Thursday, February 18, 2010

தொப்பை தள்ளுது.

போன வாரம் முழுவதும் அடை சாப்பிடனும் போல உணர்வு அதற்காக அதை தேடி உணவகம் போகவும் அலுப்பு,சரி இட்லி தான் போன பதிவில் போட்டாச்சே அதே மாதிரி தானே இதுவும் இருக்கப்போகிறது என்று கூகிளிடம் தேடினேன்.ஒரு பதிவில் இருந்தது மிக சுலபமாக இருந்தது,ஆதாவது கடலை மாவையும் கோதுமை மாவையும் 2:1 என்ற விகிதத்தில் கலந்து கொஞ்ச நேரம் ஊற வைத்து தேவையான உப சாமான்களை போட்டு செய்திடலாம் என்றிருந்தது.இவ்வளவு சுலபமாக இருக்கே என்று கடை கடையாக கடலை மாவுக்காக தேடிய போது தெரிந்தது இங்கு கடலைமாவாக கிடைக்காது என்று.அரை மனதுடன் அரை கிலோ கடலை பருப்பை வாங்கினேன்.இதையெல்லாம் மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னேன்,அவர்கள் இதைவிட இப்படி செய்து பாருங்கள் இன்னும் நன்றாக வரும் என்று சொன்னார்.

புழுங்கல் அரிசி - 1 பங்கு
கடலை பருப்பு(கொஞ்சம் அதிகமாக இருக்கட்டும்),உளுத்தம் பருப்பு & துவரம் பருப்பு - 0.5 பங்கு

இவை இரண்டையும் தனித்தனியே கொஞ்ச நெரம் ஊற வைத்துவிட்டு கொஞ்சம் காய்ந்த மிளகாயுடன் கிரைண்டரில் அரைத்து தேவையான உப பொடிகளை பொட்டுக்கொள்ளவும்.எப்போது அடை வார்க்க வேண்டுமோ அதற்கு முன்பு சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை & பச்சை மிளகாய் & கொத்தமல்லியை பொடி செய்து போட்டு கலக்கிவிடவும்.மாவுடன் மிக முக்கியமாக கொஞ்சம் நல்ல எண்ணெய் சேர்த்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள்.புழுங்கல் அரிசியை தேடியபோது தான் தெரிந்தது அது வீட்டில் இலை என்று அதற்காக கவலைப்படாமல் பச்சரிசியை உபயோகித்தேன்.

அவ்வளவு தான்.

இப்படியெல்லாம் செய்து Non-Stick Pan யில் போட்டு கரண்டி கொண்டு திருப்பலாம் என்று பார்க்கும் போது அப்படியே தன்னாலேயே வழுக்கிக்கொண்டு வந்துவிட்டது.எப்படி இருக்கு என்று பார்க்க...



சரி அதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா?

இந்த படத்தை அலைபேசியில் எடுத்துவிட்டு பதிவில் இணைக்கலாம் என்று கணினியுடன் இணைத்த போது Screen அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சாக ஆரம்பித்தது.கணினியில் இருந்து விடுப்பித்து மின்கலத்தை எடுத்து நானும் என்னனென்வோ முயற்சிக்க இயங்க மறுத்தது அலை பேசி.போச்சு போச்சு என்று நினைத்துக்கொண்டு அதை எங்கு கொடுக்கலாம் என்று யோசிக்கும் போது ரூவி தான் ஞாபகம் வந்தது.அங்கு தான் இந்த மாதிரி வேலைகளை செய்ய பல கடைகள் பார்த்த ஞாபகம்.

சாயங்காலம் நடைபயிற்சி போகும் போது அப்படியே இவ்வேலையையும் முடித்துவிடலாம் என்றெண்ணி Qurm Park பக்கம் போனேன்,அங்கு தான் வாடகை மகிழுந்து கிடைக்கும்.வந்த ஓட்டுனரிடம் எவ்வளவு என்று கேட்டேன்,400 பைசா என்றார்,சரி என்று உள்ளே அமர்ந்தேன்.மேலும் சிலரும் நான் போகும் இடத்துக்கு போக ஏறியவர்கள் பேரம் பேசி 300 காசுக்கு பயணித்தார்கள்.

