Monday, January 16, 2012

தரமான கட்டுமானம்- ஸ்ரீராம் சங்கரி

சில வருடங்களாகவே ஒரு வீடு என் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி தேடிக்கொண்டிருக்கிறேன், இது வரை சரியாக அமையவில்லை.வளசரவாக்கம்/வடபழநி/விருகம்பாகம் வீடுகள் சுமார் 6000 முதல் 8000 வரை ஒரு சதுர அடிக்கு கேட்கிறார்கள்.லோக்கல் வீடு கட்டுபவர்கள் செய்யும் வேலை பார்த்து அவர்கள் பக்கம் போவதையே நிறுத்திவிட்டேன்.வீட்டு இடத்துக்குள் இருக்கும் ஆக்கிரமிப்பை தவிர்த்து வீட்டு முன்புறம் வண்டி ஏறுவதற்காக சாலையை ஆக்கிரமிப்பு பணியை நிறைவாகவே செய்கிறார்கள்.இதையெல்லாம் யாராவது கண்காணிக்கிறார்களா அல்லது தெரிந்தே விட்டுவிடுகிறார்களா என்று தெரியவில்லை.ஆக்கிரமிப்பு என்ற ஒரு வார்த்தையை வைத்தே ஒரு பெரிய வால்யூம் புக் போடலாம், அதுவும் சென்னையில்.

பின்புலம் இப்படி இருக்க, அடிக்கடி வானொலியில் இவர்களின் விளம்பரம் கேட்க கேட்க, சரி போய் பார்த்தால் என்ன என்ற முடிவு எடுத்து அதுவும் போன வாரம் தான் போக முடிந்தது.GST சாலையில் பல  துணை சாலைகள் இருந்தாலும் கூடுவாஞ்சேரியில் இருக்கும் சாலைக்கு பெயர் எதுவும் கண்ணில் படாததால் சிறிது திணறி பயணித்தோம். சுமார் 4 கி.மீட்டர் பயணிந்த பிறகு இவர்களின் கட்டுமான இடத்தை அடைந்தோம் . G+4 முறையில் அமைந்த 3 கட்டிடங்கள் கான்கிரீட் முடிந்த நிலையில் சுற்றுச்சுவர்கள் வேலை நடந்துவருகிறது.கட்டுமான இடத்திலேயே Batching Plant அமைத்து கான்கிரீட் போடுவதால் குறை எதுவும் கண்ணில் படாமல் அட்டகாசமாக இருந்தது.தாங்கும் தூண்கள் கூட நேர்த்தியாக வரிசையில் இருந்தது.இவ்வளவு நாள் பல கட்டுமான வேலைகளை பார்த்திருந்தாலும் இவர்களின் Finish மிக அருமையாக இருக்கிறது.கட்டுமான வேலைகளை இவர்கள் நேரடியாக மேற்கொள்ளாமல் ஒரு துணை நிறுவனத்திடம் கொடுத்துள்ளார்கள்.Middle East நிறுவனம் என்று சொன்னதாக ஞாபகம்.

அங்கிருந்த முகவர் எங்கள் விவரங்களை கேட்ட பிறகு மாதிரி வீட்டை காண்பிக்க அமைத்துப்போனார்.ஒரு ஏரிக்கு பக்கத்தில் இருந்ததால் எல்லோருக்கும் ஏற்படும் சந்தேகம் போல் எனக்கும் எழுந்தது. மழை காலத்தில் ஏரி தண்ணீர் எங்கு போகும் என்று கேட்டேன். சமீபத்தில் ”தானே” புயல் கொண்டு வந்து கட்டிய மழையில் இதன் விளைவு தெரிந்திருக்குமே என்று கேட்டேன். நிலம் மேட்டுப்பகுதியில் இருப்பதாலும் இதன் கீழ் பகுதியில் இன்னொரு ஏரி இருப்பதாலும் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்றார்கள்.

