Saturday, September 30, 2006

பொழுது போக..

ஆர்குட்டில் பார்த்துகொண்டிருக்கும் போதுகண்ணில் பட்ட இந்த விளையாட்டை பார்க்கவும்.

செம ஜாலியாக இருக்கு.







Photobucket - Video and Image Hosting

இது நாலு

Photobucket - Video and Image Hosting

கிளின் போல்டு

Photobucket - Video and Image Hosting

இது ஆறு

Photobucket - Video and Image Hosting


இது கிடைக்கும் இடம்இங்கே.

விளம்பரம்

இந்தியன் ஏர்லயன்ஸ்

இங்கு சிங்கையில் இவர்கள் போடும் ஒரு விளம்பரத்தை பற்றி சில மாதங்களுக்கு முன்பு இங்கு போட்டிருந்தேன்.

நேற்று தான் கவனித்தேன்.அந்த விளம்பரத்தின் கடைசியில் ஒரு பெண் குரல்

"Indian Airlines "NOW" become Indian"

இதுக்கு முன்னாடி இந்தியன் ஏர்லயன்ஸ் இந்தியாவுடையது இல்லையா?

தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்க.

குழம்பிப்போயிருக்கேன்

Friday, September 29, 2006

கண்டோலா

கண்டோலா,இது உயரமான கட்டிடங்களில் மிகச்சிறிய வேலைகள் செய்வதற்கு உபயோகமானவை.அதனதன் Designக்கு தகுந்தபடி ட்கள் வேலைசெய்யலாம்.இரண்டு கம்பிகளில் மின்சார உதவியுடன் மேலே ஏறும் / இறங்கும்.ஒரு கம்பியில் தான் முழுபிடிப்பு இருக்கும் மற்றது பாதுகாப்புக்காக.ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அல்லது ஒரளவுக்கும் மேல் விரைவாக இறங்கினால் இதில் உள்ள பாதுகாப்பு சாதனம் உந்தப்பட்டு அந்த இரண்டாவது கம்பியை அழுத்திக்கொண்டுவிடும்.பிறகு மனித உதவியுடம் மட்டுமே இறங்கமுடியும்.பாதிவழியில் மின்சாரம் தடைப்பட்டால் மனித உதவியுடன் மட்டுமே கீழே இறக்கமுடியும்.

கீழே உள்ள படம் இங்கு(சிங்கையில்) எடுக்கப்பட்டது.இது கொஞ்சம் பெரிய அளவில் உள்ளது.பயண்பாடு எல்லாம் ஒன்று தான்.

Photobucket - Video and Image Hosting

நாங்கள் மேட்டூரில் உபயோகப்படுத்தியதில் அதிகபட்சமாக 3 பேர் மட்டும் தான் போகமுடியும்.

ஒரு நாள் மதியம் சாப்பாட்டுக்கு பிறகு,வேலை ஆட்கள் இந்த கண்டோலா மூலம் மேலே போய்கொண்டிருந்தார்கள்.கடைசியில் நானும் மேலே போய் அவர்கள் செய்யும் வேலையை மேற்பார்வை செய்துகொண்டிருந்தேன்.

மணி முன்று இருக்கும்.தூரத்தில் மணற்புயல் போல காற்று அடித்துகொண்டிருந்தது.அப்போது ஒரு மின்னல் அடித்தது.சரி மழை வருவதற்கான அறிகுறி தெரிந்தது.சும்மாகவே ஆடும் அதுவும் மணற்காற்றுடன் மழையும் என்றால் கேட்கவேண்டாம்.எனவே கீழே இறங்கிவிடுவது என்று முடிவுசெய்து நாங்கள் 3பேர் மட்டும் கண்டோலாவில் இறங்க ஆரம்பித்தோம்.

மேலும் சிலர் ஏணி மூலம் மூலம் இறங்க ஆரம்பித்தனர்.

220 மீட்டர் உயரத்தில் இருந்து இறங்க ஆரம்பித்து 200..190..187

"பளிச்!!"-ஒரு மின்னல்.

மின்சாரத்தடை.

எங்க கண்டோலா நின்றுவிட்டது.இன்னும் 2 மீட்டர் இறங்கினால் 185 மீட்டரில் ஒரு பிளாட்பாரம் இருக்கு அங்கு நின்றுகொள்ளலாம்.
அதற்குள் காற்றும் மழையும் சேர்ந்துகொள்ள அந்த உயரத்தில் ஊஞ்சல் ஆடினோம்.

மின்தடை ஏற்படும் நேரத்தில் கண்டோலாவை இறக்க உபயோகப்படுத்தும் சாவியை காணவில்லை மற்றும் ஏதோ ஒரு ஆணி கிடைத்தால் போதும் அதுவும் கிடைக்காமல்,சிமினிக்கு வெளியே ஆடிக்கொண்டிருந்தோம்.

கொஞ்சம் மழையும் காற்றும் நின்ற
பிறகு,ஏணி வழி இறங்கிக்கொண்டிருந்த தொழிலாள நண்பர்கள் வந்து ஒரு ஆணியை கொடுத்ததனர்.

அதன் வழி கொஞ்சம் கொஞ்சமாக கீழ் இறக்கி 185 மீட்டரில் உள்ள பிளாட்பாரத்தில் இறங்கி கீழே வந்தோம்.

இனி சிமினி உள்ளே போவாம்.

Thursday, September 28, 2006

வலைப்பூ நண்பர்

நேற்று சாயங்காலம் 5.20க்கு ஒரு அழைப்பு தொலைபேசியில்.பேசியவர் வலைப்பூக்கள் மூலம் நேரில் பார்க்காத நண்பர்.இன்று நாம் சந்திக்கலாமா? என்றார்."வேலை எப்போது முடியும்?"

"இன்னும் 10 நிமிடங்களில்"

"சரி நாம் எங்கு எப்போது சந்திக்கலாம்" என்றார்.