Ruwi இந்த இடம் சிங்கை சிரங்கூன் சாலையோடு ஒப்பிடலாம்.தொழிலாளர் கூட்டம் அதோடு பல விதமான கடைகள் என்று ஓய்வு நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.இது வரை இங்கு மகிழுந்துவில் மட்டுமே சென்றதால் பல சாலைகளில் உள்ள கடைகள் கண்ணில் படாமல் இருந்தன.சரி வந்த வேலையை பார்ப்போம் என்று சில கடைகளில் அலைபேசியை காண்பித்து ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டேன்.ஒரு கடையில் ஹமிரியா(இடம்) சென்றால் முடியும் என்றார்கள்,சிலர் முடியாது என்றார்கள்.சோனி எரிக்‌ஷன் என்றாலே ஒரு மாதிரி விலகிவிடுகிறார்கள்.

ஒரே ஒரு கடையில் மத்திரம் Soft Reset செய்து பார்ப்போம் சரியானால் 3 ரியால் கொடுங்கள் என்றார். சரி என்றேன்.என்னென்வோ முயற்சித்தும் சரியாகவில்லை அலைபேசியை திறந்து பார்த்து தான் முடியுமா?முடியாதா என்று சொல்லமுடியும் என்று சொன்னார்கள்.அதற்கு எவ்வளவு ஆகும் என்றேன்.சரியாக சொல்லமுடியாது எப்படியும் 6 முதல் 7 வரை ஆகலாம் என்றார்.சரி என்று ஒத்துக்கொண்டு அலைபேசியை கொடுத்துவிட்டு வந்தேன்.அதில் வைத்திருந்த கடவு சொல் மற்றும் மேலும் பல விபரங்கள் கிடைக்குமா என்று தெரியவில்லை எனக்கு கிடைக்காவிட்டாலும் அவர்களுக்கு கிடைக்காமல் இருந்தாலே பெரிய தொந்தரவு இருக்காது.

நேரம் அதிகமாக இருந்ததால் ரூவியை சுற்ற ஆரம்பித்தேன்.புதிதாக திறந்திருக்கும் Mars என்னும் கடை தொகுதியில் சுற்றிய பிறகு பக்கத்தில் உள்ள KM கடைதொகுதிக்குள் போனேன்.இங்கு ஓரிரு முறை சென்றிருப்பதால் என்னென்ன சாமான்கள் எங்கு இருக்கும் என்பது தெரிந்திருந்தது.புழுங்கல் அரிசியை தேடிய போது தஞ்சை புழுங்கல் இட்லி அரிசி என்று போட்டே விற்கிறார்கள்.இரண்டு பாக்கெட்டுகள் வாங்கிக்கொண்டேன்.

இந்த கடைத்தொகுதியில் எப்போதுமே பணம் கட்டும் இடத்தில் கூட்டம் நின்று கொண்டிருக்கும்.நபர்கள் குறைவாக இருக்கும் வரிசையை கண்டுபிடித்து நின்றேன்.நின்ற கொஞ்ச நேரத்துக்கெல்ல்லாம் என் பின்னால் ஏதோ உரசுவது போல் இருந்தது.கொஞ்சம் முன்னே போனேன்,இம்முறையும் உரசல் தொடர்ந்தது.திரும்பிப்பார்த்தால் ஒரு இந்தியர் மலையாள சேட்டன் தொப்பை யால் என்னை முட்டிக்கொண்டிருந்தார்.எனக்கு சிறிய கோபம் வந்தாலும் அதையும் மீறி பயங்கர சிரிப்பு தான் வந்தது ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு தான் சிங்கை செய்தித்தாளில் இப்பிரச்சனையை அலசியிருந்தார்கள்,ஆதாவது அங்கு ATM வரிசையில் நிற்கும் போது தேவையான இடவெளி விட்டு சிலர் நிற்பதில்லை என்றும் பக்கத்தில் இருப்பவர்கள் மேல் ஈஷிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் போட்டிருந்தார்கள்.இதில் முதலிடம் பங்களாதேசிகளுக்கும் அடுத்து நம் மக்களும் இருந்தார்கள்.அதுவும் நம் ஊரில் இருந்து வரும் டூரிஸ்டுகள் கூட வரிசையில் நிற்கும் போது இப்படித்தான் இட்டித்துக்கொண்டு நிற்பதை பல முறை பார்த்திருக்கேன்.இதெல்லாம் மனதில் ஓடியதால் என்னை ஒட்டிக்கொண்டு நிற்பவர் மீது கோபம் வராமல் சிரிப்பு தான் வந்தது.

