Thursday, February 11, 2010

இட்லி

சிங்கையில் இருந்தவரை இட்லி/தோசைக்கு அவ்வளவாக பிரச்ச்னையில்லாமல் இருந்தது.மனைவி கூட இருந்த வரை அவர்கள் முறையில் கிரைண்டரில் போட்டு அரைத்து செய்துவிடுவார்கள்.தனி வாழ்கையின் போது ரெடிமேடாக கிடைக்கும் மாவில் தேவையான அளவு உப்பை போட்டு வைத்துவிட்டால் ஒரு வாரத்துக்கு கவலையில்லாமல் இருக்கலாம் ஆனால் இந்த மாவில் முதல் இரண்டு நாள் தான் இட்லி வரும் அதன் பிறகு தோசையாகவும்,ஊத்தப்பமாகவும் சாப்பிட்டு தீர்க்கனும்.ரொம்ப அலுத்துப்போச்சு என்றால் இருக்கவே இருக்கு சிரங்கூன் சாலை உணவகங்கள்.

மஸ்கட் வந்த நாள் முதலாக இந்த இட்லி/தோசைக்கு ரூவி(இடப்பெயர்) க்கு தான் போகவேண்டி வரும் அதோடு இங்கு கிரைண்டர் இல்லாமல் இருந்தது.கொஞ்ச நாளில் சில கடைகளில் உள்ள தோசைப்பொடி என்ற மாவை வாங்கி 18 மணி நேரம் ஊரவைத்து போட்டு பார்த்தோம்,சரியாக வரவில்லை அதன் பிறகு Ready to Eat மாதிரியான மாவுகளை வாங்கிப்பார்த்தோம்,வயிற்றில் கேஸ் தான் உருவானது-சுவை கிடைக்கவில்லை.என்னுடன் தங்கி இருக்கும் நண்பர் இந்த மாவுகள் உள்ளூர் சூழ்நிலைக்கு பொங்காததால் தான் இட்லி சரியாக வரமாட்டேன் என்கிறது என்று மாவில் ஈஸ்ட் கலக்க ஆரம்பித்தார்,வந்தது வினை-எனக்கு.ஈஸ்ட் போட்ட மாவு பாத்திரத்தை மறு நாள் திறந்தால் அப்படியே வாந்தி எடுக்கவேண்டிய அளவுக்கு துர்நாற்றம் வந்தது அன்றிலிருந்து அந்த பக்கமே போவதில்லை ஆனால் என் நண்பரோ அந்த பிரச்சனை ஏதுமில்லாமல் தொடர்ந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது,அவருக்கு மூக்கில் ஏதும் பிரச்சனையோ என்ற அளவுக்கு சந்தேகம் வந்தது.இதற்கு முன்னால் லிபியாவிலும் இதையே செய்ததாக சொன்னவுடன் சந்தேகம் தீர்ந்தது.வாசம் அவருக்கு பழகிவிட்டது.நம் நண்பருக்கோ காலை இட்லி இல்லாமல் ஒன்றும் முடியாது என்பதால் பழகிவிட்டார் போலும்.

நடுவில் ஊருக்கு சென்று வந்த போது இட்லி மாவு அரைக்க நம் நண்பர் மிக்ஸி ஒன்றை வாங்கி வந்தார் அதன் பிறகு அரிசியை இரவு முழுவதும் ஊற வைத்து அரைத்து ஈஸ்ட் போட்டு மூடி வைத்துவிடுவார்.ஒரு முறை என்னிடம் அந்த மாவை வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளுங்கள் உங்களுக்காகவும் தான் அரைத்து வைத்துள்ளேன் என்றார்.வேறு வழியில்லாமல் என்னுடைய “வாச” பிரச்சனையை சொல்லி இனி எனக்க்காக சேர்த்து அரைக்கவேண்டாம் என்று பதுவுசாக சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.வெகு நாட்களாக அவர் அரைத்தும் ஏனோ இட்லி சொல்லிக்கொள்ளும் மாதிரி வரவில்லை,தோசையும் கொஞ்சம் பிரச்சனையாகத்தான் இருந்தது.இந்த பிரச்சனைக்கு நம் நண்பருடைய குணாதிசியம் கூட காரணம் ஆதாவது தான் பிடித்திருக்கும் முயலுக்கு 3 கால் என்பது தான்.இதை சில நிகழ்வுகள் மூலம் தெரிந்துகொண்ட நான் பல விஷயங்களில் தலையிடாமல் வேடிக்கை பார்பதுண்டு.பல முறை வீட்டுக்கு தேவையான சாமான்கள் வாங்க போகும் போது இந்த இட்லி பிரச்சனை பற்றி பேச்சு எழும் அதுவும் அரிசி தேர்வு செய்யும் போது. நானும் பல முறை புழுங்கல் அரிசியில் முயலுங்கள் அதில் தான் இட்லி சரியாக வரும் என்று சொல்லியும் எங்கேயோ எப்போதோ தவறாக புரிந்துகொண்டு பச்சரியையை வாங்கி முட்டி மோதிக்கொண்டிருந்தார்.இப்படிப்பட சமயத்தில் ஒருமுறை புழுங்கல் அரிசி வாங்கினார்,எதற்கு என்ற கேட்டபோது அவர் வீட்டில் சொன்னார்களாம் அதில் தான் சரியாக வரும் என்று.வந்தார் வழிக்கு,ஆனால் ஈஸ்டை மட்டும் விடவில்லை.