அவர் ஊருக்கு புதிது என்பதாலும் நான் வேலை செய்யும் இடத்துக்கு பக்கத்தில் அவர் தங்கியிருந்ததாலும்,6.20 துக்கு அவரது பிளாக்கின்(Block) கீழ்தளத்தில் பார்க்கிறேன் என்று சொல்லி வைத்தேன்.

தொலைபேசி வைத்தவுடன் ஒரு வண்டி ரயில் நிலையத்துக்கு போக தயாராக இருப்பதாக வண்டிஓட்டுனர் சொன்னவுடன் ஒரு 5 நிமிடம் முன்பே கிளம்பிவிட்டேன்.

சோ சு காங் (இது ஒரு இடத்தின் பேர்) வந்து ரயில் பிடித்து ஜுரோங் யீஸ்ட் வந்தபோது மணி 5.50.அப்படியே நேராக NTUC என்ற பேரங்காடிக்கு போய்முதன் முதலில் சந்திக்கும் நண்பர்க்கு மரியாதைக்காக சிலவற்றை வாங்கிக்கொண்டு அவர் இருக்கும் பிளாக் போனபோது சரியாக 6.10.தொலைபேசி விபரத்தை சொன்ன 5 நிமிடங்களில் கீழே வந்து, L வடிவ ஒரு பென்ஜில் உட்கார்த்து பல விஷயங்களை பற்றி பேசினோம்.

தொகுத்து சொல்வதானால் "தமிழ்மணம்" பற்றி அதில் வரும் எழுத்தாளர்களை பற்றி பேசினோம்.பல நல்ல பழைய எழுத்தாளர்கள் பதிவு போடுவதில்லை என்ற மனக்குறையையும் சொன்னார்.

பலவற்றை பேசியபிறகு அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்து தேனீர் அருந்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்தார்.

அவர் தங்கியிருந்த வீட்டுக்காரரையும் தன் குடும்பத்தையும் அறிமுகம் செய்தபின்பு,டீ வேண்டுமா காபி சாப்பிடலாமா என்று அவரது துணைவியார் கேட்டார்கள்.டீ போதும் அதுவும் அரை கப் போதும் என்றேன்.

அதற்குள் ஊரில் இருந்து வாங்கி வந்த சோன் பப்டி வந்தது.சீட்டுக்கு பக்கத்தில் வேறு வைத்துவிட்டார்கள்.கையும் நாக்கும் ஒரு மாதிரியாகி விட அதே சமயம் "சக்கரை பண்டத்தை " கட்டுப்படுத்து என்று மூளை கட்டளையிட..

சோன் பப்டி பாதி எடுத்துக்கொள்ளவா? என்றேன்.

பரவாயில்லை,முழுவது எடுத்துங்க என்றார்.

இங்கும் பல விஷயங்களை பேசிகொண்டிருந்தோம்.அவற்றில் சில
சிங்கப்பூரில் இலக்கிய நிகழ்சிகள்
சிங்கப்பூரில் தமிழ்
தமிழ் வானொலி..

டீ வந்தது.வித்தியாசமான சுவை.ஏண்டா! அரைகப் சொன்னோம் என்று என்னை நானே நொந்துகொண்டேன்.

அவருக்கும் பல நிகழ்சி நிரல்கள் இருந்ததால் விடைபெரும் நேரமும் வந்தது.
மாலை 7.05 க்கு விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்கு வரும் போது மணி 8.
அடாடா அந்த நண்பர் பெயரை சொல்ல மறந்துவிட்டேன்.

அது நம்ம மூத்த வலைபதிவாளர்

"சல்தா ஹை" புகழ் திரு ஆசாத்.

Tuesday, September 26, 2006

சிமினிக்கு வெளியே

ஒருவழியாக 220மீட்டர் உயரத்தை முடித்துவிட்டோம்.இது இந்த பிராஜட்டில் வெறும் 40% தான்.

வெளிப்புற கான்கிரீட் முடிந்த கையோடு அந்த Slipform ஐ 220மீட்டர் உயரத்தில் வைத்து கழற்றி கீழே கொண்டு வரவேண்டும்.வேலைசெய்வதற்கு தேவையான இடத்துக்காக இரும்பு பிராக்கட் மாட்டி அதன் மேல் பலகைகள் போட்டு,நடக்க சாமான்கள் வைக்க இடம் தயார் செய்தோம்.மேலே காத்து சும்மா பிச்சுக்கிட்டு அடிக்கும் அதுவும் இல்லாமல் ஏற்கனவே சொன்னமாதிரி பனை / தென்னை மரத்தின் இருந்துகொண்டு வேலை செய்வது மாதிரி ஒரு சிறிய ஆட்டம் இருந்து கொண்டே இருக்கும்.நாளடைவில் இது பழக்கமாகிவிடும்.இருந்தாலும் Height Fear இருப்பவர்கள் போகாமல் இருப்பது நல்லது.

Photobucket - Video and Image Hosting

Slipform இருந்த வரையில் மேலே போவதற்கும் கீழே வருவதற்க்கும் மின்தூக்கி இருந்தது.இப்போது அதை கழற்ற ஆரம்பித்துவிட்டதால் சிமினிக்கு வெளியே "Condola" என்று அழைக்கப்படிகிற ஒரு விதமான மின்தூக்கி அமைத்தோம்.இதில் கூடுதலாக 3 பேர் மட்டும் தான் போகலாம் அதுவும் காற்றுக்கேற்ற படி ஆடி ஆடி போய் சேரும்.வெளி தடுப்புகள் ஏதும் இருக்காததால் வெளி அழகை பார்த்துக்கொண்டே செல்லலாம்.
இப்படி போய்கொண்டிருந்த போது ஒரு நான் அந்த மின்தூக்கியும் காலை வாரிவிட்டது.அதை சரி செய்ய சில நாட்கள் ஆகும் என்பதால் மேலே போவதற்கு ஒரு ஏணியை தவிர வேறெதுவும் இல்லை.பாதுகாப்புக்காக எதுவும் இல்லாத திறந்த ஏணி.வேலையோ மேலே, வேலை ஆட்கள் இந்த ஏணியை உபயோகப்படுத்தி 220 மீட்டர் உயரத்தை செங்குத்தாக ஏறுவார்கள்.பாதுகாப்புக்காக ஒரு கயற்றை 45 மீட்டர்க்கு ஒரு முடி போட்டு அதில் தங்கள் பாதுகாப்பு பட்டையை மாட்டிக்கொள்வார்கள்.விழுந்தாலும் 45 மீட்டரில் வந்து தொங்கிக்கொண்டிருக்கலாம் அல்லவா?

