Tuesday, February 13, 2007

பிரசாந்தி நிலையம்

போன பதிவு

போன பதிவில் எங்களுக்கு புட்டபர்த்தியில் பல வேலைகள் கிடைத்ததை பற்றி சொல்லியிருந்தேன்.அதன் பிறகு வேறு பெரிய வேலை எதுவும் கிடைக்காத பட்சத்தில் எனக்கு அங்கு போகச்சொல்லி கடிதம் வந்தது.

பாபாவை விமர்சித்ததற்கு உடனே பலன் கிடைத்துவிட்டது.

இளம் வயது,வீரியம் அதிகம், அதனால் எதற்கும் கவலைப்படாமல் திரும்ப பெட்டிகளை கட்ட ஆரம்பித்தேன்.

ஆமாம் இந்த புட்டபர்த்தி எங்கிருக்கு?கீழே உள்ள படத்தை பார்க்கவும்.



சென்னையில் இருந்து நேரடி பேருந்து வசதி அப்போது இருந்தது.இன்று இருக்கிறதா என்று தெரியவில்லை.


தேவையான விபரங்களை வாங்கிக்கொண்டு கொஞ்ச நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு சென்னை போய் பிறகு புட்டபர்த்தி போகலாம் என்று முடிவுசெய்தேன்.

சென்னை வந்து சில காலம் சுற்றிவிட்டு, புட்டபர்த்திக்கு ஆந்திர போக்குவரத்து கழக பேருந்து நமது பழைய பாரீஸ் கார்னரில் இருந்து புறப்படும்,அதில் முன்பதிவு செய்துகொண்டு (ரூபாய் 87 என்று ஞாபகம்)புறப்பட்டு போனேன்.இதில் உள்ள இருக்கைகளுக்கு இடையே உள்ள இடைவெளி மிக மிக குறுகியதாக இருக்கும்.மேல் நாட்டவர்கள் அதிகமாகவே சிரமப்படுவார்கள்.

இரவு சுமார் 8 மணிவாக்கில் கிளம்பி காடு மேடுகளைத்தாண்டி காலை சுமார் 7 மணிக்கு புட்டபர்த்தி வந்துசேர்ந்தேன்.

மிகச்சிறிய பஸ் நிலையம்.இறங்கியதும் எங்கு போவது என்று தெரியாமல் ஏதோ ஒரு திசையை நோக்கி போய்கொண்டிருந்தேன்.

கையில் இருக்கும் ஒரே விலாசம் "பிராசாந்தி" நிலையம்.அது என்ன இடம்?யார் இருக்கிறார்கள் என்று எதுவும் தெரியாமல்,வழியில் உள்ளவர்களிடம் விஜாரித்து போனேன்.

வாசலில் "பிராசாந்தி" நிலையம் போர்டு பார்த்து உள்ளே போனேன்.ஒரு விதமான அமைதி.அதை விளக்குவது கஷ்டம்.பல காலங்கள் கழித்து இந்த மாதிரி இடங்களுக்கு போன போது என்னையறியாமலே இதை உணர்ந்தேன்.

வெள்ளை சீருடையில் பல மக்கள் எறும்புகளை போல் சாரி சாரியாக ஒரு திசையை நோக்கி போய்கொண்டிருந்தார்கள்.எங்கு போகிறார்கள் எதற்கு போகிறார்கள் என்று தெரியாமல் அவர்களை கொஞ்சம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

கொஞ்சம் நேரம் கழித்து,ஒருவரை அனுகி,நான் எல் & டி கம்பெனியில் வேலை செய்ய வந்துள்ளேன்.அவர்கள் அலுவலகம் எங்குள்ளது என்று காட்டமுடியுமா? என்றேன்.

அவர், நான் உள் நுழைந்த வாசலைக்காட்டி அங்கு காத்திருங்கள் உங்கள் ஜீப் வரும்,அவர்களை விஜாரித்தால் சொல்வார்கள் என்று எனக்கு மட்டுமே கேட்கக்கூடிய அளவில் சொல்லிவிட்டு,இன்னும் கொஞ்ச நேரத்தில் பஜன் ஆரம்பித்துவிடும் அதனால் வெளியில் காத்திருங்கள் என்றார்.அப்போது தான் புரிந்தது நான் பாபா தரிசனம் தரும் இடத்துக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தது.

வெளியில் வந்து காந்திருந்த கொஞ்ச நேரத்தில் ஜீப் வந்தது.விபரம் சொன்னவுடன்,புற வழியில் போய் அலுவலகத்துக்கு போனேன்.

இங்கிருந்த ரெசிடென்ட் இன்ஜினியர் திரு.ரகுராமன்,முன்னமே மேட்டூரில் பழக்கமானவர் மற்றும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்தவர்.மெதுவாகப்பேசக்கூடியவர்.