இந்த மாவு பொங்கும் வழிக்கு என் மனைவி சொன்ன சில வழிமுறைகளை செயல்படுத்த வழியில்லாத்தாலும் சில மனம் இல்லாத்தாலும் ஈஸ்ட் வெற்றிபெற்றுக்கொண்டு வந்தது.ஒரு நாள் என்ன தோனியது என்று தெரியவில்லை எனக்கு,மனைவி சொன்ன கணக்கு படி 4 பங்கு அரிசி ஒரு பங்கு உளுந்து தனித்தனியாக ஊற வைத்திருந்தேன்.அன்றிரவு மனைவியுடன் Chat செய்துகொண்டிருக்கும் போது அவ்விஷயத்தை சொல்லி முதல் முறையாக ஊரப்போட்ட விஷயத்தை சொன்னேன்,அதோடு மறு நாள் காலை அரைத்தால் போதுமா? என்று கேட்டேன்.

ஏங்க என்ன அரிசியை புளிக்கவா வைக்கப்போகிறீர்கள்,ஊரவைக்க 2 மணி நேரம் போதும்,புளிக்கதான் நேரமாகும் என்றார்கள்.இது கூட தெரியாமல் இவ்வளவு நாள் இட்லி சாப்பிட்டிருக்கேன்!! என்று நொந்து கொண்டு அரைத்துவைத்தேன் அதோடு சொன்ன மாதிரி கையால் (இது தான் பாயிண்ட்) நன்றாக இரண்டு மாவையும்,தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைத்துவிட்டேன்.

மறு நாள் திறந்து பார்த்த போது ஓரளவு மட்டுமே புளித்து இருந்தது அதோடு அளவாகவும் பொங்கியிருந்தது, அப்படியே மீண்டும் கிளறி விட்டு Fridge உள்ளே வைத்துவிட்டேன்.

எப்போதுமே இரவில் மட்டுமே டிபன் சாப்பிடும் அன்றிரவு நான் செய்த இட்லி சாப்பிட்டேன்.உப்பு சரியாக இருந்தது,பதம் ஓரளவு சுமாராக இருந்தது.உளுந்து கொஞ்சம் குறைவாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.நான் வெறும் கையால் கலந்ததாலா அல்லது ஈஸ்ட் சேர்க்காத மாவு என்பதால் என்னவோ என் நண்பர் அதை முயற்சித்துக்கூட பார்க்காமல் மறு நாளே ஒரு வாரத்துக்கு தேவையான ஈஸ்ட் கலந்த மாவு அரைத்திருந்தார்.

இந்த வாரத்துக்கு தேவையான செய்முறையை மனைவியிடம் வாங்கிவிட்டேன்,செய்த பிறகு சொல்கிறேன்.நேற்று வரை இந்த மாதிரி சமையல் கலை பற்றி ஒரு பதிவு எழுதுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

13 comments:

Anonymous said...

Mixing with hand is the trick. Also, the flour should be nicely ground. Mix it thoroughly. 4:1 is OK. (if not good, try 4:1.5)
Raja

ஹுஸைனம்மா said...

முதல் (நல்ல) இட்லிக்கு வாழ்த்துக்கள்!! முயற்சி திருவினையாக்கும்.