இப்படிப்பட்ட நேரத்தில் மிக முக்கியமான வேலை மேலே நடந்துகொண்டிருந்தது.எங்களில் யாராவது மேலே போய் அவர்கள் செய்யும் வேலையை மேற்பார்வையிடவேண்டும்.எங்கள் குழுமத்தில் ஒருவர் சிறிது வயதானவர் மற்றொருவர் இளைஞர்.இருவரும் போகமுடியாத நிலையில் நான் தயாரானேன்.பாதுகாப்பு பட்டையை மாட்டிக்கொண்டு திறந்த ஏணியில் ஏற ஆரம்பித்தேன்.தளத்தில் இருந்து ஆரம்பித்து ஒரே மூச்சில் 85 மீட்டர்,பிறகு அங்குள்ள ஒரு பிளாட்பாரத்தில் சிறிது நேரம் ஓய்வு திரும்ப 30 மீட்டர் இப்படியே முழு உயரத்தையும் தொட்டேன்.சுமார் அரை மணி நேரம் ஆனது.சுகமான அனுபவம்!!

Photobucket - Video and Image Hosting

நான் இப்படியென்றால் என்னுடன் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி-மலையாளி,கீழே ஆரம்பித்து எங்கும் நிற்காமல் 220 மீட்டரில் போய் நிற்பார்.பயமே இல்லாமல் வேலை செய்பவர்கள் மலையாளிகள்.ஆனால் சம்பளம் வேலை நேரம் எல்லாம் அவர்களுக்கு தனிதான்.கட்டுப்படுத்துவது கொஞ்சம் கஷ்டம்.

இந்த கண்டோலா பற்றிய சுவையான அனுபவத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Monday, September 25, 2006

பட்டியல் (தொடர்சி)

அடுத்து விழுந்தது நான் தான்

ஜனவரி / பிப்ரவரி 1988யில் ஆரம்பித்து ஜூனில் முடிந்தது எனது கல்யாணம்.நான் என்ன செய்தேன் என்பதை சொல்லலாம்,அதை என் நண்பர்கள் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.அவர்களும் வலைபதிய சில விஷயங்கள் வேண்டுமல்லவா?

இருந்தும் சில விஷயங்கள் மட்டும் சொல்லலாம்.விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் கடிதம் எழுதினேன்.கடிதம் எழுதுவது என்றால் 3,4 பக்கம் எல்லாம் இல்லை.முதல் இரண்டு வரிக்கு மேல் திணறல் தான்.ஏனோ 2 வரிக்கு மேல் எதுவும் இல்லை போல் தோன்றும்.இவுங்களுக்கு மட்டும் இல்லை,அப்பா,அம்மாவுக்கும் எழுதும் போது இதே நிலை தான்.

நான் இங்கு இவ்வளவு எழுதுவதே அவர்களுக்கு கொஞ்சம் ஜீரணிக்கமுடியாத விஷயம் தான்.என்ன செய்வது அததற்கு நேரம் வரவேண்டாமா??

மற்றபடி அவர்களிடம் இருந்து சில புகைப்படங்கள் வந்தது.அவ்வளவு தான்.

சரி அடுத்த நண்பனை கூப்பிடுவோம்..

இவர் பெயர்: சேரன், இவர் ஊர் செய்யார்-சென்னைக்கு பக்கத்தில் உள்ளது.போன தடவை பாண்டிச்சேரி போகும் போது கிழக்குக்கடற்கரை சாலையோரம் பார்த்த ஞாபகம்.அதே ஊர் தானா என்று தெரியவில்லை.

இவரைப்பற்றி 4 வருடங்களுக்கு முன்பு "ஆனந்தவிகடனில்" செதுக்கியது யார்? என்ற கட்டுரை வந்தது.இயற்கையாகவே மரங்களில் உண்டாகும் உருவங்களை சேர்த்து வைத்திருந்தாராம்.

எங்களுடன் இருந்தபோது இந்த திறமையை காட்டவில்லை.ஆனால் ஒரு சிறந்த மோனோ ஆக்டிங் கலைஞர்.பல கலைஞர்கள் குரலில் பேசி நடித்தும் காட்டுவார்.விஜயகாந்த் மாதிரி நடிக்கும் போது அவரைப்போலவே இவர் புருவமும் ஏறும், இறங்கும்.எப்போதும் ஏதோ சிந்தனைவயப்பட்டவராக காணப்படுவார்.நல்ல நண்பர்.இவர் பேட்டி வந்த போது சென்னையில் Port Trust யில் வேலை செய்வதாக வந்தது.

ஆனந்தவிகடனுக்கு எழுதி அவர் விலாசம் கொடுக்கமுடியுமா? என்று கேட்டிருந்தேன்.

பதில் இல்லை.

மூலிகை விஷயங்களில் ஒரளவு ஞானம் பெற்றிருந்தார்.பாம்பு கடிக்கு என்ன மருந்து,தேள் கடிக்கு என்ன? என்று ஒரு பூங்காவில் முளைத்திருந்த செடிகள் பேரைச்சொல்லி காண்பித்தார்.இந்த மாதிரி ஆள் எப்படி கட்டுமானத்துறைக்கு வந்தார் என்று கேட்கிறீர்களா? அது தான் விதி.
எப்படியோ இங்கிருந்து விலகி கப்பல் துறைக்கு போய்விட்டார்.