Thursday, February 11, 2010

இட்லி

சிங்கையில் இருந்தவரை இட்லி/தோசைக்கு அவ்வளவாக பிரச்ச்னையில்லாமல் இருந்தது.மனைவி கூட இருந்த வரை அவர்கள் முறையில் கிரைண்டரில் போட்டு அரைத்து செய்துவிடுவார்கள்.தனி வாழ்கையின் போது ரெடிமேடாக கிடைக்கும் மாவில் தேவையான அளவு உப்பை போட்டு வைத்துவிட்டால் ஒரு வாரத்துக்கு கவலையில்லாமல் இருக்கலாம் ஆனால் இந்த மாவில் முதல் இரண்டு நாள் தான் இட்லி வரும் அதன் பிறகு தோசையாகவும்,ஊத்தப்பமாகவும் சாப்பிட்டு தீர்க்கனும்.ரொம்ப அலுத்துப்போச்சு என்றால் இருக்கவே இருக்கு சிரங்கூன் சாலை உணவகங்கள்.

மஸ்கட் வந்த நாள் முதலாக இந்த இட்லி/தோசைக்கு ரூவி(இடப்பெயர்) க்கு தான் போகவேண்டி வரும் அதோடு இங்கு கிரைண்டர் இல்லாமல் இருந்தது.கொஞ்ச நாளில் சில கடைகளில் உள்ள தோசைப்பொடி என்ற மாவை வாங்கி 18 மணி நேரம் ஊரவைத்து போட்டு பார்த்தோம்,சரியாக வரவில்லை அதன் பிறகு Ready to Eat மாதிரியான மாவுகளை வாங்கிப்பார்த்தோம்,வயிற்றில் கேஸ் தான் உருவானது-சுவை கிடைக்கவில்லை.என்னுடன் தங்கி இருக்கும் நண்பர் இந்த மாவுகள் உள்ளூர் சூழ்நிலைக்கு பொங்காததால் தான் இட்லி சரியாக வரமாட்டேன் என்கிறது என்று மாவில் ஈஸ்ட் கலக்க ஆரம்பித்தார்,வந்தது வினை-எனக்கு.ஈஸ்ட் போட்ட மாவு பாத்திரத்தை மறு நாள் திறந்தால் அப்படியே வாந்தி எடுக்கவேண்டிய அளவுக்கு துர்நாற்றம் வந்தது அன்றிலிருந்து அந்த பக்கமே போவதில்லை ஆனால் என் நண்பரோ அந்த பிரச்சனை ஏதுமில்லாமல் தொடர்ந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது,அவருக்கு மூக்கில் ஏதும் பிரச்சனையோ என்ற அளவுக்கு சந்தேகம் வந்தது.இதற்கு முன்னால் லிபியாவிலும் இதையே செய்ததாக சொன்னவுடன் சந்தேகம் தீர்ந்தது.வாசம் அவருக்கு பழகிவிட்டது.நம் நண்பருக்கோ காலை இட்லி இல்லாமல் ஒன்றும் முடியாது என்பதால் பழகிவிட்டார் போலும்.