நான் போன சமயத்தில் இவர் தலைமையில் பக்தர்கள் தங்குவதற்காக பல மாடிகள் கொண்ட வீடுகளை கட்டிக்கொண்டிருந்தார்கள்.வெளிப்புற வேலைகள் முடிந்து உள் பூச்சு/ அலங்கார வேலைகள் நடந்துகொண்டிருந்தது.

அப்போது, கட்டிய வீடுகள் பக்தர்களுக்கு விற்கப்பட்டது.சுமார் 1 இலட்சம்.புட்டபர்த்தி வரும் போது தங்கிக்கொள்ளலாம்.மற்ற நேரத்தில் ஆசிரமம் தேவையானால் உபயோகித்துக்கொள்ளும். இந்த அடிப்படையில் எல்லா வீடுகளும் விற்கப்பட்டன.

இந்த தங்கும் விடுதி கூட மிக விரைவாக கட்டிமுடிக்க சாதாரண தொழிற்நுட்பத்துக்கு பதிலாக முன்னமே கட்டப்பட்டு தேவையான இடத்துக்கு கொண்டுவந்து தீப்பெட்டி மாதிரி அடிக்கிவைக்கிற மாதிரி கட்டினோம்.

நான் போகும் போது இந்த வீட்டு வேலை முடியும் தருவாயில் இருந்தது.

இப்படி எங்கள் வேலை போய்கொண்டிருக்கும் போது ஆசிரமத்தில் மேலும் ஒரு வேலை கொடுத்தார்கள்.அது தான் கேன்டின்.

புட்டபர்த்தியில் விரல் விட்டு எண்ணக்கூடிய விடுதிகளும் சாப்பாட்டு விடுதிகளும் தான் இருந்தது.இதனால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் படும் அவஸ்தையை சொல்லிமாலாது,அதுவும் பாபாவின் பிறந்த நாள் என்றால் கேட்கவேண்டாம்.


உணவு உண்ண சரியான இடம் கிடையாது.அதை மனதில் வைத்துக்கொண்டு,ஒரு கேன்டீன் கட்ட தயாராகுமாறு சொன்னார்கள்.

இது அத்தனையும் ஆஸ்ரமத்தின் உள்ளேயே நடந்தது.பல தேசங்களில் இருந்து வந்த பக்தர்கள்,எப்போது கூட்டம் கூட்டமாக வந்து போய்கொண்டிருப்பார்கள்.
ஒரு சமயம் இந்த விடுதிக்கான அஸ்திவாரம் போடும் போது ஒரு பக்தர் கூட்டத்தில் இருந்த ஒரு சில பெண்கள் வந்து ஒரு கட்டு காகிதத்தை கொடுத்து " இது சாய்ராமுக்காக எழுதியது,அந்த அஸ்திவாரத்தில் போட்டு மூடமுடியுமா?" என்றார்கள்.

என்னது கான்கீரீட் உள்ளே காகிதக்கட்டா?

வாங்க அடுத்த பதிவுக்கு.

4 comments:

துளசி கோபால் said...

எப்பவாவது சிலசமயம் (கதைகள் & சினிமாக்களில்தான் ) நரபலி கொடுத்தோ அல்லது
வேண்டாவங்களைப் போட்டுத்தள்ளியோ கட்டடம் கட்டும்போது காங்க்ரீட் குழிகளில்
போட்டு கொலையை மறைச்சுருவாங்கன்னு கேள்விப்பட்டது உண்மையா இருக்கும்
வாய்ப்பு உண்டா குமார்?

வடுவூர் குமார் said...

நான் கேள்விப்பட்ட வரையில்..
வேண்டாத அல்லது மனிதனை மதிக்கத்தெரியாத பொறியாளரை போட்டுத்தள்ளி விடுவதாக கேள்விப்பட்டுள்ளேன்,ஆனால் நேரில் பார்த்ததில்லை. :-))
அதுவும் பெரிய அளவில் நடக்கும் டேம் அல்லது காடுகளில் நடக்கும் வேலைகளில் இது சாத்தியம்.
நரபலி- இதுவும் ஒரு யூகம் தான்.
ஆனால் மலேசியாவில் யாரோ கிளப்பிய வதந்தியில் எங்களைப்பார்த்தாலே கதவை மூடிக்கொண்டு ஓடிய மனிதர்களை பார்த்திருக்கேன்.

VSK said...

இப்போதுதான் பார்த்தேன்!
புட்டபர்த்தி வீடுகளில் உங்கள் பங்கும் இருந்திருக்கிறதா?!!

சாயிராம்!

வடுவூர் குமார் said...

அவ்வளவாக இல்லை.நான் போய் சேர்ந்த போதே,வீட்டின் உள் அலங்கார வேலைகள் நடக்க ஆரம்பித்துவிட்டது.
கொஞ்சம் அங்கு இங்கு என்று ஆசிரமம் உள்ளே சில வேலைகள் பார்த்தேன்.
சம்பளம் கொடுத்து அவர் பக்கத்தில் வைத்துக்கொண்டார் என்று "இப்போது" தோன்றுகிறது.