ஒரு தடவை எங்கள் வீட்டுக்கு வந்தபோது பக்கத்து அறைக்கு போவதற்குள்ள கதவை தட்டினார்.ஞாயிறு மதியம் என்பதால் ராகவனும்,பத்மனாபனும் சின்ன குட்டித்தூக்கத்தில் இருந்ததால் இவர் கதவை தட்டியது கேட்கவில்லை போலும்.அவர்கள் எழுந்திருக்காததால் என் அறைக்கு வந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரத்தில் அவர்கள் வெளியே வந்ததும்..

ஏண்டா கல்யாணத்திற்கு முன்பே கதவை திறக்க மாட்டேன் என்கிறீர்களே?கல்யாணம் ஆனால் ஒவ்வொருவனும் எப்படி இருப்பீர்கள் என்று.. ஒரு சின்ன நாடகமே போட்டு மோனோ ஆக்டிங் கொடுத்தான்.சூப்பரோ சூப்பர்.

பத்மனாபன் வீட்டுக்கு போன அவன் பையன் குண்டாக இருப்பானாம்,இன்னும் போடு இன்னும் போடு என்று நன்றாக சாப்பிட்டுகொண்டிருப்பானாம்.மனைவி கதவு பக்கத்தில் இருந்துகொண்டு அவர் வீட்டில் இல்லை என்று சொல்வாராம்.

மத்தியானம் ராகவன் வீட்டுக்கு போனா,வீட்டு மேட்னியை கலைத்த கோபத்தில் எப்போது கிளம்புவான் என்று ஏனோ தானோ என்று பேசிக்கொண்டிருப்பானாம்.
மறக்காமல் ஏதோ ஒரு கோயில் குங்குமம் அவன் மனைவி கொடுப்பாராம்.

என் வீட்டுக்கு வந்த என் பையன் எடை தூக்கிக்கொண்டு Exercise செய்துகொண்டிருப்பானாம்.எங்க மேல போட்டுவானா என்று வீட்டில் உட்கார்ந்திருக்கவேண்டும்.

இப்படி பலவித கற்பனைகளையும் அவிழ்துவிடுவான்.

நல்ல பல கலைஞர்கள் இப்படி தளம் அமையாமல் எங்கெங்கோ சுற்றி வாழ்ந்துகொண்டிருப்பதை பார்க்கும் போது-கஷ்டமாக இருந்தது.

அடுத்து: சங்கர்.

இவரும் திருச்சிக்காரர்.சாதாரணமான குடும்பத்தில் இருந்து வந்தவன்.அதிகமாக பேசமாட்டான்.அந்த மெளனத்திலும் ஒரு புரிதல் இருக்கும்.இவனுடன் பல siteகளில் வேலை பார்த்தேன்.இப்போதும் L&T-ECCயில் பங்களாதேஷில் இருப்பதாக கேள்வி.

இன்னும் பலர் இருப்பதால்,அவர்களை பற்றி வேறொரு சமயத்தில் அங்கங்கே
எழுதுகிறேன்.

திரும்பப்போவாம் சிமினி உள்ளே!!

அடுத்த பதிவில்.

Friday, September 22, 2006

ரெடிமேட் ஆர்கிடெக்ட்

நேற்று ஒரு நண்பனிடம் இருந்து வந்த இந்த மெயிலில் வந்த படத்தை பாருங்கள்.

Photobucket - Video and Image Hosting


நாம் கேள்விப்பட்டவரையில் முன்னமே தயாரித்து உபயோகிப்பதற்காக தயார் நிலையில் உள்ள பொருட்கள் சந்தையில் மிக மிக அதிகம்.

அந்த வகையில்..

வீடு கட்டி தரும் நிறுவனங்கள் பெரும்பாலும் அதன் வரைப்படத்தை 2D அல்லது கணினியில் போட்டு முடிந்தவரை 3Dயில் காண்பிப்பார்கள்.
வீட்டுக்கு வந்தவுடன் அந்த நினைப்பு சுற்றி சுற்றி ஓடும்.

அறைக்கு இந்த நிறம் போட்டா நல்லா இருக்குமே,ஜன்னலை இப்படி மாத்தினா சூப்பராக இருக்குமே என்ற எண்ணங்கள் ஓடினாலும் அதை செயல் படுத்த முடியாத நிலமைதான் மிஞ்சும்.ஏனென்றால் உங்கள் கையில் எதுவும் இல்லையே!!

இந்த குறையை போக்க வந்த மென்பொருள் தான் இது.

மேலும் தெரிந்துகொள்ள இங்கே இருக்கு விஷயம்.

இதை கணினியில் நிறுவியபிறகு உங்கள் தேவைக்கு ஏற்ப நில அளவை தேர்ந்தெடுத்து உங்கள் வீட்டை நீங்களே கட்டலாம் கணினியில்.தேவையான வீட்டின் அளவு தேர்தெடுத்த பிறகு அதற்கு வேண்டிய கட்டுமான சாமான்கள் எவ்வளவு என்று தெரிந்துகொள்ளலாம்.

வாஸ்து நம்பிக்கை உள்ளவரா?அதற்கும் இதில் வழி உள்ளது.

மொத்ததில் ஒரு வீடு வாங்கப்போகும் முன்பு இதை வாங்கி உபயோகித்தால் உங்கள் கனவு இல்லம் உங்கள் கணினியில்.

இதை எங்கு வாங்குவது?

designschakkara/at/hotmail.com-மேல் விபரங்களுக்கு இங்கு கேட்கவும்.இவர்கள் அலுவலகம் சென்னையில் உள்ளது.

மேலே போட்டிருந்த படம் இவர்கள் கோவையில் போன வாரம் நடந்த கண்காட்சியில் போது Hinduவில் எழுதியிருந்தார்கள்.

முயற்சி செய்தவர்கள் போடுங்கள் உங்கள் அனுபவங்களை.

துபாயிடம் இருந்து பறிப்பு

இன்று காலை தமிழ் செய்தியில் கேட்டது

Photobucket - Video and Image Hosting

தொடர்ந்து 19 வது ஆண்டாக சிங்கப்பூர் விமான நிலையம் உலகத்தில் தலைசிறந்த விமான நிலயமாக பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதோடில்லாமல் திறந்தவெளி சுங்கை தீர்வில் இதற்கு முன்பு முதல் இடத்தில் இருந்த துபாய் விமானநிலையத்தை கீழே இறக்கிவிட்டு அந்த இடத்தையும் இந்த விமான நிலயம் பெற்றுள்ளது.

