Monday, February 20, 2012

சென்னை வானிலை

சென்னையில் கடந்த சில வருடங்களாகவே வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் நன்றாகவே தெரிகிறது. குளிர்காலத்தில் இதுவரை கண்டிராத குளிர் மற்றும் வெய்யில் காலத்தில் மிகுதியான வெப்பத்தை காண்பிக்கிறது. இந்நிலை கிட்டத்தட்ட டெல்லி வானிலையை ஒட்டிவருகிறது.இன்று காலை ஜன்னலை திறந்த போது மிகுதியான பனி மூட்டம் இருந்தது இது மதியம் வரை அவ்வளவாக கலையாமல் இருந்தது. கீழ் உள்ள படம் எனது அலுவலகத்தில் இருந்து எடுத்தது.

1980 களில் நான் கண்டவானிலை இப்போது இல்லை என்றே கூறலாம்.



ஒரு மழைக்காலத்தில் இங்கிருந்து எடுத்த படம் கீழே.



Tuesday, February 14, 2012

சரியான படம்!

இதுவரை 4 கேமிரா வாங்கியிருப்பேன் அதில் நூற்றுக்கணக்கான படங்கள் எடுத்திருப்பேன் ஆனால் இது போல் இதுவரை வரவில்லை.

நடு சாலை என்றாலும் என்னை வேடிக்கை பார்த்த ஆட்டோகாரரையும் உதாசீனப்படுத்திவிட்டு நன்றாக சிரித்துவிட்டு வந்தேன்.

அரசாங்க வண்டி “No Parking" க்கு அருகில்!! சாலை ஆக்கிரமிப்பு வேறு.


படத்தின் மேல் சொடுக்கி பெரிதுபடுத்தி பார்த்து அனுபவியுங்கள்.

இது திநகர் மற்றும் நந்தனம் இருக்கும் ஒரு கிளை சாலையில்(சதுல்லா சாலை) உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவருடன் ஒரு சின்ன விவாதம்..

“ஆவிச்சி(விருகம்பாக்கம்) பள்ளி அருகே என்ன தூசி, பாவம் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வர இதுவே ஒரு காரணமாக அமையும்”

இதுக்கு பொதுமக்களா காரணம்? சாலையை தோண்டிவிட்டு அப்படியே விட்டுவிட்டு போன குத்தகைக்காரரை யார் தண்டிப்பது?

இப்படியே இந்த விவாதம் சுமார் 30 நிமிடங்களையும் கடந்து நம் அரசாங்கத்தின் கையாலாகதனத்தின் விளைவு என்று தான் முடிவுக்கு வரமுடிந்தது.

திருவாளர் சோ.. இந்த ஆண்டு விழாவில் சொன்ன அந்த அரசாங்க  வண்டி இது தானா? இது இன்னும் சில வருடங்கள் இங்கேயே இருந்தால் விஜயகாந்துக்கு ஒரு நல்ல துருப்புச்சீட்டு வாய்ப்பு தன்னாலே கிடைத்த சந்தோஷம் வரும்.

Sunday, February 12, 2012

தலைவலி ஆரம்பம்.

வீடுகளில் மராமத்து வேலைகள் ஆரம்பம் ஆகிறது என்றால் தலைவலி ஆரம்பிக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம் ஏனென்றால் எப்போது வரும் எப்போது போகும் என்பது தெரியாது.ஒரு வேலை ஆரம்பித்தால் அதன் தொடர்ச்சி எலி வலை போல் எங்கு முடியும் என்று தெரியாது. செலவுக்கு இவ்வளவு தான் என்று முடிவாக ஒதுக்கமுடியாது.

சில வருடங்களுக்கு முன்பு மேற்கூரையில் ஏதோ டொம் டொம்  என்று சத்தம் வந்தவுடனே தெரிந்தது அங்கு பிரச்சனை என்று.
 
கூரையில் முதன் முதலில் விரிசல் ஏற்பட்டவுடன் தெரிந்தவர் மூலம் வந்த பூச்சு வேலைக்காரர் கடையில் கிடைக்கும் துறு நீக்கியை உபயோகித்து கம்பி மேல் இருக்கும் துறுவை நீக்கிவிட்டு கொஞ்சம் அதிக ஸ்ட்ராங்க் உள்ள சிமிண்டை உபயோகித்து  பூசினேன்.அந்த பூச்சு சுமார் 1.5 வருடம் தாங்கியது,அதே இடத்தில் திரும்பவும் டொம் சத்தம் கேட்க நானே அதை உடைக்க சின்ன தாம்பாளம் அளவுக்கு பூசிய கான்கிரீட் வந்தது.உள்ளே இருந்த கம்பி துறுபிடித்து விரிவாக அதன் கீழ் பக்கம் இருக்கும் கான்கிரீட்டை வெளியே தள்ளிவிட்டது. ஒரு ஓரத்தில் கம்பியின் கீழ்பக்கம் வைக்கப்படும் சிறிய கான்கிர்ரீட் துண்டு எவ்வித ஆட்சேபனை இன்றி கையாலேயே எடுக்க முடித்தது. 18 வருடத்துக்கு முன்பு எப்படி கான்கிரீட் போட்டார்கள் என்பதை இது தெளிவாக காட்டியது.


ஒரு சின்ன பகுதி தானே விழுந்திருக்கு என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது மேலும் சில இடங்களில் வீக்கம் தெரிய வரவேற்பறை முழுவதும் கைவைக்க வேண்டிய நிலை வந்தது.


இம்முறை தெரிந்தவர் ஒருவரே குத்தகைக்காரரை அனுப்பி அவர் செய்யும் வேலையில் உபயோகிக்கும் முறையை அமல்படுத்தினார்.கீழே உள்ள துறு நீக்கியை பிரஸ் கொண்டு கம்பி மீது அடிக்கவேண்டும். இது ஒருவித அமிலம் என்பதால் கம்பி மீது படும் போது சிறிது நுரை வரும்.

இம்முறையில் கம்பி மீது அந்த கெமிகலை அடித்துமுடித்து இரண்டு மணி நேரம் கழித்து கீழே காண்பித்துள்ள Compound ஐ சிமிண்டுடன் கலந்து விரிசல் உள்ள இடங்களில் போடவேண்டும் அதன் பிறகு குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு அதன் மீது தண்ணீர் தெளித்து அது இருக வழிசெய்ய வேண்டும்.

எல்லாம் செய்து முடிக்க சுமார் 3 நாட்கள் ஆனது. பெயிண்ட் அடிக்க இந்த கான்கிரீட் இருக வேண்டும் என்பதால் காத்திருக்கோம்.


Compound கலக்கும் விதம் மற்றும் விகிதம் அந்த உரிமையாளர்கள் சொல்லியிருக்கும் படி செய்யவேண்டும். எல்லாம் சரி, இனி இப்பிரச்சனை வராதா? என்று கேட்டால் பதில் கிடையாது. ஏனென்றால் மறுபடியும் விரிசல் வர பல காரணிகள் நம் கண்ணுக்கே தெரியாமல் கூட இருக்கலாம்.இம்முறை வெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே.