Thursday, February 18, 2010

தொப்பை தள்ளுது.

போன வாரம் முழுவதும் அடை சாப்பிடனும் போல உணர்வு அதற்காக அதை தேடி உணவகம் போகவும் அலுப்பு,சரி இட்லி தான் போன பதிவில் போட்டாச்சே அதே மாதிரி தானே இதுவும் இருக்கப்போகிறது என்று கூகிளிடம் தேடினேன்.ஒரு பதிவில் இருந்தது மிக சுலபமாக இருந்தது,ஆதாவது கடலை மாவையும் கோதுமை மாவையும் 2:1 என்ற விகிதத்தில் கலந்து கொஞ்ச நேரம் ஊற வைத்து தேவையான உப சாமான்களை போட்டு செய்திடலாம் என்றிருந்தது.இவ்வளவு சுலபமாக இருக்கே என்று கடை கடையாக கடலை மாவுக்காக தேடிய போது தெரிந்தது இங்கு கடலைமாவாக கிடைக்காது என்று.அரை மனதுடன் அரை கிலோ கடலை பருப்பை வாங்கினேன்.இதையெல்லாம் மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னேன்,அவர்கள் இதைவிட இப்படி செய்து பாருங்கள் இன்னும் நன்றாக வரும் என்று சொன்னார்.

புழுங்கல் அரிசி - 1 பங்கு
கடலை பருப்பு(கொஞ்சம் அதிகமாக இருக்கட்டும்),உளுத்தம் பருப்பு & துவரம் பருப்பு - 0.5 பங்கு

இவை இரண்டையும் தனித்தனியே கொஞ்ச நெரம் ஊற வைத்துவிட்டு கொஞ்சம் காய்ந்த மிளகாயுடன் கிரைண்டரில் அரைத்து தேவையான உப பொடிகளை பொட்டுக்கொள்ளவும்.எப்போது அடை வார்க்க வேண்டுமோ அதற்கு முன்பு சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை & பச்சை மிளகாய் & கொத்தமல்லியை பொடி செய்து போட்டு கலக்கிவிடவும்.மாவுடன் மிக முக்கியமாக கொஞ்சம் நல்ல எண்ணெய் சேர்த்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள்.புழுங்கல் அரிசியை தேடியபோது தான் தெரிந்தது அது வீட்டில் இலை என்று அதற்காக கவலைப்படாமல் பச்சரிசியை உபயோகித்தேன்.

அவ்வளவு தான்.

இப்படியெல்லாம் செய்து Non-Stick Pan யில் போட்டு கரண்டி கொண்டு திருப்பலாம் என்று பார்க்கும் போது அப்படியே தன்னாலேயே வழுக்கிக்கொண்டு வந்துவிட்டது.எப்படி இருக்கு என்று பார்க்க...



சரி அதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா?

இந்த படத்தை அலைபேசியில் எடுத்துவிட்டு பதிவில் இணைக்கலாம் என்று கணினியுடன் இணைத்த போது Screen அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சாக ஆரம்பித்தது.கணினியில் இருந்து விடுப்பித்து மின்கலத்தை எடுத்து நானும் என்னனென்வோ முயற்சிக்க இயங்க மறுத்தது அலை பேசி.போச்சு போச்சு என்று நினைத்துக்கொண்டு அதை எங்கு கொடுக்கலாம் என்று யோசிக்கும் போது ரூவி தான் ஞாபகம் வந்தது.அங்கு தான் இந்த மாதிரி வேலைகளை செய்ய பல கடைகள் பார்த்த ஞாபகம்.

சாயங்காலம் நடைபயிற்சி போகும் போது அப்படியே இவ்வேலையையும் முடித்துவிடலாம் என்றெண்ணி Qurm Park பக்கம் போனேன்,அங்கு தான் வாடகை மகிழுந்து கிடைக்கும்.வந்த ஓட்டுனரிடம் எவ்வளவு என்று கேட்டேன்,400 பைசா என்றார்,சரி என்று உள்ளே அமர்ந்தேன்.மேலும் சிலரும் நான் போகும் இடத்துக்கு போக ஏறியவர்கள் பேரம் பேசி 300 காசுக்கு பயணித்தார்கள்.

Ruwi இந்த இடம் சிங்கை சிரங்கூன் சாலையோடு ஒப்பிடலாம்.தொழிலாளர் கூட்டம் அதோடு பல விதமான கடைகள் என்று ஓய்வு நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.இது வரை இங்கு மகிழுந்துவில் மட்டுமே சென்றதால் பல சாலைகளில் உள்ள கடைகள் கண்ணில் படாமல் இருந்தன.சரி வந்த வேலையை பார்ப்போம் என்று சில கடைகளில் அலைபேசியை காண்பித்து ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டேன்.ஒரு கடையில் ஹமிரியா(இடம்) சென்றால் முடியும் என்றார்கள்,சிலர் முடியாது என்றார்கள்.சோனி எரிக்‌ஷன் என்றாலே ஒரு மாதிரி விலகிவிடுகிறார்கள்.