சின்ன நாடு,

சிறிய ஜனத்தொகை,

பல இனம்,

தேசிய இயற்கை வளம் இல்லை,

குடிதண்ணீருக்கு வேறு நாடுகளை பார்க்கவேண்டிய நிலமை.(5 ஆண்டுகளுக்கு முன்பு கூட)

விவசாயம் கிடையாது.

இப்படி பல குறைபாடுகள் சில வேற்றுமைகள் இருந்தும் எப்படி இவர்களால் சாதிக்கமுடிந்தது?

கற்போம் இவர்களிடம் இருந்து.

தெரியாதைதான் கற்கமுடியும்.

திறமை காட்டி உலகை தன்பக்கம் சிறிது திரும்பிப்பார்க்க வைத்த இந்த மக்கள் மற்றும் அரசாங்கத்தையும் வியக்காமல் இருக்கமுடியவில்லை.

முடிந்தால் நமது நாட்டின் ஒரு சிறிய பகுதியையாவது இந்த மாதிரி மாற்றிக்காட்டவேண்டும்.

இது என் சிறிய அவா கூட!!

Thursday, September 21, 2006

"பட்டியல்"

போன பதிவில் ஒரு நண்பனின் சோகக்கதையோடு முடிந்தது.

இனி வருபவற்றை பார்ப்போம்.

மேட்டூர்,எங்கள் வீட்டில் மொத்தம் 8 பேர் தங்கியிருந்தோம்.

ஹாலில் நான்,பக்கத்து அறையில் பத்மனாபன்,ராகவன்.

பத்மனாபன் திருச்சிக்காரர்.மிகவும் ஜோவியலான பேர்வழி.அவர் Shiftயில் இருந்தால் வேலை நடப்பதே தெரியாது.ஏதாவது அரட்டை செய்துகொண்டிருப்பார்.வாழ்கையை சுலபமாக வாழக்கற்றுக்கொண்டுவிட்டார்.
கொஞ்சம் பருமன் -அதுவும் உயரம் கொஞ்சம் கம்மி என்பதால் பருமனாக தெரியும்.
இப்போது டெல்லியில் ஏதோ ஒரு கம்பெனியில் இருக்கிறார்.எங்கெங்கோ தேடி கண்டுபிடித்து,3 வருடங்களுக்கு முன்பு கொடுத்த mail க்கு இன்னும் பதில் போடமுடியாத அளவுக்கு பிசியாக இருக்கிறார்.

மேட்டூரில் வேலை பார்க்கும் போது அந்த Site யில் பலர் மதில் மேல் நின்றுகொண்டிருந்தோம்.அதான்!!பலருக்கு கல்யாண வயது.

அதில் முதல் -பத்மனாபன்.

நிச்சயம் ஆகி சுமார் 8 மாதங்கள் கழித்து கல்யாணம்.
சில சமயம் புகைப்படத்துடன் கடிதம் வரும்.அது அவருடைய கனாக்காலமாக இருந்தது.ஜீப்பில் போதும் வரும் போதும் கிண்டலும் கேலியாக இருந்தது.

கல்யாணம் முடிந்து வந்தவுடன் மத்தியான சாப்பாடு 5 அடுக்கு கேரியரில் வரும்.சாப்பாடு சும்மா அட்டகாசமாக இருக்கும்.அவர் மனைவி ஒரு அருமையான Cook.

வழக்கம் போல் கல்யாணம் முடிந்தவுடன் வரும் கதைகள்/நிஜ சம்பவங்கள் இவரிடம் இருந்தும் வந்தது.

அதில் பதியக்கூடியது இதுவும் ஒன்று

"என்ன பத்து(செல்ல பெயர்)?முதலிரவு எல்லாம் எப்படி?"-சக நண்பர் கேட்க

"அத ஏண்டா கேட்கிறீங்க?"

"ஏதோ கொஞ்சம் நேரம் பேசிய பிறகு,என் மனைவி கேட்டாள்"

"நமக்கு குழந்த பிறக்கும் சமயத்தில் நான் செத்துப்போய்டா என்ன செய்வீங்க?"

எனக்கு பயங்கர கோபம்-இதைப்பற்றி பேச இதுவா நேரம் என்ற கோபத்தில்

"பாடை கட்டுவேன்" என்று கிண்டலாக சொல்லிவிட்டேன் என்றார்.

முதலிரவு சமயத்தில் இப்படி ஒரு சம்பாஷனை நடந்தால் எப்படியிருந்திருக்கும் என நினைக்கும் நேரத்தில் இதை அப்படியே light க எடுத்துக்கொண்டு கிண்டலாக பதில் சொன்ன நண்பனை மறக்காமல் இருக்க முடியவில்லை.

அடுத்து விழுந்தது-ராகவன்

இவருக்கு நாங்கள் வைத்திருக்கும் செல்லப்பெயர் "குங்குமப்பொட்டு"
இவர் கல்யாணம் நிச்சயமாகி அந்த நாளுக்கு காத்திருக்கும் நேரத்தில்,வருங்கால மனைவியிடம் இருந்து வரும் கடிதங்களில் தவறாமல் ஏதாவது கோயில் குங்குமம் இருக்கும்.

அவ்வளவு பக்தி-வருங்கால கணவனிடம்!!

நான் என்னென்னவோ எழுதுகிறேன்,எனக்கு குங்குமம் தான் வருகிறது.நான் கேட்பதற்கு பதில் வரமாட்டேன் என்கிறது என்று புலம்பிக்கொண்டிருப்பான்.

இப்போது சென்னையில் தனி கட்டுமானத்துறை கம்பெனி நடத்தி வருகிறான்.இவனும் கடிதம் எழுதுவது mail கொடுப்பது என்பதில் எப்போதும் சுணக்கம் தான்.