ஒரு Model House, 3 அறை வீடுக்குள் அழைத்துப்போனார்கள்.வெளிவெளிச்சம் நன்றாக நுழையும் அளவுக்கு வீடுகள் இருந்தன.வீட்டு விலையை கேட்ட போது,சதுர அடிக்கு 2150 ரூபாய் என்றும் மற்ற செலவுகளை கூட்டினால் 2500 வரும் என்று சொன்னார்.கூடவே கிளப் ஹவுசும் நீச்சல் குளமும் வரப்போவதாகவும் பிற்காலத்தில் நல்ல தங்கும் இடமாகவும் விளங்கும் என்ற விளக்கமும் சொல்லப்பட்டது.தற்போதைக்கு பள்ளிக்கூடமும்,மருத்துவனையும் பக்கத்தில் இல்லை.மக்கள் அதிகம் வந்தால் இவையெல்லாம் தன்னால் வந்துவிடும் என்று நம்பலாம்.இப்போதைக்கு முதல் Phase ஐ வரும் ஜூன் மாதம் முடியப்போவதாகவும் அடுத்த Phase இரண்டு வருடம் ஆகும் என்றார்கள்.மற்ற விவரங்களுக்கு இங்கு போய் பாருங்கள்.

புது வீடுக்காக 95% விழுக்காடு பணத்தை கட்டிய பிறகும் கடைசி 5% பணத்தை மட்டும் விட்டு வைத்துவிட்டு வீட்டை Handing Over பண்ண வருடக்கணக்காகும் நிலை போய், வீட்டை கட்ட கட்ட நம்மிடம் பணம் கறக்கும் காலமும் போய் கட்டியவீடுகள் பணம் கட்டிய உடன் கிடைக்கும் வீடுகள் சந்தையில் வர ஆரம்பித்திருப்பது இப்போது தான். இது கட்டுமானத்துறையின் வீழ்ச்சி என்றாலும் மற்ற நகரங்களை விட சென்னையில் வீடுகள் விற்பனை ஆகாவிட்டாலும் விலையை மட்டும் யாரோ தாங்கிப்பிடிக்கிறார்கள்.


கூடுவாஞ்சேரி பக்கத்தில்  இருக்க ஆசைப்படுபவர்கள் இந்த கட்டுமானத்தொகுதியை நேரில் பார்த்து முடிவு செய்யலாம்.

பின்குறிப்பு: நான் இவர்களுக்கு முகவர் அல்ல, அவரவர் தேவையை கருத்தில் கொண்டு முடிவு செய்துகொள்ளவும்.

Monday, January 09, 2012

வேடந்தாங்கல்

என்ன தான் சென்னைக்கு பக்க்கத்தில் இருந்தாலும் இவ்விடத்துக்கு போக நேற்று தான் நேரம் வாய்த்தது.கோயம்பேடில் இருந்து பெங்களூர் நெடுங்சாலையை பிடித்து மதுரவாயல் மேம்பாலம் அருகில் இருக்கும் துணை சாலையை பிடித்தால் சென்னை மேம்பால விரைவுச்சாலை வரும் இதன் மூலம் பெருங்களத்தூரை வெறும் 35 நிமிடத்தில் சென்றடையலாம்.
பெருங்களத்தூரில் இருந்து செங்கல்பட்டுவரை பலவேறு தடைகளை கடந்தால் அதன் பிறகு வெள்ளோட்டம் தான். மாமண்டூர் தாண்டியபிறகு வலது பக்கத்தில் உத்திரமேரூர் சாலை பிரிவு வரும் அதனையும் தாண்டினால் வேடந்தாங்கல் செல்லும் சாலை வலது பக்கத்தில் பிரியும் அச்சாலையில் சென்றால் 12 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் பறவைகளின் சரணாலயம். சில இடங்களில் சாலை மேசமாக இருந்தாலும் மிதமான வேகத்தில் சென்றால் அவ்வளவாக பிரச்சனையில்லை. இங்கு போகும் வழியில் திருவையாவூர் என்ற புண்ணியஸ்தலம் மலைமேல் உள்ளது. மகிழுந்தை கோவில் வரை மேலே ஓட்டிச்செல்லலாம்.
வேடந்தாங்கல் ஒரு சிறு ஏரி போல் உள்ள இடத்தில் நிறைய மரங்கள் தண்ணீருக்கு மத்தியில் உள்ளது.பருந்து பார்வை பார்க்க உயரமான கோபுரம் ஒன்றும் வேறு சில பிளாட்ஃர்ம்கள் உள்ளன.என்ன தான் வெறும் கண்ணால் பார்க்கமுடிந்தாலும் பைனாகுலர் மூலம் பார்க்கும் போது இன்னும் நெருக்கமாக பார்க்கமுடிகிறது.

அங்கு எடுத்த சில படங்கள் கீழே. Zoom பண்ணிபார்க்க அதன் மீது சொடுக்குங்கள்.






கோயம்பேடுவில் இருந்து சுமார் 80 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது வேடந்தாங்கல்.