போன பொது விடுமுறை வெள்ளி என்றால் அதற்கடுத்த சனிக்கிழமையும் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டதில் எனக்கு கொஞ்சம் வருத்தமே.நம்ம வருத்ததையெல்லாம் பற்றி யார் கவலைபடுகிறார்கள்?
வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு சாப்பிட்ட பிறகு சுமார் 2 மணிக்கு பேருந்துபிடித்து 2.30 மணிக்கு கராமா பகுதிக்கு சென்றேன்.இங்குள்ள பூங்காவில் உட்கார்ந்தால் ஞானம் கிடைக்குமோ கிடைக்காதோ கொஞ்சம் நிழலுடன் கூடிய இருக்கை கிடைத்தால் தூக்கம் நிச்சயம் கிடைக்கும்.நான் உட்கார்ந்த இடமும் அப்படித்தான் இருந்தது.உண்ட களைப்பு அப்படியே கண்ணை இழுக்க உட்கார்ந்த நிலையிலேயே கொஞ்சம் தூங்கிவிட்டேன்.நானாவது உட்காந்த நிலையில் மேலும் இருவர் அப்படியே கட்டையை கடத்திவிட்டார்கள்.அப்படி இப்படி என்று மணி 4.15 என்ற நிலையில் மேலும் உட்கார பிடிக்காமல் மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.இப்படியே திரும்ப பேருந்து பிடித்தால் 5 மணிக்கு வீட்டுக்கு போவிடலாம் ஆனால் அவ்வளவு விரைவாக போக எண்ணமும் இல்லை இஷ்டமும் இல்லை.
ஒரு தேநீர் குடித்தால் நன்றாக இருக்கும் போல் இருந்ததால் கராமா கடைத்தொகுதியில் உள்ளே நுழைந்து வின்டோ சாப்பிங் செய்துவிட்டு ஓரிடத்தில் வடை/சமோசாவுடன் தேநீர் கடையும் இருந்தது.ஒரு திராம் கொடுத்து தேநீர் வாங்கி குடித்தால் கண்ராவியாக இருந்தது.திட்டிக்கொண்டே மிச்சம் இருந்த தேநீரை குப்பைதொட்டியில் போட்டுவிட்டு நடக்க தொடங்கினேன்.
இதுவரை போகாத பகுதியாக தேர்ந்தெடுத்து நடக்க ஆரம்பித்தேன்.பல சாலைகள் இந்த மெட்ரோ கட்டுமானத்தால் துண்டாடப்பட்டிருப்பதால் வியாபாரத்துடன் நடைபாதையும் மிகவும் கஷ்டத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்குது.என்ன தான் கால் போன போக்கில் நடந்தாலும் ஆரம்பித்த இடத்தை மனதுக்குள் வைத்துக்கொண்டே நடந்தேன் - திரும்பி வரவேண்டும் அல்லவா?
முதலில் கண்ணில் பட்டது இக்கட்டிடம் தான் - இன்னும் முழுவதுமாக முடிவடையாத நிலையில் இருக்கிறது - போட்ட காசு எடுத்திருவாரா??
கட்டிடத்துக்கு சட்டை போடும் பணி நடக்கிறது.
கட்டிடத்தின் முகப்பு - பாட்டியாவாம்
வழி நெடுக பல கடைகள் கண்ணாடி கூண்டுக்குள் ஆட்கள் இருப்பதற்கான அடையாளம் குறைவாகவே தெரிந்தது.நடந்து நடந்து ஒரு பெரிய சாலை குறுக்கில் வந்தவுடன் எந்த பக்கம் போவது என்று தெரியாமல் வந்த வழியே ஆனால் சாலையில் மறுபக்கத்துக்கு போய் நடக்க ஆரம்பித்தேன்.முதலில் கண்ணில் பட்டது பர்ஜுமான் என்ற கடைத்தொகுதி தான்.நேரம் நிறைய இருந்ததால் உள்ளே நுழைந்தேன்.
போகப்போக வந்துகொண்டிருக்கும் கடைத்தொகுதி நீளம் சொல்லிமாளாது.பல வகையான கடைகள் ஆனால் ஆட்கள் கூட்டம் என்னவோ எண்ணும்படியாகத்தான் இருந்தது.மூன்று அடுக்குகளில் கடைகள் இருந்தாலும் பெரும்பாலனவை ஏதோ ஒரு கடைத்தொகுதி போலவே இருந்தது.எல்லாவற்றிலும் பளபளப்பும் தூய்மையையும் பார்க்கமுடிந்தது.மிக மிக வித்தியாசமாக இருந்த இந்த மாடிப்படிகள் என்னை மிகவும் கவர்ந்தது.இம்மாடிப்படிகள் மரத்தால் செய்யப்பட்டிருந்தது.
கட்டிடங்களை தான் வளைத்து வளைத்து செய்கிறார்கள் என்றால் இதிலும் வளைவு காட்டி வித்தியாசப்படுத்தியிருக்கிறார்கள்.
அடுத்து பக்கத்தில் உள்ள Centre Point என்ற கடைத்தொகுதியையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு ஆரம்பித்த இடத்துக்கு வந்துகொண்டிருக்கும் போது ஒருவர் குறுக்கிட்டு இங்கு வேறு ஏதேனும் கடைத்தொகுதி இருக்கா என்றார்.நான் வந்த வழியைஅ காண்பித்து சிலவற்றின் பெயரை சொன்னவுடன் அங்கெல்லாம் "விலை அதிகமாக இருக்கு" என்றார்.
நீங்கள் என்ன வாங்கப்போகிறீர்கள் என்று தெரியாதே என்றேன்.
சட்டை என்றார்.
கராமா பகுதியை காண்பித்து அங்கு சில கடைகள் இருக்கு பாருங்கள் என்றேன்.நன்றி சொல்லிவிட்டு போனார்.