ஏண்டா பதில் போடவில்லை என்றால்?

பத்து வருடத்துக்கு முன்பு போட்ட கடிதத்தை காண்பித்து
இது அப்படியே பையில் உள்ளது.தினமும் பதில் போடத்தான் நினைக்கிறேன்.முடியவில்லை என்பான்.

பதில் போடாததால் வெறுப்பு இல்லை,அது அவனுடைய குணம் என்று தெளிந்ததால் எதிர்பார்பதை குறைத்துக்கொண்டுள்ளேன்.

அடுத்த Jump

நான் தான்.:-))

Monday, September 18, 2006

திரு.அருணாச்சலம்(சீர்காழி)

ஊருக்கு போய் திரும்பியதும் அவர் போய் பார்த்ததை சொன்னார்.அவர் மனைவி அந்த பெண்வீட்டுக்கு போய் சாதரணமாக பேசி வந்ததும்,தாரளமாக தொடரலாம் என்றார்.
இப்போதைய என் மனைவியை அன்று அவருடைய வீட்டில் பார்க்கமுடியவில்லை என்றாலும் ஏதோ ஒரு தட்டச்சு இன்ஸ்டியூட்டில் பார்த்துவிட்டு வந்து "Ok" சொன்னார்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் அவர்மீது இருந்த எனக்கு இருந்த நம்பிக்கை.எதுவும் தவறாக போகாது,அதுமட்டும் இல்லாமல் அங்கு அவருக்கும் இருந்த மதிப்பு & நல்ல பெயர்.

இப்படி நான் அவுங்களை நூல் விட்டு பார்த்துக்கொண்டிருக்கும் போது என்னை அவர்கள் கயறு விட்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பது கல்யாணம் முடிந்தபிறகு தெரிந்தது.அது மற்றொரு சமயத்தில்.

மேட்டூரில் வேலை முடிந்தபிறகு அவர் காக்கிநாடா போக எனக்கும் அங்கேயே வாய்ப்பு வந்தது.

எதிர் எதிர் வீடு.என் மனைவிக்கும் அவர் மனைவிக்கும் நல்ல புரிந்துணர்வு இருந்தது.இங்கு தான் நான் இவரை கடைசியாக பார்த்தது.
இந்த வேலை முடிந்தபிறகு நான் ஒரு பக்கம் அவர் ஒரு பக்கம் போனதால் தொடர்பு விட்டுப்போனது.

கொஞ்ச நாள் கழித்து அவர் மலேசியா போய்விட்டதாக செய்தி கிடைத்தது.அதுவும் இதே கம்பெனி அவரை அங்கு அனுப்பியது அவரின் வேலை திறமைக்கு ஒரு சான்று.ஏனென்றால் இந்த மாதிரி வெளிநாட்டு வேலைக்கு இங்கு யார் நன்றாக வேலை செய்கிறார்களோ அவர்களுக்கு அடிக்கும் ஒரு பம்பர் பரிசு இது.

ஆனால் இவருக்கோ... ..

அவர் போன 2 மாதங்களில் என்னுடைய பேரும் அந்த பிராஜட்டில் அடிபட,என்னுடைய கடவுச்சீட்டு எல்லாம் தயார்படுத்தச் சொல்லியிருந்தார்கள்.

நடுவில் மற்றொரு வேலை அவசரமாக செய்யச்சொல்லி என்னை வடக்கே அனுப்பினார்கள்.அது முடிந்த பிறகு சென்னை அலுவலகத்துக்கு வந்து பிறகு மலேசியா கிளம்பவேண்டும்.

நான் இப்படி ஒரு வலைப்பூ உங்கள் அனுமதியில்லாமல் எழுதியுள்ளேன் படித்து பாருங்கள் என்று சொல்லலாம் என்றால்..

அதற்கு தேவையே இல்லாமல் ஒரு சின்ன விபத்தில் காணாமல் போய்விட்டார்.

கிழக்கு மலேசியா-குச்சிங் நகரம்-ஏப்ரல் 1992 ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பக்கத்தில் உள்ள ஒரு ஆலயத்துக்கு போகலாம் என்று வேனில் செல்லும் போது ஒரு திருப்பத்தில் குப்பை லாரி மோதி பொட்டில் அடிபட்டு சில மணி நேரங்களில் போய் சேர்ந்துவிட்டார்.பக்கத்து சீட்டில் உள்ளவர்களுக்கு சிறிய காயம் தான்.

வெறும் 39 வயதில் ஆட்டம் முடிந்தது.

இது இப்படி சோகமாக முடிந்தது என்றால் அடுத்த நண்பர் மிகவும் வித்தியாசமானவர்.

அது அடுத்த பதிவில்.

Friday, September 15, 2006

மேட்டூர் நண்பர்கள்(1987-1988)

மேட்டூர் வந்த போது நான் பிரம்மச்சாரியாக இருந்ததால் "செட்ராஸ்"அருகே கம்பெனி பார்த்த ஒருவீட்டில் 8 பேர் தங்கியிருந்தோம்,பக்கத்திலேயே Mess,அதனால் சாப்பாட்டுக்கும் பிரச்சனையில்லை இல்லாமல் இருந்தது.

காலை மாலை இரு வேலைகளிலும் ஜீப் வந்து அழைத்துப்போய் திரும்ப கொண்டுவிடும்.
இந்த Site யில் அமைந்த சில நண்பர்களை பார்த்துவிட்டு பிறகு சிமினி பக்கம் வருவோம்.

