Saturday, August 29, 2015

மென்பொருள் எப்படி இருக்க வேண்டும்?

இத்தனை நாட்கள் கணினியில் பெரிய குப்பை கொட்டாவிட்டாலும், மென்பொருளைப் பற்றிய ஆரம்ப அறிவை கொண்டு பார்க்கும் போது இந்த இந்திய வரி செலுத்தும் மென்பொருள் கூட பரவாயில்லை எனலாம். XML/Java என்ற இரு முகப்பு பக்கங்களை கொடுத்து அதன் மூலம் எளிதாகி இருக்கிறார்கள்.நம்மில் பெரும்பாலும் சம்பளம் மற்றும் அதற்கான Form 16 மூலம் செய்வோம்.இம்முறை வங்கி கணக்கெல்லாம் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள்.சரி, மறைக்க ஒன்றும் இல்லாதபட்சத்தில் கொடுப்பதில் பெரிதாக குழப்பம் ஏற்படவில்லை.

இந்த வருடத்துக்கான சமர்பித்தலை செய்து முடித்த இரண்டு வாரங்களில் ஈமெயில் ஒரு காரணத்தை காட்டி அந்த தவறை சரி செய்யுவும் என்று சொல்லியிருந்தார்கள்.சரி என்று அவர்கள் சொன்ன தவறை சரி செய்து மறுபடியும் ஜாவா மூலம் அனைத்து விவரங்களையும் மறுபடியும் உள்ளிட்டு புதிய xml கோபை தயார் செய்துவைத்துக்கொண்டேன்.

தேவையான விபரங்களை கொடுத்துவிட்டு வருமான வரி இணையபக்கத்தில் நுழைந்த உடனே எச்சரிக்கை வரி பிளிங்  ஆகிக்கொண்டிருந்தது. வரிசைக்கிரமாக தேவையான உள்ளீடுகளை கொடுத்தவுடன் அடுத்த பக்கம் போனது அதில் நோட்டீஸ் வந்த விவரங்களை கொடுக்க வேண்டும்.இதில் தான் எனக்கு சந்தேகம். என்னுடைய Pan card , Capcha மற்றும் பிறந்த நாள் மூலம் நுழைய அனுமதித்தவுடன் எதற்காக அந்த நோட்டீஸ் தேதி மற்றும் பெற்றுக்கொண்ட தேதியை கட்டாயமாக்குகிறார்கள்? சரி கட்டாயமாக்கிவிட்டார்கள் அதாவது வேலை செய்கிறதா என்று பார்த்தால் ஒவ்வொரு முறையும் பிழை செய்தியோடு நின்றுவிடுகிறது.இதை அவர்களுடன் தொலைபேசியில் கேட்ட போது சொன்ன கும்சா முறையும் ஒத்துழைக்கவில்லை.

படம் பார்க்க.


இந்த Communication Date & Receipt Date, இதை கட்டாயமாக்கி என்ன சாதிக்கப்போகிறார்கள்? இவை இரண்டும் இல்லாவிட்டால் குடியா முழுகிப்போகிவிடும்.என்னுடைய கோப்பு தான் என்பதற்கான ஆதாரங்களை கொடுத்த பின்னும் தேதிகளின் மூலம் செக் செய்வது என்ன முறையோ?

மென்பொருள் தயாரிப்பில் இருக்கும் நண்பர்கள் விளக்கினால் இன்னும் புரிந்துகொள்வேன்.

Sunday, August 09, 2015

ஒழுங்கீனங்கள்.

எல்லா துறையில் இருக்கிற  மாதிரி கட்டுமானத்துறையிலும் ஒழுங்கீனங்கள் ஒரு பகுதியாகவே இருந்துகொண்டு வருகிறது. இதற்கான காரணங்கள் கல்லூரியில் சரியாக சொல்லிக்கொடுக்கவில்லையா அல்லது படிக்க ஆர்வம் இல்லாமல் ஏதோ ஒரு டிகிரி வாங்கிட துடிக்கும் மாணவர்களா அல்லது வேலையிடத்தில் சரியான தலைமையில்லையோ என்னவோ!ஆண்டவனுக்கே வெளிச்சம்.

நான் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் ஒரு கொடி மரம் நிறுத்த ஒரு சின்ன அஸ்திவாரம் போட நேற்று தோன்றினார்கள், இன்று காலை தேவையான முட்டு எல்லாம் கொடுத்து மாலை 2 மணி போல் கான்கிரீட் போட்டார்கள்.இதுவரை அவ்வளவாக பிரச்சனையில்லை


முட்டுக்கு தேவையான சமாச்சாரங்களை பாருங்கள்.இரண்டு பக்கம் பிளைவுட்,ஒரு பக்கம் செங்கல்.அவ்வளவு தான். கான்கிரீட் போட ஒரு அரை மணி நேரம் ஆனது. மாலை 5 மணிக்கு ஏதேச்சையாக பார்த்த போது முட்டு எல்லாம் எடுத்துவிட்டு கான்கிரீட் அம்மணமாக  நின்றது. கான்கிரீட் போட்ட பிறகு இந்த முட்டெல்லாம் 24 மணி நேரத்துக்கு கை வைக்கக்கூடாது என்பது பொதுவாக கடைபிடிக்கப்படும் விதி. ஆமாம் அப்படி என்ன அவசரம், கான்கிரீட் போட்ட 3 அல்லது 4 மணி நேரத்துக்குள் முட்டு எடுப்பதில்?
காசு தான்.


ஆதாவது ஒரு செங்கல் விலை 5 ~ 6 ரூபாய்.கான்கிரீட் இறுகிவிட்டால் அதன் பிறகு அந்த செங்கல்லை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கான்கிரீட் இறுகுவதற்குள் எடுத்துவிட்டால் அதை வேறு எங்காவது உபயோகப்படுத்துவிடலாம். இது ஒரு சின்ன வேலை தானே அதனால் இது ஒன்றும் பெரிய விபத்தையோ தரத்தை பாதிக்காது என்று சொல்லலாம்.சின்ன சின்னத் துளி தான் பெருவெள்ளம்.இந்நிருவனத்தின் பொறியாளர் இதை தடுத்திருந்தால் வேலை செய்யும் தொழிலாளிக்கும் அதன் காரண காரியம் புரிந்திருக்கும் ஒரு சரியான அனுகு முறை அடுத்த நிலைக்கு கடத்தப்பட்டிருக்கும் but Gone.

சரி இது சின்ன வேலை தானே என்று மனதை சமாதப்படுத்திக்கொண்டிருக்கும் போதே சில வாரங்களுக்கு முன்பு குரோம்பேட்டை போக வேண்டியிருந்தது அப்போது ஒரு வீட்டு வேலை நடந்துகொண்டிருந்தது. சாலையின் ஒரு பக்கத்தில் ஜல்லி,மணல் மற்றும் சிமிண்டை போட்டு கலக்கி பரப்பி வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலக்கி போட்டுக்கொண்டிருந்தார்கள். இப்படி போடுவது ஒரு கும்சா அளவுடன் போடப்படுவது (படம் கீழே.)



இப்படி போடுவது தான் பலங்காலமாக நம் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது. இது ஒரு சரியான முறையே அல்ல இப்படி போடும் கான்கிரீட் ஸ்ரெண்த் நிர்ணயிக்க முடியாதது. ஆண்டாண்டு காலம் வாழ உள்ள வீட்டை இப்படித்தான் சிறு நிலை ஒப்பந்தக்காரர்கள் கட்டுகிறார்கள் அதற்கு நாமும் கொட்டிக்கொடுக்கிறோம். மேலே உள்ள படத்தில் உள்ள தூண் கான்கிரீட் எப்படியுள்ளது என்று பாருங்கள்.இந்த வீட்டின் உரிமையாளர் “பாவம்”.

சிறிய நிலை ஒப்பந்தக்காரர்கள் தான் இப்படி செய்கிறார்கள் என்றார் ஓரளவு நல்ல நிலையில் உள்ள நிறுவனங்களில் உள்ள பொறியாளர்களின் செயல்பாடுகள் மிகவும் வருத்தத்தையே வரவழைக்கும் முறையில் இருப்பதை சில மாதங்களுக்கு முன்பு கண்டேன்.தவறு தெரிய வந்தவுடன் உடனடியாக தேவையான ஏற்பாடுகளை செய்து சரி செய்ய உத்தரவிட்டேன்.

Column & Beam இரண்டும் சேரும் இடம் மிகவும் முக்கியமானது. வரை படத்தில் கொடுத்திருக்கிற மாதிரி செய்யாவிட்டால் பின்னாளில் பிரச்சனை உண்டாகக்கூடும்.



ஓரிடத்தில் தொடர் வீடுகளுக்காக அஸ்திவாரம், தூண் மற்றும் அதன் மீது உட்காரும் Beam என்ற முறையில் ஏற்பாடு. தூணின் கம்பி (4) அதன் மேல் உட்காரும் Beam யின் உள்ளே தேவையான அளவு இருக்கவேண்டும். ஆனால் அங்குள்ள பொறியாளர் வெறும் இரண்டு கம்பி மட்டுமே இருக்கிற மாதிரி வைத்து கான்கிரீட் போட்டுவிட்டார்கள்.இது ஒரு மோசமான முடிவு, பிறகு தேவையான அளவு தூணை உடைத்து,கம்பி கட்டி சரி செய்யச்சொல்லிவிட்டு வந்தேன். செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இது ஏதோ ஓரிடம் ஏரிடம் என்று இல்லை பரவலாக காணப்படுவதே மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கு.