Sunday, December 26, 2010

விளக்கில்லா விமான நிலையம்.

கடந்த 21ம் தேதி வேலை விஷயமாக பெங்களூரு வழியாக கோவா செல்லவேண்டியிருந்தது. தலையும் நானும் ஒரே விமானத்தில் பயணம் செய்தாலும் கூடிய வரை அவர் கண்ணில் படாமல் இருக்கவே முயற்சித்தேன், காரணம் பயமில்லை தேவையில்லாமல் பேசவேண்டிவ்ருமே என்பது தான்.
சென்னையில் இருந்து 50 நிமிடங்களில் பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது ஜெட் ஏர்வேய்ஸ்.புது விமான நிலையம் வெளிப்பார்வைக்கு ஓடு பாதையில் இருந்து அவ்வளவு வசீகரமாக இல்லை ஆனால் உள்ளே நுழைந்ததும் சர்வதேச தரத்துக்கு இழைத்து வைத்திருக்கிறார்கள் மிக முக்கியமாக வழுக்கும் தரையில்லை.மின்சாரத்தை சேமிக்கும் விதமாக North Light முறையில் அமைக்கப்பட்டிருக்கும் உயர் ஜன்னல் மூலம் நிலையத்துக்கு தேவையான வெளிச்சம் உள் வரும் வகையில் அமைத்திருக்கிறார்கள்.நான் இருக்கும் வரை ஒரு விளக்கு கூட எரியவில்லை அதனல் எவ்வித குறைபாடும் தெரியவில்லை.



இவ்வேலை L&T- ECC நிறுவனம் செய்ததாக என் தலைவர் சொன்னார்.Folded Plate என்னும் முறைப்படி அமைத்திருப்பதாகவும் சொன்னார்.தரமும் நன்றாகவே இருந்தது. என்ன தான் அத்தனை வேலைகளையும் அருமையாக செய்திருந்தாலும் மழை நீர் செல்லும் குழாயை வெளியே தெரியும் படி செய்து ஒரு திருஷ்டி வைத்திருக்கிறார்கள்.இத்தனை வேலை செய்து அதை எப்படி கடைசியில் இப்படி வைத்துவிட மனது வந்தது என்று தெரியவில்லை.



மரக்கறி உணவு கிடைக்கும் இடம் நன்றாக இருந்தாலும் மிச்சம் மீதி இருக்கும் உணவுகளை சாப்பிட சென்னையில் இருந்து காலி செய்துவிட்டு போன சிட்டுக்குருவிகள் அவ்விடத்தை இருப்பிடமாக மாற்றிக்கொண்டுவிட்டன. செல்போன் டவரினால் குருவி காணாமல் போகும் என்ற கொஞ்ச நாளுக்கும் முன்பு வந்த தியரி இங்கு அடிப்பட்டு போகிறதே??

Monday, November 29, 2010

இது சாயுமா?

நேற்று போரூர் பக்கம் போய்விட்டு அப்படியே மனப்பாக்கம் வழியே கட்டுமான பொருட்காட்சி பார்க்க போகலாம் என்று விரைவுச்சாலை உபயோகித்துக்கொண்டிருந்தேன்.



தவறுகளை கண்டுபிடித்தே கண்களுக்கு பழக்கமாகிப்போனதால் இக்கட்டிடம் நின்ற நிலை தடாலடியாக நிற்கவைத்து அப்படியே புகைப்படம் எடுக்க வைத்தது.இப்பதிவை போடுவதற்கு முன்பு ஒரு சந்தேகம்,என்னுடைய கணிப்பு சரியா? போடலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு படத்தை Zoom செய்த போது ஒரு பக்கம் மட்டும் தண்ணீர் வழிந்து கறை உள்ளதை பார்த்தது இதுவும் பைசா கோபுரம் போல் சாய்ந்துகொண்டிருப்பது உறுதியானது. யாராவது தூக்கு குண்டு போட்டுப்பார்த்து தகுந்த அதிகாரிகளிடம் சொன்னால் பொது ஜனத்தை காப்பாற்றலாம்.

படத்தை Zoom செய்து பார்க்க அதன் மீது சொடுக்கவும்.

Sunday, November 28, 2010

சென்னை விமான நிலையம்.

விமான நிலையத்துக்கு போகிறவர்கள்/வருபவர்களுக்கு இக்கட்டுமானப்பணி கண்ணில் படாமல் தப்பிப்பது முடியாத காரியம்.இருக்கிற நிலயத்தை மேம்படுத்தும் பணிகளுடன் புதிய வரவேற்று மற்றும் புறப்படும் நிலையங்கள் புதுப்பொலிவு பெற வேலைகள் நடந்துவருகின்றன.இன்றைக்கு இருக்கும் இந்த நிலையை பார்க்கும் போது வேலை முடிய இன்னும் 1 வருட காலம் காத்திருக்க வேண்டும் போல் தோனுகிறது.இரு விமான முனையங்களை இணைக்கும் ஒரு பாலம் பணியும் நடந்துவருகிறது இதன் மூலம் மகிழுந்துகள் விமான நிலைய வாசலுக்கே வரமுடியும் போல் தோனுகிறது.
நேற்று அங்கு போக நேர்ந்த போது கண்ணில் பட்ட சில காட்சிகள் கீழே.

உள்நாட்டு முனையம்


வெளி நாட்டு முனையம்.



சாலை போன்று இணைக்கும் பாலத்தின் Beam ஐ தூக்கி பொருத்துகிறார்கள்.





படமெல்லாம் இருக்கட்டும்...எப்ப முடியும்? நான் கேட்கலை பையன் கேட்கிறான்.

Wednesday, November 17, 2010

அரசாங்க வருவாயை எப்படி பெருக்குவது?

மழை பெய்த பிறகும் தலைப்பில் உள்ள எண்ணம் மழை நீர் போல் பெருக்கெடுத்து அப்படியே ஓடிவிடாமல் நம்மூர் சாலை போல் அப்படியே தேக்கிவைத்துவிட்டது.
டாஸ்மார்க் மூலம் அரசாங்கத்துக்கு 12000 கோடிக்கு மேல் வருமானம் வருவதாக கூகிள் சொல்கிறார்.இவ்வளவு வருவாயை எந்த அரசாங்கமும் இப்போதும் எப்போதும் இழக்கப்போவதில்லை என்பது திண்ணம்.விருகம்பாக்கம் மார்க்கெட்டுக்கு பக்கத்தில் ஒரு நாளிரவு மழை பெய்து சுற்றிலும் தண்ணீர் இருக்கும் இடத்தில் சாலை நடுவே ஒரு பொது ஜனம் போதையில் சுற்றிலும் நடப்பது ஏதும் அறியாமல் உட்கார்ந்து இருந்தார்,வேகத்துடன் வரும் பைக் எப்போது வழிமோதப்படுவார் என்ற நிலையில் இருந்தார்.திறந்துவிட்ட தண்ணீரின் பாதிப்பு இது.இதே மாதிரி பல கதைகள் இந்தியாவை சுற்றி எல்லா இடத்திலும் நடக்கும் நடந்துகொண்டிருக்கும்.இப்படி திறந்துவிட்டு தான் அரசாங்கம் சம்பாதிக்க வேண்டுமா? தேவையே இல்லை என்பது என் கருத்து.
நான் பைக்கில் பிரயாணிக்கும் 9 கி.மீட்டர் தூரத்தில் நடக்கும் அத்தனை தவறுகளுக்கும் தண்டனை போட்டு அதே போல் பல இடங்களில் வசூலித்தால் போதும், டாஸ்மார்க் வருமானம் எல்லாம் ஜுஜூபி.