அலுவலகம் என்னும் போது அதில் முதலாவாதாக ஞாபகம் வருவது "திரு.s.அருணாச்சலம்." இவர் சொந்த ஊர் சீர்காழி,வாய்காங்கரை தெரு (Canal Street).புத்தூர் பாலிடெக்னிக்கில் சிவில் முடித்துவிட்டு ECCக்கு வந்தவர்.இவரும் என்னைப்போல் அரசாங்கம் சார்ந்த வேலையில் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு ECC க்கு வந்ததாக ஞாபகம்.எனக்கு 3 அல்லது 4 ஆண்டுகள் முன்பே இங்கு சேர்திருந்தார்.
Photobucket - Video and Image Hosting

இடதுபக்கம்:ஜோதி நடுவில்:அருணாசலம் வலது பக்கம்:நான்
என்னுடைய முதல் Site யில் அலுவலகத்தில் அவரிடம் பணி கற்றுக்கொண்டு அவருடனேயே வேலை செய்தேன்.ரொம்ப அனியாயத்துக்கு பொறுமைசாலி.பல அதிகாரிகள் தங்கள் கோபங்களை சுலபமாக இவரிடம் காட்டியும் ஒன்றுமே நடக்காத மாதிரியிருந்து சமாளிப்பார்.

பக்கத்தில் இருக்கும் எனக்கு பொருக்கமுடியாது.
என்ன "அருணாசலம்,அவர் வந்து இந்த மாதிரி கத்திட்டு போரார் நீங்க சும்மா இருக்கீங்க? சொல்ல வேண்டியது தானே அதை நீங்கள் பண்ணவில்லை என்று".
வெறுமனே ஒரு சிரிப்பை விட்டுவிட்டு தொடர்ந்து வேலையை பார்ப்பார்.இது தான் அவர் குணம்.கை சுத்தம். பல பெரியவர்களிடம் வேலைசெய்து நல்ல பேர் எடுத்திருந்ததாலும் பல அதிகாரிகளும் அவருடைய வேலை திறனுக்காகவே அவரை வைத்துக்கொள்வார்கள்.இவர் இந்த வேலைக்குத்தான் என்று முத்திரை குத்தமுடியாத மனிதர்

என்னுடைய முதல் siteக்கு பிறகு நான் எங்கெங்கோ சுத்தியபிறகு இவரை மேட்டூரில் சந்தித்தேன்.அப்போது தான் கல்யாணம் செய்துகொண்டிருந்தார்,கொஞ்சம் "காலம்" கடந்த பிறகு.

நாங்கள் இருவரும் ஒரே Siteயில் இருந்தாலும் வெவ்வேறு Projectயில் இருந்தோம்.எனக்கு சிமினி அவருக்கு கூலிங் டவர்.அருகில் இருந்தாலும் எப்போதாவது தான் பார்த்துக்கொள்வோம்.

ஒரு தடவை
ஆந்திராவில் இருந்த போது..
ஊருக்கு வருவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன்.
அப்போது ஏதோ பேசிக்கொண்டிருக்கும் போது "என்ன ஆத்துல ஏதாவது பொண்ணு பாக்க ஆரம்பிச்சிட்டாளா?" என்றார்.

தெரியலை.தங்கைக்கு முடித்த பிறகு தான் என்றேன்.

சரி நீ போகும் வழியில் மதுராந்தகம் இறங்கி இந்த லெட்டரை எனக்கு தெரிஞ்சவா "ஏரி காத்த ராமர்" கோயிலுக்கு எதிர்தமாதிரி ஆத்தில் இருக்கா,கொடுத்துட்டு போ-என்றார்.கூடுதலாக அவாத்தில் ஒரு பெண் இருக்கா பாத்துக்கோ,பிறகு பேசிக்கலாம் என்றார்.

போனேன்,கொடுத்தேன், கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிளம்பிவிட்டேன்.அந்த மாமா, "இது எங்காத்துக்காரி" என்று மாமியை காண்பித்துவிட்டு,பொண்ணை கண்ணில் கூட காட்டவில்லை.வீட்டில் இருந்த வெளிச்சத்துக்கு காண்பித்திருந்தாலும் தெரிந்திருக்காது.ஒரு வேளை நான் போன சமயத்தில் அவுங்க வீட்டில் இல்லையோ என்னவோ?

நான் என்ன பெண் பார்க்க வருகிறேன் என்று சொல்லிவிட்டா போனேன்?அவுங்க பொண்ணை கூப்பிட்டு காண்பிக்க!!

பிறகு அது அப்படியே போய்விட்டது.

எனக்கும் வெவ்வேறு இடங்களில் வேலையிருந்ததால் இது சுத்தமாக மறந்துவிட்டது.
அதற்கு பிறகு மேட்டூர் வந்தபிறகு திரும்பவும் ஒரு ஜாதகம் சீர்காழில் இருந்து வந்திருப்பதாக வீட்டில் இருந்து கடிதம் வந்தது.

அப்போதெல்லாம் ஏது தொலைபேசி ஒரு சாதாரணமான குடும்பத்துக்கு..

சீர்காழி என்றதும் இவர் ஞாபகம் தான் வந்தது.அதுவும் அந்த சமயத்தில் இவர் அங்கு போவதாக இருந்ததால் விபரங்கள் சொல்லி அனுப்பியிருந்தேன்.
"பொண்ணு எப்படி? என்னோட வேலைக்கு ஒத்துவருமா? என்று சும்மா விஜாரித்து வாருங்கள்" என்று.

காரணம் சொல்லவேண்டாம்,பிறகு முடியாவிட்டால் உங்களுக்கு கெட்டபேர் அதனால் சாதரணமாக விஜாரித்து பொண்ணையும் பார்த்துவிட்டு வாருங்கள் என்றேன்.

பார்த்தார்களா? இல்லையா?

அடுத்த பதிவில்..

Wednesday, September 13, 2006

பரமபதம்

சுமார் 2 மாதங்கள் சேமித்ததற்கு "கிடைத்தது" என்று போன பதிவில் சொல்லி முடித்தேன்.

அது இது தான்.

இந்த பிராஜட் தொடங்கிய சமயத்தில் எங்கள் சென்னை கிளையில் "பரிந்துரைக்கு சன்மானம்" என்ற புது கொள்கையை கொண்டுவந்தது.
அதன்படி Site யில் கண்டுபிடித்து வெற்றிகரமாக செயல்படுத்தும் "கண்டுபிடிப்புகளுக்கு" சன்மானம் வழங்கப்படும் என்று.

இப்படி ஒன்று இருக்கிறது என்று பல நாட்களுக்கு பின்பு தான் தெரியவந்தது.