(சத்தியமா கிண்டல் பண்ணலைங்க)

sathish said...

nice to read, i am in rusail

வடுவூர் குமார் said...

வாங்க ஹூஸைனம்மா,ஜல்லி-மணல்-தண்ணீர்- சிமிண்ட் க்கு அடுத்ததா? என்று கேட்காமல் விட்டீர்களே!!:-))
நன்றி.

வடுவூர் குமார் said...

வாங்க ராஜா,இட்லி சாப்பிடும் போது இன்னும் நைசாக அரைக்கவேண்டும் என்று நினைத்தேன் அதையே நீங்களும் சொல்லிவிட்டீர்கள்.
வருகைக்கு நன்றி.

வடுவூர் குமார் said...

Thanks Sathish.
I am still new to Muscat,let me see where is Rusail.

வடுவூர் குமார் said...

சதீஷ் இங்கிருந்து தெற்கே 45 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறீர்களா?கூகிளாண்டவர் சொல்கிறார்.சமயம் கிடைக்கும் போது சந்திக்கலாம்.

கண்ணா.. said...

ரெண்டு இட்லி பார்சல்ல்................

வடுவூர் குமார் said...

கண்ணா,பார்சல் அனுப்பியாச்சு பில் பிறகு வரும். :-)

Unknown said...

இட்லி உள்ள இவ்வளவு விசயமா?விடுமுறையையில் இது மாதிரி ஏதாவது ரிஸ்க் எடுக்கலாம் னு இருக்கேன்.அப்புறம் உங்களது போன் நம்பர் வேனும் சார்.96330174 இது என்னோடது.

வடுவூர் குமார் said...

மின்னல் நான் கூப்பிடுகிறேன்.என்னடைய தொலைப்பேசி புஸ்ஸாகிவிட்டது வேறு வாங்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

பத்மநாபன் said...

வணக்கம் , மின்னல் முலமாக உங்களை அறிந்தேன் ... அருமையான வலைபூக்கள் ... கட்டுமானத்துக்கு பின்னூட்டம் போடுவதா , லினக்ஸ் க்கு போடுவதா என்று யோசிக்கும்பொழுது ... இட்லி கண்ணில் பட்டு விட்டது ...எப்படி தாண்ட முடியும் .. முயற்சி வெற்றியாக வாழ்த்துக்கள் . நண்பரோடு மஸ்கட்டில் இருக்கும்பொழுது , நாங்களும் படாத பட்டு இருக்கிறோம் ... உங்கள் பதிவில் இருக்கும் ஒரு வரி கூட மாறாத வகையில் என் நண்பரும் பல முயற்சிகள் செய்துள்ளார் . கிட்டததட்ட வெற்றியும் (75%) பெற்று விட்டார் . (திருச்சியில் அவர் வீட்டில் சாப்பிட்டேன் , 100% கட்சிதமாக இருந்தது , மனைவியர் சில இட்லி சூத்திரங்களை முழுமையாக சொல்வதில்லை என்பது புரிந்தது ).. இப்போது வனத்திற்குள் வந்து விட்டேன் மெஸ்ஸில் வாரம் ஒருமுறை -- 50 % தேறும். உதகை குந்தாவில் இருக்கும்பொழுது , ஒருவனுக்கு என்பதால் துணி இட்லி செய்வேன் - சில, பல கலவை குறைகளை '' துணி'' சரி செய்து விடுகிறது .. என் அனுபவம் ..
முயற்சித்து பாருங்கள். கலவையை பொறுத்து துணியில் ஒட்டிக்கொள்ளும் அளவு மாறும் ..ஆனால் ''மிருது '' கேரண்டி... விட்டால் எழுதிக்கொண்டே இருப்பேன் ... அடிக்கடி வருகிறேன் உள்ளூர் தானே ( என்ன 700 km தெற்க்கே ). ஆரம்ப முயற்சியாக நானும் ஒரு வலைப்பூ தொடங்கி உள்ளேன் .. welcome

வடுவூர் குமார் said...

வாங்க‌ ப‌த்ம‌னாப‌ன்
உங்க‌ ரிச‌ர்ச் எங்கேயே போயிடுச்சே!! நான் அவ்வ‌ள‌வெல்லாம் முய‌லுவ‌தில்லை.
முத‌ல் வ‌ருகைக்கு ந‌ன்றி.