வீட்டில் இருந்து கிளம்புகிறேன்..போகும் வழி எதிர் திசையில் பயணிக்க வேண்டும் என்பதால் போக்குவரத்து விதியை மீறி அப்படியே சாலை கடக்கிறேன். போடு அபராதம் ரூபாய் 50.

போகும் போது நிறைய வாகனங்கள் இருந்தால் எதிர் திசையில் வரும் "வாகனத்துக்கான வழி" என்பதை கூட யோசிக்காமல் எதிர் வழியையும் அடைத்துக்கொண்டு ஓட்டி அவ்வழியையும் அடைத்துவிடுவேன். போடு அபராதம் ரூபாய் 50.

தேவையில்லாமல் பள்ளிகள்/மருத்துவனமனைகள் அருகே ஹாரனை உபயோகப்படுத்துவதால் போடு அபராதம் ரூபாய் 15. குறைந்த அளவு 10 முறையாவது இருக்கும் என்பதால் அதிலிருந்து 150 கிடைக்கும்.

திரும்பும் போதெல்லாம் ஒளிப்பான் மூலம் சமிக்கை செய்யாத்தாற்கு ரூபாய் 10 - 5 முறைக்கு 50 ரூபாய்.

சிக்னலை மதிக்காமல் செல்வதற்காக ரூபாய் 200.

இரவு நேரங்களில் ஒருவழிச்சாலை என்பதை மதித்து Full Headlight ஐ போட்டுக்கொண்டு வரும் நபர்களுக்காக ஒரு 100 ரூபாய் வைத்துக்கொள்ளவும்.

இடது /வலது புறம் Free Turn இல்லாத இடத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டியதற்கு ரூபாய் 200.

இப்படியே போய்கொண்டிருக்கலாம் ஆனால் போரடித்துவிடும் இதுவே ஒரு வழிக்கு 800 ரூபாய் ஆகிறது திருமப் வரும் போது கொஞ்சம் பட்டறிவு வரும் என்பதால் ரூபாய் 500 வைத்துக்கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு 800+500=1300 ரூபாய்க்கு மேல் டாஸ்மார்க்கில் செலவு செய்பவர்கள் என்றால் இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.

இப்படியெல்லாம் தண்டனை கொடுக்க கேமிராவுக்கு பதில் ஆட்களை வேலைக்கு அமர்த்தினால் வேலையில்லா பிரச்சனையை ஓரளவு சமாளிக்கலாம்.போட்ட உடனே கொடுத்துவிட நம் ஆட்கள் அவ்வளவு ஏமாந்தவர்களா என்ன? அதை வசூலிக்க ஒரு படையை அமர்த்தி வசூலித்த காசில் இருந்தே அவர்களுக்கு சம்பளம் கொடுக்க ஆரம்பித்தால் பல வேலைகளை உருவாக்க முடியும்
.
என்ன இந்த யோஜனை கிறுக்கு தனமாக இருக்கா? இல்லை என்றே எனக்கு தோனுது.எததனை நாட்களுக்கு இப்படி பலர் கட்டிக்கொண்டு இருப்பார்கள்.ஒரு முறை தண்டம் அழுதபிறகு ஜாக்கிரதையாக இருந்து தண்டனையில் இருந்து தப்பிக்கவே முயற்சிப்போம் அல்லவா?அப்போது இவ்வளவு வசூல் இருக்காதே அதற்கு என்ன பண்ணுவது?இதற்காக வேலையில் சேர்த்தவர்களை பிறகு என்ன செய்வது? கவலையே வேண்டும் தினமும் புது புது ஆட்கள் சாலையில் இறங்குகிறார்கள் அவர்களை கண்ணம் வைத்தாலே போதும்.ஆட்டோ இருக்கும் போது இந்த கவலையே வேண்டாம் வசூலிப்பவர்களுக்கு இவர்களுக்கு தான் அட்சயபாத்திரம்.

இதுவரை சொன்னது நாணயத்தின் ஒரு பக்கம், மறுபக்கத்தை பார்க்கலாமா?

இங்கு பைக்கில் இதுவரை 1100 கி.மீட்டருக்கு மேல் ஓட்டிய பிறகு எனக்கு ஒரு ஆசை வந்துள்ளது ஆதாவது நமது சாலைகளை நிர்வகிக்கும் அமைச்சரை முறையே சைக்கிள்,பைக் மற்றும் காரில் ஒரு முறையாவது எங்கள் சாலை வழியே அழைத்துச்செல்ல வேண்டும் என்று.நடத்தி அழைத்து போக முடியுமா என்று தெரியவில்லை ஏனென்றால் நடப்பவர்களுக்கு மரியாதையும் இல்லை அவர்களை நடக்கவும் விடுவதில்லை நாங்கள்.

நம் சாலைகளைப்பற்றி இதுவரை பலர் எழுதியுள்ளார்கள் அதிலும் ஜாக்கி சேகர் பதிவுகளில் சமூக அக்கறையுடன் மெலிதான கிண்டலும் இருக்கும்.

இவ்வளவு தவறுகள் செய்ய நாம் மட்டும் தான் காரணமா? கொஞ்சம் அலசலாமா?

முதல் காரணத்தில் "சாலையை குறுக்கே கடப்பது" - நான் இப்படி தவறாக நடக்கமாட்டேன் என்று சொல்லி வண்டியை போகும் பாதையில் விட்டு ஒரு U அடிக்க இடம் தேடினால் அது மற்றொரு சந்து முடியும் இடமாக இருக்கும் அதிலும் அவ்வளவு சுலபமாக அடிக்க முடியாது.எதிர்திசையில் வரும் வாகனங்கள் ஹாரன் அடித்தே காதை செவிடாக்கிவிடுவார்கள்.இதெல்லாம் யோசிக்காமல் அப்படியே கிராஸ் செய்வது தான் உத்தமம் என்ற நிலைக்கு நம் சாலைகள் நம்மை தள்ளுகின்றன.

எதிர் திசையில் வரும் வாகனவழியை அடைப்பது.இதில் நம் ஆட்களின் பொது அறிவு எப்படி யோசித்தாலும் வியக்கவைக்கிறது.அனுபவித்தால இதை முழுவதும் உணரமுடியும்.

சும்மா போனா கூட ஹாரன் அடித்துக்கொண்டு போகும் Culture எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை அதுவும் முன்னால் பெரிய பெரிய வண்டி சிக்னலுக்காக நின்றாலும் அதன் பின்னாலும் ஹாரன் அடிப்பது எதற்கு என்று புரியவில்லை.சரி இது இருசக்கர வாகனங்களின் பழக்கமென்றால் அது இப்போது 4 சக்கரவாகனத்துக்கும் வந்துவிட்டது ஏனென்றால் இரு சக்கர வாகனம் ஓட்டியவர்கள் காருக்கு மாறிவிட்டார்கள் போலும்...பழக்கத்தை விடமுடியவில்லை.அரசாங்கம் இந்த பிரச்சனையை உணர்ந்து அடுத்த தேர்தலில் காதுக்கான சோதனை மற்றும் செலவை இலவசமாக கொடுப்போம் என்ற உறுதிமொழியை கொடுக்கவேண்டும்.