நடுவில் ஊருக்கு சென்று வந்த போது இட்லி மாவு அரைக்க நம் நண்பர் மிக்ஸி ஒன்றை வாங்கி வந்தார் அதன் பிறகு அரிசியை இரவு முழுவதும் ஊற வைத்து அரைத்து ஈஸ்ட் போட்டு மூடி வைத்துவிடுவார்.ஒரு முறை என்னிடம் அந்த மாவை வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளுங்கள் உங்களுக்காகவும் தான் அரைத்து வைத்துள்ளேன் என்றார்.வேறு வழியில்லாமல் என்னுடைய “வாச” பிரச்சனையை சொல்லி இனி எனக்க்காக சேர்த்து அரைக்கவேண்டாம் என்று பதுவுசாக சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.வெகு நாட்களாக அவர் அரைத்தும் ஏனோ இட்லி சொல்லிக்கொள்ளும் மாதிரி வரவில்லை,தோசையும் கொஞ்சம் பிரச்சனையாகத்தான் இருந்தது.இந்த பிரச்சனைக்கு நம் நண்பருடைய குணாதிசியம் கூட காரணம் ஆதாவது தான் பிடித்திருக்கும் முயலுக்கு 3 கால் என்பது தான்.இதை சில நிகழ்வுகள் மூலம் தெரிந்துகொண்ட நான் பல விஷயங்களில் தலையிடாமல் வேடிக்கை பார்பதுண்டு.பல முறை வீட்டுக்கு தேவையான சாமான்கள் வாங்க போகும் போது இந்த இட்லி பிரச்சனை பற்றி பேச்சு எழும் அதுவும் அரிசி தேர்வு செய்யும் போது. நானும் பல முறை புழுங்கல் அரிசியில் முயலுங்கள் அதில் தான் இட்லி சரியாக வரும் என்று சொல்லியும் எங்கேயோ எப்போதோ தவறாக புரிந்துகொண்டு பச்சரியையை வாங்கி முட்டி மோதிக்கொண்டிருந்தார்.இப்படிப்பட சமயத்தில் ஒருமுறை புழுங்கல் அரிசி வாங்கினார்,எதற்கு என்ற கேட்டபோது அவர் வீட்டில் சொன்னார்களாம் அதில் தான் சரியாக வரும் என்று.வந்தார் வழிக்கு,ஆனால் ஈஸ்டை மட்டும் விடவில்லை.

இந்த மாவு பொங்கும் வழிக்கு என் மனைவி சொன்ன சில வழிமுறைகளை செயல்படுத்த வழியில்லாத்தாலும் சில மனம் இல்லாத்தாலும் ஈஸ்ட் வெற்றிபெற்றுக்கொண்டு வந்தது.ஒரு நாள் என்ன தோனியது என்று தெரியவில்லை எனக்கு,மனைவி சொன்ன கணக்கு படி 4 பங்கு அரிசி ஒரு பங்கு உளுந்து தனித்தனியாக ஊற வைத்திருந்தேன்.அன்றிரவு மனைவியுடன் Chat செய்துகொண்டிருக்கும் போது அவ்விஷயத்தை சொல்லி முதல் முறையாக ஊரப்போட்ட விஷயத்தை சொன்னேன்,அதோடு மறு நாள் காலை அரைத்தால் போதுமா? என்று கேட்டேன்.

ஏங்க என்ன அரிசியை புளிக்கவா வைக்கப்போகிறீர்கள்,ஊரவைக்க 2 மணி நேரம் போதும்,புளிக்கதான் நேரமாகும் என்றார்கள்.இது கூட தெரியாமல் இவ்வளவு நாள் இட்லி சாப்பிட்டிருக்கேன்!! என்று நொந்து கொண்டு அரைத்துவைத்தேன் அதோடு சொன்ன மாதிரி கையால் (இது தான் பாயிண்ட்) நன்றாக இரண்டு மாவையும்,தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைத்துவிட்டேன்.

மறு நாள் திறந்து பார்த்த போது ஓரளவு மட்டுமே புளித்து இருந்தது அதோடு அளவாகவும் பொங்கியிருந்தது, அப்படியே மீண்டும் கிளறி விட்டு Fridge உள்ளே வைத்துவிட்டேன்.

எப்போதுமே இரவில் மட்டுமே டிபன் சாப்பிடும் அன்றிரவு நான் செய்த இட்லி சாப்பிட்டேன்.உப்பு சரியாக இருந்தது,பதம் ஓரளவு சுமாராக இருந்தது.உளுந்து கொஞ்சம் குறைவாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.நான் வெறும் கையால் கலந்ததாலா அல்லது ஈஸ்ட் சேர்க்காத மாவு என்பதால் என்னவோ என் நண்பர் அதை முயற்சித்துக்கூட பார்க்காமல் மறு நாளே ஒரு வாரத்துக்கு தேவையான ஈஸ்ட் கலந்த மாவு அரைத்திருந்தார்.

இந்த வாரத்துக்கு தேவையான செய்முறையை மனைவியிடம் வாங்கிவிட்டேன்,செய்த பிறகு சொல்கிறேன்.நேற்று வரை இந்த மாதிரி சமையல் கலை பற்றி ஒரு பதிவு எழுதுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.