ஒரே ஒரு கடையில் மத்திரம் Soft Reset செய்து பார்ப்போம் சரியானால் 3 ரியால் கொடுங்கள் என்றார். சரி என்றேன்.என்னென்வோ முயற்சித்தும் சரியாகவில்லை அலைபேசியை திறந்து பார்த்து தான் முடியுமா?முடியாதா என்று சொல்லமுடியும் என்று சொன்னார்கள்.அதற்கு எவ்வளவு ஆகும் என்றேன்.சரியாக சொல்லமுடியாது எப்படியும் 6 முதல் 7 வரை ஆகலாம் என்றார்.சரி என்று ஒத்துக்கொண்டு அலைபேசியை கொடுத்துவிட்டு வந்தேன்.அதில் வைத்திருந்த கடவு சொல் மற்றும் மேலும் பல விபரங்கள் கிடைக்குமா என்று தெரியவில்லை எனக்கு கிடைக்காவிட்டாலும் அவர்களுக்கு கிடைக்காமல் இருந்தாலே பெரிய தொந்தரவு இருக்காது.

நேரம் அதிகமாக இருந்ததால் ரூவியை சுற்ற ஆரம்பித்தேன்.புதிதாக திறந்திருக்கும் Mars என்னும் கடை தொகுதியில் சுற்றிய பிறகு பக்கத்தில் உள்ள KM கடைதொகுதிக்குள் போனேன்.இங்கு ஓரிரு முறை சென்றிருப்பதால் என்னென்ன சாமான்கள் எங்கு இருக்கும் என்பது தெரிந்திருந்தது.புழுங்கல் அரிசியை தேடிய போது தஞ்சை புழுங்கல் இட்லி அரிசி என்று போட்டே விற்கிறார்கள்.இரண்டு பாக்கெட்டுகள் வாங்கிக்கொண்டேன்.

இந்த கடைத்தொகுதியில் எப்போதுமே பணம் கட்டும் இடத்தில் கூட்டம் நின்று கொண்டிருக்கும்.நபர்கள் குறைவாக இருக்கும் வரிசையை கண்டுபிடித்து நின்றேன்.நின்ற கொஞ்ச நேரத்துக்கெல்ல்லாம் என் பின்னால் ஏதோ உரசுவது போல் இருந்தது.கொஞ்சம் முன்னே போனேன்,இம்முறையும் உரசல் தொடர்ந்தது.திரும்பிப்பார்த்தால் ஒரு இந்தியர் மலையாள சேட்டன் தொப்பை யால் என்னை முட்டிக்கொண்டிருந்தார்.எனக்கு சிறிய கோபம் வந்தாலும் அதையும் மீறி பயங்கர சிரிப்பு தான் வந்தது ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு தான் சிங்கை செய்தித்தாளில் இப்பிரச்சனையை அலசியிருந்தார்கள்,ஆதாவது அங்கு ATM வரிசையில் நிற்கும் போது தேவையான இடவெளி விட்டு சிலர் நிற்பதில்லை என்றும் பக்கத்தில் இருப்பவர்கள் மேல் ஈஷிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் போட்டிருந்தார்கள்.இதில் முதலிடம் பங்களாதேசிகளுக்கும் அடுத்து நம் மக்களும் இருந்தார்கள்.அதுவும் நம் ஊரில் இருந்து வரும் டூரிஸ்டுகள் கூட வரிசையில் நிற்கும் போது இப்படித்தான் இட்டித்துக்கொண்டு நிற்பதை பல முறை பார்த்திருக்கேன்.இதெல்லாம் மனதில் ஓடியதால் என்னை ஒட்டிக்கொண்டு நிற்பவர் மீது கோபம் வராமல் சிரிப்பு தான் வந்தது.

12 comments:

பத்மநாபன் said...