வலது/இடது பக்கம் திரும்பனும் என்றால் எந்த கவலையும் பட தேவையில்லை,விளக்கு சமிக்கை இருந்தாலும் அதை உபயோகப்படுத்த வேண்டும் என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாத ஆட்களை தினசரி சந்திக்கலாம். இப்படி ஒரு கொடுமை இருந்தால் விளக்கு சமிக்கை இருக்கும் இடத்தில் free left/right அறிவிப்பு இருக்காது,எதிரே தெரியும் விளக்குகளின் அமைப்பை பார்த்து இடது/வலது பக்க விளக்கு இல்லை என்றால் அங்கு அது Free என்று புரிந்துகொள்ளவேண்டும்.கொஞ்ச நாள் சென்னையில் ஓட்டினால் தன்னால் புரிந்துகொள்வீர்கள்.அப்படி இருக்கும் பட்சத்திலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் போகும் வண்டிகளும் இருக்கும்.பொது விதியை கடைப்பிடிக்கவேண்டும் என்றாலும் பின்னால் ஹாரன் அடித்து நம்மை துரத்துவார்கள்.பல முறை ஆட்டோ மற்றும் பைக்காரர்களால் துரத்தப்பட்டிருக்கேன்.இதெல்லாம் விட சமிக்கைகள் எப்போது வேலை செய்யும் என்பது யாராலும் சொல்ல முடியாத புதிர்.வடபழனி சிக்னலில் இந்த கொடுமை அதிகம்.

இந்த ஒருவழிச்சாலையில் விளக்குகளை போட்டுக்கொண்டு எதிர்திசையில் வரும் வண்டிகள்- இவர்கள் இருவிதம்,சுற்றுவழியில் போனால் பெட்ரோல் விரயம் மற்றவர்கள் சோம்பேறிகளின் மறு அவதாரம்.

இதெல்லாம் விட மகா கொடுமை, சாலைகள் மூலம் மழை நீர் சேகரிக்கும் திட்டம்.திருமதி ஜெயலலிதா வீடுகளில் செய்யச்சொன்ன திட்டத்தால் நில நீர்மட்டம் உயர்ந்தது சந்தோசஷம் தான் ஆனால் அதையே சாலைகளிலும் செய்த ஆர்வக்கோளாறு ஆசாமிகளை என்னவென்று சொல்வது??

சாலை மத்தியில் திடிரென்று ஒரு குன்று வரும்....ஹி ஹி Manhole Clean பண்ணி போட்ட மண் எடுக்க மறந்துவிட்டதால் வந்தது.

Manhole கவர் போய்விட்டால் யாராவது புண்ணியவான் அதில் ஒரு குச்சியை நட்டு வரப்போகும் ஆபத்தை மற்றவர்களுக்கு உணர்த்துவார்கள்.

மிகச்சிறந்த சாலை போட்டவர்கள் என்ற கின்னஸ் சாதனை யாருக்காவது கொடுக்கனும் என்றால் சென்னை தான் முதலிடதில் இருக்கும் சந்தேகம் இருந்தால் கோயம்பேடு - விருகம்பாக்கம் சாலையை முன்னுரைக்கலாம்.இச்சாலைகளில் பயணிப்பதால் 35 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு முதுகு வலி நிச்சயம் அதற்கான இலவச பேகேஜ் தேவைப்படும் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். :-))

Wednesday, November 10, 2010

இது நிஜமானால்!!

கோயம்பேடு சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நெருங்கும் சமயத்தில் வேகமாக போய்கொண்டிருக்கும் வாகனத்தில் இருந்து இப்படத்தை பார்த்தால் நிஜமாகவே கட்டிய வீடுதான் இந்த நிலையில் இருக்கிறது என்ற எண்ணத்தோனும்.முதல் முறை கையில் கேமிரா இல்லாததால் எடுக்கமுடியவில்லை ஆனால் மறுமுறை போகும் போது நின்று படம் எடுத்த போது தான் சினிமா செட்டிங்காக போடப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.தூரத்தில் இருக்கும் பார்க்கும் போது கட்டினவனை திட்டுகிற அளவுக்கு தத்ரூபமாக செய்திருப்பவர்களை பாராட்டவேண்டும்.

Sunday, October 31, 2010

தேவர் திருவிழா

ஏற்கனவே இடைவிடாத மவுண்ட் ரோடின் ஹாரன் ஒலி அலுவலக கண்ணாடி தடுப்பையும் மீறி நாள் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கும்,நேற்று அந்த சத்ததையும் மீறி வெடி சத்தமும் தப்பு சத்தமும் ஒலிக்க ஆரம்பித்தது.சரி யாரோ மண்டையை போட்டுவிட்டார்கள் போலும் என்று நினைத்திருந்தேன்.வெளியே சென்று பார்க்க அலுப்பு.கலவையான இச்சத்தங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த போது தான் இது ஏதோ விழா போல் நடக்கிறது என்ற உணர்வு ஏற்பட்டது அதே சமயத்தில் மவுண்ட் சாலையில் இருக்கும் நெருக்கடிக்கு இடையே எப்படி என்ற எண்ணமும் எழுந்தது.

வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்து பார்க்கும் போது,முதல் குழு ஆண்களுக்கு; தப்பும் ஆட்டமும் போட்டுக்கொண்டு தேவர் சிலை வரை போனார்கள் அடுத்து பெண்கள் தலையில் குடம் வைத்து (நேர்த்திக்கடனா?)அவர்களும் அச்சிலை வரை போய்விட்டு ஒரு வண்டியில் குடங்களை அடுக்கிவைத்தார்கள்,அதற்கு மேல் எனக்கு நேரம் இல்லாத்தால் இரண்டு படங்கள் மட்டும் எடுத்துவிட்டு நகர்ந்துவிட்டேன்.

ஒரு வண்டியில் கோயம்பேடு யில் இருந்து தேவர் சிலை வரை நடைப்பயணம் என்று போட்டு ஏதோ விழா என்று எழுதியிருந்தார்கள்.இன்று காலை செய்தித்தாளை பார்த்தவுடன் தான் நேற்றைய விழாவுக்கு அர்த்தம் தெரிந்தது.




Tuesday, October 19, 2010

மத்தியான சிரிப்பு

அலுவலகத்தில் மதிய சாப்பாடு முடித்துவிட்டு மிச்சம் இருக்கும் 10 நிமிடத்தை வீணாக்க விரும்பாமல் தினமும் சிறிது நேரம் மவுன்ட் ரோடு பக்கம் உலாத்தல் போவேன் அப்படி போகும் போது இன்று பார்த்த ஒரு காட்சி என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

கீழே பாருங்கள்..



ஒரு காலத்தில் நெட்டில் இதே மாதிரியான கோட்டை வெள்ளை கலரில் ஒருவர் சாலையில் போட்டிருப்பார் அப்போது வழியில் இருக்கும் ஒரு இலைக்காக கோட்டை வளைத்துப்போட்டிருப்பார்.இக்கோடு சாலை விவர பலகைக்காக வளைக்கப்பட்டிருக்கு.

