற்றொரு பிராஜக்டில் வேலை நடந்துகொண்டிருக்கிறது அதை ஓரடி போய் பார்த்துவிட்டு வா என்றார்.மகிழுந்து கொடுக்கிறார்,ஓட்டுனர் கொடுக்கிறார் அலுவலகத்தில் உட்கார்ந்து வெட்டிப்பொழுது போக்காமல் இப்படி எங்காவது போய் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோனியதால் ’தலை’க்கு மறுப்பு சொல்லாமல் கிளம்பிவிட்டேன்.



அலுவலகத்தில் இருந்து சுமார் 35 கி.மீட்டர் (இங்கு இதெல்லாம் ஒரு தூரமா?) கிளம்பினோம்.ஓட்டுனர் பாக்கிஸ்தானி.கிரிக்கெட் முதல் தீவிரவாதம் வரை பேசிக்கொண்டு சென்றோம்.இப்போது நாங்கள் போகும் இடத்திற்கு இதற்கு முன் ஒரே ஒரு தடவை மட்டுமே போயிருப்பதாகவும் எப்படியும் போய்விடலாம் என்று நம்பிக்கை கொடுத்தார்.பாக்கிஸ்தான் இப்போது இருக்கும் நிலமைக்கு அங்கு தலைவிரித்தாடும் லஞ்சமே காரணம் என்று சொன்னார்.அவர் இருக்கும் வீடு ஒரு அரபிக்கு சொந்தம் என்றும் அறைக்கு வாடகை ஏதும் கொடுக்கவேண்டாம் என்று அவர்கள் சொல்லிவிட்டதாகவும் சொன்னார்.எப்போதாவது அவர்களை வெளியில் அழைத்துக்கொண்டு போவது மற்ற சின்னச்சின்ன வேலைகளை செய்து அவர்களிடம் நல்ல பெயர் வாங்கி தங்கும் இட பிரச்சனை வராமல் இருக்கிறார்.

அலுவலகத்தில் இருந்து கிளம்பி விமான நிலைய சாலை வழியே போய் நேராக ஒரு பெரிய கோட்டை மாதிரி உள்ள வீடு வரை போய் அங்கிருந்து வளைந்து வளைந்து போய் கொண்டிருந்தார்.அதற்கு முன் தன்னிடம் GPS இருக்கிறது என்றும் அதில் முதல் தடவை போனதும் Favorites இல் போட்டு வைத்திருப்பதாகவும் சொன்னார்.இரண்டு பக்கமும் மணம் மேடுகள் அதில் சிலவற்றில் 4 வீல் வாகனங்கள் மணல் மீது ஏறி சாலையில்லாமலே எங்கோ போய்கொண்டிருந்தார்கள்.அவ்வப்போது இப்படி செல்லவேண்டியிருப்பதால் என்னவோ அங்கு பலரிடம் இவ்வகை வாகனங்களை பார்க்கமுடிகிறது.

நான் GPS பார்த்துக்கொண்டு இருக்க ஓட்டுனர் வழியை தவறவிட்டிருந்தார்.நாங்கள் இருக்கும் இடமும் நாங்கள் போகவேண்டிய இடமும் பக்கத்தில் காண்பித்தாலும் மணல் மேடுகள் நாங்கள் போகவேண்டிய இடத்தை சரியாக காட்டவில்லை.சாலைகள் இல்லாத்தால் வழியும் தெரியவில்லை.வண்டியை திரும்பவும் வந்த வழியே கொண்டு போய் சாலை y யாக பிரியும் இடத்தில் மற்றொரு சாலை எடுத்து போனோம். நல்ல வேளை சரியான வழிக்கு வந்து இடத்தை கண்டு பிடித்தோம்.முதலில் அந்த ஓட்டுனர் வந்த போது இருந்த ஒரு வழிகாட்டி பலகை கீழே விழுந்திருந்தால் சரியான பாதையை தவறவிட்டதாக சொன்னார்.






போன இடத்தில் இப்போது தான் வேலைக்கு தேவையான வேலைகளை செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வரும் வழியில் ஒரு அராபி மாது வாட்டர் மிலான் விற்றுக்கொண்டிருப்பதை பார்த்து,சுமாரான அளவில் ஒன்று வாங்கிவந்தோம்.



இன்னும் சூரியன் தன் கிரணங்களை மண் மீது காட்டாமல் இருந்ததால் தப்பித்தோம் இல்லாவிட்டால் 10 நிமிடம் கூட நிற்கமுடியாது.

Friday, May 01, 2009

பாலைவன ஒட்டகம்.

நம்முர் மாதிரி நகரவாசிகளுக்கு ஒட்டகத்தை பார்க்கனும் என்றால் மிருககாட்சி சாலைக்கு தான் போகனும் ஆனால் அமீரகத்தில் உள்ளவர்கள் மகிழுந்தை எடுத்து ஒரு பத்து கி.மீட்டர் வெளியே போனால் பார்த்து மகிழலாம்.

சில சாலைகளில் இதன் மீது அக்கறை கொண்டு வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கையாக ஓட்டவேண்டும் என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளார்கள்.

நகரத்து வெளிப்புரங்களில் சாலையின் இருமருங்கிலும் சிறிய வேலி போட்டு அவை சாலை பக்கம் வந்துவிடாமல் இருக்க போட்டு வைத்துள்ளார்கள்.ஒட்டக பால் பாட்டிலில் கிடைக்கும் அளவுக்கு உற்பத்தி செய்கிறார்கள்.குட்டி அதிகமாக குடித்துவிடாமல் இருக்க மறைப்பு போட்டுவிடுவதாக எங்கள் ஓட்டுனர் சொன்னார்.

சமீபத்தில் பிரதி எடுக்கும் முறையில் ஒட்டகத்தையும் எடுத்துள்ளார்களாம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு எங்கள் வேலை நடக்கும் இடத்துக்கு ஒரு வேலையாக அனுப்பிய போது வழியில் தென்பட்ட ஒட்டகங்கள் படம் கீழே.



கண்ணை ஏமாற்றும் விளம்பரம்.

சில வாரங்களுக்கு முன்பு Mall of Emirates போயிருந்த போது ஒரு நியுசிலாந்து கடை (என்று நினைக்கிறேன்) யின் விளம்பரம் பழைய காலத்தில் ஒரு அட்டையில் இரு உருவங்களை கொண்டுவந்த தொழிற்நுட்பத்தை ஞாபகப்படுத்தியது.

LCD திரையை மட்டும் பாருங்கள்.அழகான மலையும் நதியும் கோட்டையாக மாறுகிறது.நடந்துகொண்டே எடுத்தேன்.



சிங்கை வந்துவிட்டாலும் துபாய் பற்றிய மேலும் சில பதிவுகள் அவ்வப்போது வரும்,குழப்பம் வேண்டாம்.