அட .....அடை செய்யறது இவ்வளவு ஈஸியா .... தண்டியான பதிவவை பார்த்தவுடன், இட்லி சிரமங்கள் இதுலயும்
பட்டு இருப்பிங்களோ படிக்க ஆரம்பிச்சேன் .. சிரமம் இல்லாமல் அடையை தவாவில் சுட்டு அதை விட அழகாக கேமராவிலும் சுட்டு விட்டீர்கள் . என்னதான் நாம கம்ப்யூட்டர் ல பெரிய பெரிய ப்ரோக்ராம் போட்டாலும் , சில்வண்டு செல் போன் சரி செய்வதற்கு '' வடிவேல் '' மாதிரி சுத்தியோட இருக்கறவங்க கிட்டதான் போக வேண்டியிருக்கு. யானைக்கு மணியோசை மாதிரி , அவர் எங்கியோ நிக்கறாரு , அவரோட தொப்பை முட்டுனதுக்கு என்ன பண்ணமுடியும் .... அனுபவங்களை எடுத்து நொடி விடாமல் வைக்கிறிர்கள் குமார்... தொடர்ந்து சந்திப்போம் ....

துளசி கோபால் said...

சி.சென்னையில் ஒரு பத்தடி தள்ளி நின்னுக்கிட்டு இருந்தேன். எனக்கு முன்னே பணம் எடுக்க வந்தவர் நான் திரும்பி நிக்கனும்னார். . இல்லேன்னா அவர் அழுத்தும் எண்களைப் பார்த்துருவேனாம். பத்தடிக்கு என் கழுத்து நீண்டு எண்களைப் பார்க்குமான்னு தெரியலை!

வடுவூர் குமார் said...

வாங்க பத்மநாபன்,சிலருக்கு அடுத்தவர் மேல் இடித்துக்கொண்டிருந்தால் தான் இன்னும் உயிரோடு இருக்கோம் என்று தோனுதோ என்னவோ!சிங்கையில் இருக்கும் போது எல்லா இடங்களிலும் அவரவருக்கு இடையே சிறு இடைவெளி கட்டாயம் இருக்கும் அது இங்கு சில இடங்களில் இருக்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கு அவ்வளவு தான்.போகப்போக சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
என்னது திரும்பி நிக்கனுமா? பயங்கர சிரிப்பா வருது.
ஒருவேளை உங்களை முன்னமே தெரியுமா? அதையும் பதிவா போட்டுவிட போகிறீர்களோ என்று பயந்திருப்பார். :-))

S.Muruganandam said...

சிங்கையிலிருந்து மஸ்கட் சென்று படும் அனுபவங்களை( அவஸ்தைகளை????) அருமையாக கொடுக்கின்றீர்கள். இன்னும் தொடரட்டும்.

வடுவூர் குமார் said...

வாங்க கைலாசி - எல்லாமே அனுபவம் தானே! இங்கு போட்டு வைத்தால் எப்போதாவது புரட்டி பார்த்து சிரித்து மகிழலாம்.
வருகைக்கு நன்றி.

பத்மநாபன் said...

உள்ளூர்க்காரர் நீங்க வரலயேன்னு தான் நான் அடுத்த பதிவிற்கு போகாம இருக்கேன் ...
அந்த அடை போட்டோ மனசுக்குள்ளேயே இருக்கு ( இப்படியெல்லாம் படம் போட்டு வனத்தில் இருக்கிறவங்களை உசுப்பக்கூடாது .. அடுத்த சுற்று விடுமுறைக்கு ஊருக்கு விமானம் ஏறும் முன் அடையை ருசி பார்க்கும் சின்ன சின்ன ஆசையும் இருக்கு ).

வடுவூர் குமார் said...

வனத்தைவிட்டு வெளியில் வராமலா இருப்பீங்க?சீக்கிரம் சாமான்களை வாங்கி போட்டு பாருங்க.:-)

Unknown said...

Atm பற்றிய பதிவு சரி தான்.எனக்கும் இது மாதிரி அனுபவம் உண்டு.
அதைவிட கொடுமை 4 அல்லது 5 நபர்கள் வரிசையில் நிற்காமல் Atm மெஷினை சூழ்ந்து விடுகிறார்கள்.செல்போன் சரி செய்ய ரொம்ப தான் கஷ்டப்பட்டு இருக்கிங்க போல?

வடுவூர் குமார் said...

மின்ன‌ல், இங்கும் சில‌ ஏடிம் யில் அப்ப‌டித்தான் இருக்கு.புது அலைபேசி வாங்க‌லாம் தான் இருந்தாலும் அதில் உள்ள‌ ப‌ல‌ விப‌ர‌ங்க‌ளுக்காக‌ காத்திருந்தேன் க‌டைசியில் எல்லாவ‌ற்றையும் அழித்து தான் மீட்க‌முடிந்த‌து.

அன்புடன் மலிக்கா said...

ரொம்ப கஸ்டமாதரி தெரியுது. ஆனாலும் பதிவு சூப்பர்..

வடுவூர் குமார் said...

ந‌ன்றி ம‌லிக்கா.