Saturday, October 16, 2010

யோகா

சில நாட்களுக்கு முன்பு யாகூ முதல் பக்கத்தில் மோசமான சுற்றுச்சூழல் உள்ள 20 நகரங்களில் பட்டியல் போட்டிருந்தார்கள் அதில் சென்னைக்கு 8வது இடம்,முதல் இடத்தில் குஜராத்தில் உள்ள அன்கலேஷ்வர்.இந்த அனகலேஷ்வர் பகுதியில் 1992களில் சில மாதங்கள் வேலை செய்துள்ளேன் அப்போதே காற்றில் ஒரு வித நெடி இருக்கும்.வெளியிடங்களில் இருந்து வரும் ரயிலில் வரும் போது இந்த நெடியே அன்கலேஷ்வர் வந்துவிட்டதை குறிப்பால் உணர்த்தும்.
உடல் நலம் அதுவும் வெட்டவெளியில் பணியில் இருக்கும் என்னை மாதிரி ஆட்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை என்னுடைய பழைய பதிவுகளில் அவ்வப்போது எழுதிவந்துள்ளேன்.ஒல்லியாக இருந்து சின்ன தூசிகளுக்கு எல்லாம் பல முறை பென்சிலின் ஊசி போட்டு வாழ்நாளை ஓட்டிக்கொண்டிருந்த நான் அதிலிருந்து விடுபட்டு ஓரளவு வியாதியில்லா வாழ்கைக்கு என்னை தயார்படுத்திக்கொள்ள பல உடற்பயிற்சிகள் உதவினாலும் அதையும் மீறி "யோகா" பக்கம் என்னை தள்ளியது 1990 களில் ஆனந்த விகடனில் வந்த யோகா பற்றிய கேள்வி பதில்கள் தான்.என்னை நான் தள்ளிக்கொண்ட பல நிகழ்வுகள் ஏனோ தானோ என்று புரிதல் முறையில் தான் நடந்திருக்கின்றன,அதே முறையில் இந்த யோகா கட்டுரைகளையும் படித்துக்கொண்டிருந்தேன்.திரு தேசிக்காச்சாரி என்பவர் அவர் தந்தை பெயரில் "கிருஷ்ணமாச்சாரி யோகா மந்திரம்" மூலம் பலருக்கு யோகா கலையை சொல்லிக்கொடுத்துக்கொண்டிருப்பதை அறிந்தேன்.உடலை ஓரளவு Tone Up செய்தாகிவிட்டது இனிமேல் அதில் அவ்வளவு முன்னேற்றம் காணமுடியாது என்ற நிலையில் யோகா பக்கம் முயற்சிக்கலாம் என்று அவர்களிடம் சில காலம் யோகா கற்றுக்கொண்டேன்.முதல் முறை அவர்கள் மந்திரம் போன போது அவர் என்னிடம் எதற்கு யோகா கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றார்.இந்தியனாக இருக்கின்ற எனக்கு இக்கலை தெரியவில்லை என்பது கஷ்டமாக இருப்பதால் வந்தேன் என்றேன்.உடல் நிலை பற்றிய பேச்சு வந்த போது பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்ற போது "திரு ஆன்ந்த்" என்பவரை எனக்கு ஆசிரியராக போட்டார்கள்.அவர் மூச்சு எடுக்கும் போது விடும் போதும் ஏதோ பிளாஸ்டிக் குழாய் மூலம் காற்று போய் வருவதைப்போன்று ஒரு சத்தம்,அவ்வளவு சுத்தமான மூச்சுக்குழாய் போலும்! ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.






யோகாவின் முக்கிய அங்கங்களில் முச்சுக்காற்று.ஏற்றுவது இறக்குவது என்ற கணக்கில் ஓடும்.எவ்வளவு வருடம் செய்தேன் என்ற நினைவில் இல்லை ஆனால் அதை செய்வதற்கால கால அளவு நிறையவே காலை நேரத்தை விழுங்கியது அதோடு சாயங்காலம் சரியாக வரவில்லை.யோகா செய்ததால் எவ்வளவு பலன் என்று தெரியவில்லை ஆனால் ஏதோ இருக்கு என்பதை மட்டும் உடல் நலம் காண்பிக்கிறது.இப்போதெல்லாம் யோகா பண்ணுவதில்லை என்றாலும் மூச்சுப்பயிற்சி மட்டும் தொடர்கிறது.

இனி சென்னை காற்றை தான் சுவாசிக்கவேண்டும் என்பதால் இது வரை செய்துவந்த உடற்பயிற்சிகள் எவ்வளவு நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் என்று தெரியவில்லை அப்படி முடியவில்லை என்றால் திரும்பவும் யோகா பக்கம் கண்ணைப்பதிக்கவேண்டும்.

Sunday, October 10, 2010

Employment Card

நான் படித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் படித்து முடித்தவுடன் வேலை தேடுகிறோமோ இல்லையே முதன் முதலில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துவிடுவோம்,அப்படி செய்வதால் அப்பா/அம்மா ஏச்சுக்களில் இருந்து தற்காலிகமாக தப்பித்துக்கொள்ளலாம் என்பது வேறு கதை.முதன் முதலில் நாகையில் படித்துமுடிந்தவுடன் அங்குள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து காத்துக்கொண்டிருந்தேன் பிறகு தான் முன் அனுபவம் உள்ளவர்கள் பலரும் சொல்லிய படி சென்னைக்கு மாற்றிக்கொண்டேன்.அவ்வப்போது அதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதால் வேலையில்லாததோர் பட்டியலில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அது உணர்த்திக்கொண்டிருக்கும்.

இன்று ஏதோ பழைய குப்பைகளை கிளறிக்கொண்டிருக்கும் போது இவ்வட்டை கையில் கிடைத்தது.கொஞ்சம் கொசுவற்றி சுற்றி பார்த்த போது அன்றிருந்த நிலமை இன்றிருக்கும் நிலமை - வேடிக்கையாக இருக்கு வாழ்கை.

Saturday, October 09, 2010

சென்னை மெட்ரோ

கோயம்பேடு மற்றும் வடபழனி பக்க சாலைகளை வழிப்பறி செய்து சென்னை மெட்ரோ வேலைக்காக ஆட்கள் உழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.தூண்கள் மண்ணைவிட்டு வெளியே வந்தும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் ஆனால் 20 நாட்களுக்கு முன்பு இப்படி ஒரு ஸ்டீல் Girder ஐ தூக்கி வைத்ததும் பத்திரிக்கைகள் புகைப்படம் போட்டு ஒரு சில பக்கங்களை நிரப்பிவிட்டன.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அப்பகுதி வழியே போன போது அலைபேசி மூலம் எடுத்தேன்.



கோயம்பேடு,CMBT,வடபழனி,அரும்பாக்கம் மற்றும் அசோக் நகர் பக்கம் வண்டி ஓட 2013 ஆகிவிடும் போல் தோனுகிறது.

Wednesday, September 22, 2010

சென்னை ரயிலில்...

வெளியே Track யில்நடப்பவனுக்கு புரியவில்லை உள்ளே தூங்குபவனுக்கும்.....

இப்படம் சென்னை மின்சார ரயிலில் எடுத்தது.

Sunday, September 12, 2010

நிலவும் வீனஸும்.

மஸ்கட் எப்போதுமே வானவியலுக்கு ஏற்ற இடமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நகர வெளிச்சத்தை தாண்டிப்போனால் வெரும் கண்களுக்கு வானத்தில் இருக்கும் நட்சத்திரம் விருந்தே படைக்கும்.

கீழ்கண்ட படங்களை பாருங்கள்...அலைபேசியில் பேசியில் எடுத்தது.நிலவும் வீனஸும் அருகருகே!!
முதல் படம் குரூம் பூங்காவிற்கு முன் எடுத்தது.




Friday, September 10, 2010

புதிய தொழிற்நுட்பம்-Hollw Core Slab.

போன பதிவில் ஆசிய கடற்கரை விளையாட்டு கட்டிடங்களை பற்றிய விளகங்களை சொல்கிறேன் சொல்லியிருந்தேன்.

மிக அதிக உயரமான கட்டிடமே ஐந்து மாடி தான்.ஒரு ஹோட்டல்,விளையாட்டாளர்கள் தங்கும் இடம்,பத்திரிக்கையாளர்கள் இருக்கும் இடம் மற்றொரு கட்டிடத்தில் உணவகம் மற்றும் கடைத்தொகுதி இருக்கிறது.வரும் நவம்பரில் விளையாட்டுகள் தொடங்கக்கூடும்.

விளையாட்டாளர்கள் தங்கும் கட்டிடத்தை தான் முதலில் பார்த்தேன்,நண்பர் அதில் செய்யப்பட்ட வேலைகளும் அதை எங்கிருந்து வரவழைத்தார்கள் அதன் சாதக பாதகங்களை விவரித்துக்கொண்டு இருக்கும் போது மேற் கூரையை பார்த்தேன்.அதன் Finishing அருமையாக இருக்கிறதே என்றேன்.
ஓ! அதுவா? இது தான் Hollow Core Slab என்றார்.இதை துபாயில் பல நிறுவனங்கள் செங்கல் மாதிரி போட்டு விற்கிறார்கள் என்றார்.ஆச்சரியமாக இருந்தது.நான் பார்த்த கூரை சுமார் 8.50 மீட்டர் நீளம்.இவ்வளவு Span இருக்கும் ஒரு இடத்தில் கான்கிரீட் கூரை போடனும் என்றால் நடுவில் ஒரு Beam வேண்டும் இல்லையென்றால் சிலாப் அதிக கணம் உள்ளதாக போடனும்.அதிக கணம் என்றால் அதற்கு தகுந்த கம்பி போடனும்.எந்த பொறியாளரும் அந்த அளவுக்கு போகமாட்டார்கள் ஏனென்றால் செலவு பிடிக்கக்கூடியது அதோடில்லாமல் அது சரியான கட்டுமான வேலையாக இருக்காது.
இவ்வளவு பெரிய Span யில் நடுவே ஒரு Beam கூட இல்லாமல் இருக்கும் இந்த Slab கணம் எவ்வளவு என்று கேட்டேன், அதற்கு 200 மி.மீட்டர் தான் என்றார் அதோடு இதன் உள்ளே வெறும் 8 அல்லது 9 கம்பிகள் மட்டுமே இருக்கிறது என்ற குண்டையும் போட்டார்.என்னால் நம்பவே முடியவில்லை. Slab அளவு 8.50 x1.2x0.2 மீட்டர், இதற்கு கம்பி வெறும் 9 தான்.படத்தை பாருங்கள்.தூணின் இரு பக்கத்திலும் Beam போட்டுவிட்டு அதன் மேல் இந்த Slab ஐ வைத்தால் முடிந்தது கூரை.

சில படங்கள் இணையத்தில் சுட்டவை..



நன்றி: கான்கிரீட் டெக்.



நன்றி:பிரிகாஸ்ட் ஒர்க்ஸ்



இதன் அனுகூலங்கள்.

1.Building கட்டுமானம் ஆரம்பிப்பதற்கு முன்பே இந்த வேலையை ஆரம்பித்துவிடலாம்.(Parellel Working), இதனால் நேரம் மிச்சமாகும்.
2.அருமையான Finishing அதனால் மேற்பூச்சு என்ற வேலையே இல்லை.
3.கம்பி கிடையாது அதனால் கம்பி வேலை என்று சொல்லப்படுகிற Bar Bending வேலை இருக்காது.
4.வேண்டிய அளவுக்கு செய்துகொள்ளலாம் என்பதால் நம் தேவைக்கு ஏற்ற அளவில் கிடைக்கும்.
5.Erection அல்லது பொருத்தும் வேலை மிகவும் சுலபம் அதோடில்லாமல் குறுகிய காலத்தில் விரைவாக முடிக்கமுடியும்.
6.Form Work அல்லது செண்டரிங் என்ற வேலையே கிடையாது.
7.சிலாபின் மத்தியில் ஓட்டை இருப்பதால் மேலும் கீழும் Thermal Insulation கிடைக்கும்.
இன்னும் நிறைய இருக்கு.

பிரதிகூலங்கள்
அனுகூலங்கள் என்று இருந்தால் அதற்கு பிரதி என்று ஒன்று இருக்கும் அல்லவா!
1.இதை மேல் தூக்கிவைக்க பாரம் தூக்கி வேணும்.சென்னை மாதிரி குருகிய சாலையில் பாரம் தூக்கி நிறுத்த முடியாது.Tower Crane மூலம் இவ்வவளவு பாரம் தூக்க முடியுமா என்று தெரியவில்லை.
2.பெரிய பெரிய தொழிற்சாலைகளில் கடைசி நேர வேலையாக சில சமயம் துளை போட வேண்டிவரும் அது இதில் கஷ்டம்.
3.Slab களுக்கு இடையே உள்ள ஜாயிண்டை மூட தனி தொழிற்நுட்பம் தேவை.
4.Slab அளவுகளை நினைத்த நேரத்துக்கு மாற்ற முடியாது.
இன்னும் இருக்கலாம் அவ்விடத்தில் வேலை செய்தால் புரிபடும்.

கீழே உள்ள படங்கள்...முதலில் உள்ள படத்தில் சிகப்பு வட்டம் போட்டு காட்டியிருப்பது தான் கம்பியின் அளவு 4~6 MM இருக்கக்கூடும்.



மற்றொரு படம் அந்த சைட்டில் எடுத்தது.

இதில் சிலாபின் Finish ஐ பார்க்கலாம்,இதில் மேற்பூச்சு இல்லை.அதோடு மின்சார பைப்புகள் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு எப்படி போகிறது என்றும் பார்க்கலாம்.



இதன் மூலம் எனக்கும்/உங்களுக்கும் பல விஷயங்களை தெரிந்துகொள்ள உதவிய என் நண்பனுக்கு நன்றி.

Thursday, September 09, 2010

ஆசிய கடற்கரை விளையாட்டு-மஸ்கட்.

எல்லோர் வாழ்வில் இப்படி ஒரு முறையாவது நடந்திருக்கும் அல்லது நடக்கும்.என்னுடைய வாழ்விலும் இது சில முறை நடந்திருக்கு. நினைப்பதெல்லாம் நடக்குபோது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மோசமான எண்ணங்களும் நடந்திடுமோ என்று தோன்றும்,அதாங்க நீங்க ஏதாவது நினைத்திக்கொண்டு இருப்பீங்க அது உடனே நடப்பதற்கான சாத்திய கூருகள் நடக்க ஆரம்பித்துவிடும்.ஆங்கிலத்தில் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”என்பதை ”டெலிபதி”என்று சொல்வார்கள் ஆனால் இந்த மாதிரி நினைப்பு நடப்பதை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.


ஒரு முறை என் அம்மாவுடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது இன்று விசேஷமான நாள் முடிந்தால் கோவிலுக்கு போய்விட்டு வா- என்றார்.இங்கு என்ன கோவில் நடந்து போகக்கூடிய தூரத்திலா இருக்கு என்று நினைத்துக்கொண்டு,கம்பெனி வண்டி ஃபிரியாக இருந்தால் போகிறேன் இல்லை யாராவது நண்பர்கள் வண்டி கொண்டுவந்தால் அவர்களிடம் கேட்கிறேன் என்று சொல்லி வைத்தேன்.இது நடந்தது காலை மணி 7. நண்பனிடம் இருந்து ஒரு அழைப்பு,என்ன Program இன்று என்று கேட்டார்.வழக்கம் போல் ஒன்றும் இல்லை வீட்டில் தான் இருக்கேன் என்றேன்.சரி ஒரு 10 மணி போல் வருகிறேன் கிருஷ்ணன் கோவிலுக்கு போகலாமா என்றார்??!! ஆச்சரியம். அவன் தயவில் அன்று கோவில் தரிசனம் கிடைத்தது.

என்னுடைய ஒப்பந்த நாள் வரும் 14ம் தேதியோடு முடிவதால் ஒரேடியாக ஊருக்கு கிளம்புவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யும் போது இவ்வளவு நாள் இங்கிருந்தோம் கூடியவரை பல இடங்களை பார்த்திருந்தாலும் ஒரு கட்டுமான இடத்துக்கு உள்ளே போய் பார்க்கமுடியவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.25 வருடங்களுக்கு பிறகு சந்தித்த நண்பன் அதே வேலையில் இருந்தாலும் அவனிடம் கேட்பதற்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது.கிளம்புவதற்கு முதல் வாரம் வேண்டுமென்றால் கேட்கலாம் என்று நினைத்திருந்தேன்.
L&T-ECC நிறுவனம் என்னுடைய தாய் நிறுவனம் மாதிரி,நான் இங்கு கற்றது இன்று வரை எனக்கு சோறு போடுகிறது.புதிய புதிய தொழிற்நுட்பங்கள்,வித்தியாசமான வேலைகள் என்று அறியும் ஆர்வம் உள்ளவர்களுக்கு தீனி போடும் செமத்தியான இடம் அது.என்ன தான் மலேசியா/சிங்கப்பூர்/துபாய்/மஸ்கட் என்று பல ஊர்களில் கட்டுமான தொழிற்நுட்பங்களை பார்த்திருந்தாலும் 15 வருடங்களுக்கு பிறகு என்னுடைய தாய் நிறுவனத்தில் எப்படி வேலை நடக்குது என்று பார்க்க ஆவலாக இருந்தது.சில வேலைகள் வெளி ஆட்களுக்கு நுழைய தடை இருக்கும் அந்த வகையில் இந்த வேலை இருந்தால் என்னால் உள்ளே போக வேண்டுகோள் கூட வைக்கமுடியாது.இப்படி எண்ணங்கள் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது.

என்னதான் Gtalk யில் அவன் பெயரில் Available என்று வந்தாலும் அவசியமில்லாமல் அவனும் கூப்பிடமாட்டான் நானும் கூப்பிடமாட்டேன்.இரண்டு வாரங்களுக்கு முன்பு கூப்பிட்டு இந்த வார கடைசியில் முடிந்தால் சந்திக்கலாம் என்றான்.சரி என்றேன் ஆனால் அந்த வாரம் அவனுக்கு வேலை வர அவனால் வரமுடியவில்லை.மறுவாரம் கூப்பிட்டு என்னுடைய வேலை நிலவரங்களை கேட்டுவிட்டு வியாழன் இரவு ஏதோ ஒரு இடம் சொல்லி அங்கு கொஞ்சம் வேலை இருக்கு அங்கு தங்கிவிட்டு மறுநாள் site ஐ சுற்றிப்பார்க்கலாம் என்றார்.ஆச்ச்சரியமோ ஆச்சரியம் நான் கேட்கமாலே நான் நினைத்தது நடக்கவிருந்தது.

வியாழன் இரவு சுமார் 7 மணிக்கு வந்தான் இருவரும் கிளம்பி Seeb (Airport) வழியாக President Palace இருக்கும் இடத்தையும் கடந்து போய்கொண்டிருந்தோம்.Mussanah என்ற இடம் வந்தது அது வரை வண்டி 100 ~ 110 கி.மீ வேகத்தில் வழுக்கிக்கொண்டு போய்க்கொண்டிருந்தது.கிட்டத்தட்ட 105 கி.மீ வந்தவுடன் ஒரு சிறிய கிராமம் போல் இருந்த இடத்தில் ஒரு வில்லாவில் இவர்களுக்காக இடம் ஒதுக்கியிருந்தார்கள் அங்கு தங்கினோம்.ECC முறைப்படி ஒரு Mess ம் இருந்தது.பழைய கதைகளை பேசிவிட்டு சுமார் 11 மணிக்கு படுத்தோம்.



காலை எழுந்து சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி Site க்கு போனோம். தங்கியிருக்கும் இடத்துக்கும் Site க்கும் சிறிது தூரம் தான் இருந்தாலும் மகிழுந்துவில் தான் போகனும்.நடுநடுவே சில இடங்களில் வீடுகள் கட்டுமானம் நடந்துகொண்டிருந்தது மற்ற படி பொட்டக்காடு தான்.ஒரு துருக்கிஸ் நிறுவனம் தன்னுடைய பேச்சிங் பிளாண்ட் மற்றும் 400 டிப்பர் வகை வாகனங்களை அங்கு நிறுத்திவைத்திருந்தது.ஒரு வேளை வரப்போகும் வேலைக்காக இப்போதே அடுக்க ஆரம்பித்துவிட்டார்களா என்ற யோசனையில் இதற்கான Over Heads என்னவாகும் என்ற நினைப்பும் வந்தது.துபாய் விழுந்ததில் வந்தவையாக கூட இருக்கலாம்.

ECC யில் ஒரு காலத்தில் ஆதாவது நான் வேலை செய்ய ஆரம்பித்திருக்கும் காலத்தில் சிறிய பெரிய விபத்துகள் நிகழத்தொடங்கிய காலம்(1982) அதனால் விபத்துக்கு இழப்பீடு செய்யும் போது காப்பீடு நிறுவனம் இதே நிலை தொடர்ந்தால் அதிக சந்தா கட்டவேண்டும் என்று நிர்பந்திக்க ஆரம்பித்தது அதனால் இவர்களுக்கு சந்தா அதிகமாக கட்டாமல் இருக்கவும் மார்க்கட்டில் கம்பெனி பெயர் நிலை நிருத்தவும் பாதுகாப்புக்கு செலவு செய்வது என்று முடிவெடுத்தார்கள்.என்னுடைய முதல் வேலை இடத்தில் 60 பேருக்கு மேல் இருந்தால் Site இல் 20 ஹெல்மட் தான் இருக்கும்.பெரிய தலைகள் கட்டாயமாக போட்டிருப்பார்கள்.கட்டிடங்கள் அதிக உயரம் எழும்ப எழும்ப சின்ன சின்ன கற்கள் மூலம் காயம் ஏற்படுவதை கண்டு எல்லோருக்கும் ஹெல்மட் கிடைத்தது.வேலையாட்கள் வரை அதை கொண்டு வர பல ஆண்டுகள் பிடித்தது.சித்தாள்கள் தலையில் திண்டு வைப்பதால் ஹெல்மட் என்பது அவர்களுக்கு ஒத்துவராதது என்று ஒதுக்கிவிட்டார்கள்.அப்போதெல்லாம் விபத்து என்று வரும் கேஸ்கள் காலில் ஆணி குத்திவிடுவது தான் அதிகம்.இப்படியெல்லாம் இருந்த நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை நுழைவாயிலில் மாட்டியிருக்கும் பலகை உங்கள் பாதுகாப்பு உங்கள் குடும்பத்துக்கும் பாதுகாப்பு என்று சொல்லி நச் என்று அனைவரது மண்டையில் ஏற்றியிருக்கிறார்கள்.இப்படி நச் என்ற பலகை மாட்டினால் வேலை செய்யும் இடம் பாதுகாப்பாகிவிடுமா? நிச்சயம் முடியாது.வேலை செய்பவர்கள் மற்றும் வேலை வாங்குபவர்கள் இருவரும் சேர்ந்து உழைத்தால் விபத்தே நிகழாமல் ஒரு வேலையை முடிக்கலாம் என்று சொல்லாமல் சொல்லியது மற்றொரு அறிவிப்பு பலகை,அது தான் அவர்களின் 10 மில்லியன் வேலை நேரம்.இமாலய சாதனை என்றே சொல்ல வேண்டும்.நிஜமாக பாதுகாப்புக்காக இவர்கள் உழைக்கிறார்களா? அதற்காக என்னென்ன செய்கிறார்கள் என்பதை பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.இதையெல்லாம் நான் பார்க்கிறேன் எனபதை நான் என் நண்பனிடம் சொல்லவில்லை இப்படி இங்கு எழுதி அவர்கள் அனைவரையும் பாராட்டிவிடலாம் என்று விட்டுவிட்டேன்.



நான் பார்த்த வரை

1.ஒழுங்கான வேலை Platform.ஏறுவதற்கு ஏணி,நின்று வேலை பார்ப்பதற்கு சரியான பலகை,கைப்பிடி பைப்புகள்(சரியான உயரத்துக்கு),Toe Board(சாமான்கள் கீழே விழாமல் இருக்க) & மிக முக்கியமாக அந்த Platform வேலை செய்ய ஏற்றது தான் என்ற சான்றிதழ் வழங்கி அதை அதில் மாட்டியும் வைத்துள்ளார்கள்.
2.தற்காலிக ஓட்டைகளை சுற்று கைப்பிடி போட்டு அதன் மேல் பாகத்தை கனமான மூடி போட்டு மூடி வைத்துள்ளார்கள்.



3.ஏணி படிகளில் உள்ள தற்காலிக கைப்பிடி பைபுகளின் முனையில் பிளாஸ்டிக் குப்பி போட்டு மூடி வைத்துள்ளார்கள் இதன் மூலம் கூர்மையான பாகத்தால கையில் அடிபடாமல் இருக்கும்.
சொல்ல வேண்டுமென்றால் இது போல் பலவற்றை சொல்லலாம்.இதைப்படிக்கும் கட்டுமானத்துறை நண்பர்கள் வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் சேர வேண்டிய நிறுவனம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

இப்படியெல்லாம் இருக்கும் இடம் தான் ஆசியன் கடற்கரை விளையாட்டுக்காக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டிடங்கள்.

மற்றவை அடுத்த பதிவில்.

Wednesday, September 08, 2010

த‌லை குனிவு!!

அழுகை அழுகையாக‌ வ‌ருது....இப்ப‌டியா மான‌ம் போக‌னும் அதுவும் அய‌ல் நாட்டு ப‌த்திரிக்கையில்!!!


http://www.straitstimes.com/BreakingNews/Asia/Story/STIStory_576253.html

Thursday, September 02, 2010

Footing- அஸ்திவாரம்

அஸ்திவாரங்களில் பல வகைகள் இருந்தாலும் பல கட்டிடங்கள் இந்த மாதிரி Footing போட்டு அதன் மீது தூண் எழுப்பி தான் செய்கிறார்கள்.நாங்கள் இப்போது இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் ஒரு மசூதியை இடித்துவிட்டு புதிதாக கட்டுகிறார்கள் அவ்வப்போது மெது நடை போகும் போது எட்டிப்பார்த்துவிட்டு போவேன் அதிலிருந்து சில படங்கள் கீழே.

கான்கிரீட்டை பாதுகாக்க ஏதோ கருப்பு கலர் பெய்ண்ட் அடித்து இருக்கிறார்கள்.படத்தின் மீது சொடுக்கி பெரிதுபடுத்தி பார்த்தால் இன்னும் பல விபரங்கள் தெரியும்.

கீழே உள்ள படம் துபாயில் எடுத்தது,இந்த மாதிரி Footing தரை முழுவதும் வருமாறு இருக்கும் அதன் மீது தூண்கள் வரும்.இப்படி Footing போடுவதால் அதையே கார் நிறுத்தும் இடமாகவும் உபயோகிக்க முடியும்.



இப்படம் இணையத்தில் கிடைத்தது.என்னை பொருத்தவரை மோசமான உதாரணம்.தூண்,அஸ்திவாரத்தின் நடுவில் இல்லாதது ஒரு பெரும் குறையல்ல ஆனால் இதில் மண்ணை தோண்டுவதற்கு பதில் தோண்டிய மண்ணுக்காக அஸ்திவாரம் போடப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.



மசூதியின் அஸ்திவாரம்.



இன்னும் அருகே..

Friday, August 13, 2010

சென்னையில் Sink Hole?

Sink Hole இதுக்கு தமிழாக்கம் என்னவென்று தெரியவில்லை ஆனால் கீழ்கண்ட படங்களை பாருங்கள்.முதல் படம் குவாண்டமாலா எனும் இடத்தில் ஏற்பட்டது ஆனால் இரண்டாம் படம் விருகம்பாக்கம் பூங்காவுக்கு அருகில் உள்ள தெருவில் ஏற்பட்டுள்ளது,அதிசியமாக யாரோ புண்ணியவான் அதை சுற்றி பாதுகாப்பு பட்டையை கட்டியுள்ளார்கள்.

முதல் படம் குவாண்டமாலாவில் ஏற்பட்டது.




நம்மூர் சாலைகளில் பயணிப்பவர்களுக்கு இந்த மாதிரி பூமி உள்வாங்குவது என்பது சாதரண நிகழ்வு தான் ஆதாவது தொலைப்பேசி அல்லது கழிவு நீர் பாதைகளை ஏற்படுத்திவிட்டு பிறகு அதை முறையாக மூடாமல் விட்டால் அந்த இடமே செயற்கையாக தாழ்ந்திருக்கும்.இவ்விடம் அப்படியில்லாமல் மொத்தமாக இறங்கியிருப்பது பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்படுமா என்று அஞ்சவேண்டியிருக்கு.


Monday, August 09, 2010

இது சரியல்ல.

ஒரு காலத்தில் சென்னையில் வீட்டுக்கு குளிர்சாதன வசதி என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையில் தான் இருந்தது ஆனால் இப்போது சுமார் 40 விழுக்காடு வீடுகளில் குளிர்சாதன வசதி வந்துவிட்டது.இரவில் தூங்க காற்றாடி போய் குளிர்சாதனம் அத்தியாவசியமாகிவிட்டது.வீட்டு குளிர்சாதன வசதிக்கு சிறிதும் பெரிதுமாக பல உபகரணங்கள் இருந்தாலும் மத்திய வர்கத்துக்கு கைவசப்படுவது இரண்டு ரகம் தான்,ஒன்று Window Unit மற்றொன்று Split Aircon.

முதல் வகை சுவரில் இருக்கும் ஓட்டையில் அதன் பிரேமுடன் பொருத்தி தேவையான ஆணிகளை கொண்டுமுடுக்கிவிடுவார்கள்.சிங்கையில் இவ்வகையிலும் தரனான Stainless Brackets களை மட்டுமே உபயோகிகவேண்டும் என்ற சட்டம் இருக்கு,ஏனென்றால் இவ்வகை குளிர்சாதன பெட்டி மேலிருந்து கீழே விழுந்து பல விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.நம்மூரில் சரியான முறைகளை அமல்படுத்தாவிட்டால் இன்னும் பல விபத்துக்கள் இதனால் ஏற்பட சாத்தியங்கள் உள்ளது.

இரண்டாம் வகை Split Aircon : இது கொஞ்சம் பவர் அதிகம்என்பதாலும் ஒன்றுக்கு மேற்பட்ட அறைகளுக்கு குளிர்சாதன வசதி கொடுக்க முடியும் என்பதால் ஒரு சிறிய கம்பிரசரை பொருத்தி இவ்வசதியை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.இதை பொருத்தும் இடம் மற்றும் சில நியதிகள் இருக்கின்றன.கொஞ்சம் எடை அதிகம் என்பதால் இதை சரியாக பொருத்த வேண்டும் ஆனால் பல மாடிக்கட்டிடங்களில் இம்முறைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு சன்ஷேடு மேல் வைத்துவிடுகிறார்கள். இந்த சன்ஷேடு சரியான முறையில் கன்கிரீட் போடப்பட்டிருந்தாலும் இவ்வகை எடைகளை தாக்குப்பிடிக்க ஏற்ற வகையில் டிசைன் செய்திருக்கமாட்டார்கள்,அத்துடன் இதிலிருந்து கசியும் நீர் கம்பியை துருபிடிக்கவைத்து கட்டிடத்தை பலமிழுக்கவைத்துவிடும்.கட்டுமான Knowledge மற்றும் வழிமுறைகள் முறையாக செயல்படுத்தாவிட்டால் தேவையில்லாத உயிரிழப்புகள் என்று நாளிழதர்களில் தினமும் பார்க்க நேரிடும்.

முறையான வழியும்,தவறான முறையும் கீழே படங்களில்.

தவறான முறைகள்.





சரியான முறை கீழே.

Sunday, August 01, 2010

புது மாதிரியான செங்கல்.

கடந்த ஒரு வருடமாக வீடு வாங்க சுற்றி சுற்றி வந்த பல இடங்களிலும் நான் கண்டது இருவகைகளை கொண்ட சுவர்களை மட்டுமே,ஒன்று சுட்ட/பாரம்பரிய செங்கல் மற்றொன்றுஃபிளை ஆஸ் மூலம் செய்யப்படும் செங்கல்.முந்தையது அளவில் சிறியது அடுத்தது அளவில் பெரியது ஆனால் மற்றது சுவர் வேலைகள் சுலபமாக முடிக்கக்கூடியது.இரண்டிலும் சாதக பாதகங்கள் இருக்கின்றன.இந்த இரண்டு மட்டுமே மனதில் இருந்த வேலையில் இன்று மதியம் படப்பை அருகே ஒரு வீடு கட்டுமானத்தளத்துக்கு போன போது எதேச்சையாக கண்ணில் பட்டது அவர்கள் செய்திருந்த சுவர் வேலை.

கீழே உள்ளது ஒரு கல்லின் நீள,அகல உயரங்கள்,சுமாராக 18x18x36 செ.மீட்டர்.





இதனுள் இருக்கும் ஓட்டைகள் அப்படியே இருக்கும் என்பதால் வெளிப்புற சூடு உள்ளே வராது அதோடு உள்ளிருக்கும் குளுமையும் அவ்வளவாக வெளியே போகாது.அவசியம் ஏற்பட்டால் ஒழிய மேற்பூச்சு கூட தேவைப்படாது என்றே நினைக்கிறேன்.

இப்படம் முகப்பில் எடுக்கப்பட்டது.





நிலை வாசலில் சுவர் முடியும் பாகம் இது,இதன் மூலம் அதன் வேலை முறையை அறிந்துகொள்ளலாம்.

Saturday, July 24, 2010

கிரானைட்

கட்டுமானத்துறையில் கிரானைட் புகுந்து பல வருடங்களாகிவிட்டது.முதன் முதலில் வழுவழுப்பான தரை என்ற நியதியில் உள்ளே வந்து அதன் பிறகு பெரிய பெரிய கட்டிடங்களின் வெளிப்பகுதி அலங்கரிப்புக்காக பெரிய சட்டத்துடன் இணைத்து உபயோகித்தார்கள்.தற்போது வெளிப்புற அலங்கரிப்புக்கு கிரானைட்டை விட கண்ணாடியில் பல அனுகூலங்கள் இருப்பதால் பலரும் கண்ணாடியையே விரும்புகிறார்கள்.கான்கிரீட்டை விட பளபளப்புக்கு கிரானைட் உகந்ததாக இருப்பதால் பலரும் விரும்புகிறார்கள்.சுத்தம் செய்வது மிக எளிதாக இருப்பதால் பன்னாட்டு விமான நிலையங்களில் மக்கள் குழுமும் இடம் என்று அடையாளம் காண்பிக்கப்படும் இடங்களில் இது புழக்கத்தில் உள்ளது.

தரைக்கு இக்கற்களை பதிக்கும் போது பரப்பும் தளத்தில் சிமிண்ட் பரப்பி அதன் மேல் இக்கற்களை பதிப்பார்கள்.சரியான லெவலில் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை செய்திருப்பார்கள்,இதுவே நெடுக்கில் கிரானைட் கற்களை வைக்க என்ன செய்கிறார்கள்? விளக்கப்படங்கள் கீழே.

நான் தங்கியிருக்கும் பக்கத்தில் உள்ள Qurm Beach யில் நடைபாதைக்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உட்கார்ந்து கடலழகை பார்க்க வசதி செய்துள்ளார்கள்.அது இப்போது வெறும் கான்கிரீட் போடப்பட்டு அப்படியே உள்ளது.நிறைய காசு இருக்கோ என்னவோ அதையெல்லாம் கிரானைட் போட்டு அலங்காரப்படுத்த அரசாங்கம் உத்தரவு போட்டு ஒரு குத்தகைக்காரர் வேலை தொடங்கியுள்ளார்.வெய்யில் காலத்தில் சூரியன் மறைந்ததும் சுமார் 1 மணி நேரம் அந்த வெப்பம் இந்த கிரானைட் சிலாப் மீது உட்காரவிடாமல் பண்ணும் மற்றபடி குளிர் காலத்தில் அவ்வளவு பிரச்சனை இருக்காது.

கற்கள் வேண்டிய அளவில் வெட்டப்பட்டே வரும் தேவையென்றால் உரிய உபகரனங்கள் மூலம் நம்மாலும் வெட்டிக்கொள்ளமுடியும்.வேலைக்கு தகுந்த மாதிரி அதன் Thickness இருக்கும்.

தகுந்த உயரத்தில் அல்லது இடத்தில் வைத்து அதன் நேர் தன்மையை சரிசெய்துக்கொண்டு படத்தில் உள்ள மாதிரி சிறிய ஸ்குரு மற்றும் இருகும் தண்மை கொண்ட கெமிகல் மூலம் அதை நிலை நிறுத்துவார்கள்.கான்கிரீட் மற்றும் இந்த சிலாபுக்கு இடைப்பட்ட பாகத்தை தேவையென்றால் சிமிண்ட் கலவை மூலம் நிரப்பிவிடுவார்கள்.

Alignment with Thread



ஸ்குரூ மற்றும் கெமிகல் மூலம் நிலை நிருத்தப்படுகிறது.





வேலை என்னவோ சுலபமாக தெரிந்தாலும் சில இடங்களில் கலர் மாற்றம் ஏற்பட்டால் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.கிரானைட்டிலும் நகாசு வேலை செய்து வித்தைகாட்டுகிறார்கள்,இந்த மாதிரி வித்தைகளை மத்திய கிழக்கில் அதிகமாக பார்க்கலாம்.

Wednesday, July 07, 2010

பெரிய மசூதி

மஸ்கட் சுற்றிப்பார்க்க வந்தால் தவறாமல் பலர் செல்லும் இடம் இந்த மசூதி.அவ்வப்போது விமான நிலையத்தை நோக்கி போகும் போது அல்லது அங்கிருந்து வரும் போதோ கண்ணை கவரக்கூடிய கட்டிடம் இது.கிட்டத்தட்ட 7 மாதம் ஆகிவிட்டாலும் உள்ளே போய் பார்க்கனும் என்று தோன்றவில்லை.சமீபத்தில் குடும்பம் கோடை விடுமுறைக்கு வந்திருந்தார்கள்,மஸ்கட் சுற்றி பார்க்கும் இடங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டதால் அதைப்பார்க்க கிளம்பினோம்.அதற்கு முன்பு இணையத்தில் அங்கு போவதற்கு விபரங்கள் தேடிய போது இஸ்லாம் மதத்தில் இல்லாதவர்களுக்கு சுற்றிப்பார்க்க சனி முதல் புதன் வரை தான் போட்டிருந்தது,அங்கு போன போது வியாழன் அன்றும் பார்க்கலாம் என்று போட்டிருந்தது.மிக முக்கியமாக பெண்கள் கை,கால் முதலியவற்றை மூடிக்கொள்ளவேண்டும் அப்படி இல்லாதவர்களுக்கு பக்கத்தில் உள்ள கடையில் பிரத்யோக உடை 4 ரியாலுக்கு கொடுக்கிறார்கள்.
கட்டிடம் வெளிப்புறம் முழுவதும் மரங்களை வைத்து ஒரு தோட்டம் மாதிரி செய்துள்ளார்கள்.
மீதி விபரங்கள் படமே சொல்லும்.