அதற்கு முன்பே என் உயர் அதிகாரி "திரு.U.R.ஹரிஹர சுப்பிரமணியம்" என்பார் அதற்கு தேவையான கடிதங்களை,முயற்சிகளையும் விவரித்து அவரே தயாரித்து எங்களது மெயின் அலுவலகத்துக்கு அனுப்பியிருந்தார் போலும்.

சில மாதங்கள் கழித்து அதை அங்கிகரித்து கீழே போட்டுள்ள மாதிரி கம்பெனி "News Letter" யில் போட்டு Rs 5000/- கொடுத்தார்கள்.

Photobucket - Video and Image Hosting

இதன் வெற்றிக்கு நான் மட்டும் பொருப்பள்ள.என்னுடன் வேலை பார்த்த சக ஊழியர்கள்,தொழிலாள நண்பர்களுக்கும் இதில் நிறைய பங்குள்ளது.

இதை எனக்கு உறைக்க வைத்தான் ஒரு நண்பன்.அதை எப்படி/எங்கே என்று பார்ப்போமா?

இந்த அங்கீகாரம் கிடைத்தவுடன் ஒரு சின்ன மீட்டிங் Site உள்ளேயே எங்கள் தலைமை அதிகாரி ஏற்பாடு செய்திருந்தார்.எல்லோரும் சிலாகித்து பேசி முடிந்த பிறகு..

வெங்கடேசா "இந்த பணம் உன்னுடைய உழைப்பில் மட்டும் வந்தது அல்ல,உன்னுடன் வேலை செய்த சிலரின் பங்குள்ளது அதனால் இதை அவர்களுடன் பங்கு போட்டுக்கொள்வது தான் சிறந்தது" என்றான் என் நண்பன்.இவரை "நண்பன்" என்ற பொட்டிக்குள் அடைப்பது அவ்வளவு சரியல்ல இருந்தாலும் இப்போதைக்கு அப்படியே வைத்துக்கொள்வோம்.

ஒரு நண்பனுக்கு அழகு தவறு செய்யும் போது "இடித்துரைக்கவேண்டும்".அதைத்தான் அவன் செய்தான்.
என்னுடைய ஆரம்ப கால L&T-ECC வாழ்கையில் இருந்து என்னை பார்த்துக்கொண்டிருக்கான்.

அதுவும் பிற்காலத்தில் அவருடைய ஊரில் இருந்து என்னுடைய மனைவியும் வந்தார் என்பதால் அவர்மீது ஒரு Soft Corner.

சரி,அவர் சொன்னமாதிரி பணத்தை பங்கு போட்டுக்கொண்டாயா?

நான் கேட்காத,எதிர்பார்க்காத பணம் கிடைத்தபோது அதை அவர்களுடன் பங்கிட்டுகொள்வது தானே ஞாயம்.அதைத்தான் செய்தேன்.எவ்வளவு என்று சரியாக ஞாபகம் இல்லை.

இந்த அங்கீகாரம் தான் என்னுடைய ECC வாழ்க்கையில் முதல் மையில் கல்.

பரமபத்தில் ஏணியை மிதித்தேன்.

கொஞ்சம் பொருத்துக்கொள்ளுங்கள்--சுய விளம்பரமாக இருக்கிறது இது.

இதை எதற்கு போடுகிறேன் என்றால்,கட்டுமான துறையில் கூட இந்த மாதிரியான "தட்டிக்கொடுத்தல்" நடைமுறைக்கு வந்தது என்பதை காண்பிக்கதான்.

இந்த "Suggestion Scheme" இன்றளவும் பல கம்பெனிகளில் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.சின்ன கண்டுபிடிப்புகள் மூலம் பல வெற்றிகள் அடையப்பட்டுள்ளன.அதற்கு இது ஒரு உதாரணம்.

எல்லா துறைகளில் சொல்வது போல்,கண்ணையும் காதையும் திறந்து வைத்துக்கொண்டாலே, பல பரிந்துரைகள் வெற்றி பெற வாய்ப்பு உண்டு.

மேட்டூர் பற்றி எழுதிய தொடரில் எங்களுடைய Client பற்றி எழுதியிருந்தேன்.மேலும் வரும் தொடர்களில் என்னுடன் பணிபுரிந்த
இன்னும் பல சுவாரஸ்யமானவர்களை பற்றி எழுத உள்ளேன்.

அடுத்த பதிவுக்கு வாருங்கள்.

Friday, September 08, 2006

"பளிச்"

இந்த தலைப்பை போன பதிப்பில் பின்னூட்டம் இட்ட திருமதி.துளசியிடம் இருந்து கடன் வாங்கியுள்ளேன்.

பறவைப்பார்வையில் சிமினியின் உட்பகுதி-பாதிதான் காட்டியுள்ளேன்.
Photobucket - Video and Image Hosting

வழி பிறந்தது என்று போன பதிவில் சொல்லியிருந்தேன்...

ஆதாவது செங்கல் சுவர் கட்டும்போது சில சமயம் துவாரங்கள்( Openings) விட வேண்டியிருக்கும்,அந்த மாதிரி இடங்களில் கொத்தனார் சில கற்களை வைத்து அதற்கு சிமின்டு கலவை போடாமல் வெறும் மணல் மட்டும் போட்டு அல்லது அது கூட இல்லாமல் வெறும் கல்லை மாத்திரம் வைப்பார்கள்.

இப்படி வைப்பதனால் தேவைப்படும்போது மிக சுலபமாக அதை எடுத்துவிட்டு ஜன்னலோ இல்லை வென்டிலேட்டரோ வைத்துக்கொள்ளலாம்.உடைக்கும் செலவு,கல்லின் செலவை மிச்சப்படுத்தலாம்.இதை "பொய் கல்" என்று சொல்வார்கள்.இந்த மாதிரி ஒர் நடைமுறை இருப்பதை இந்த வேலை செய்வதற்கு சுமார் 3 வருடங்கள் முன்பு ஒரு Meeting நடக்கும் போது எங்கள் தலைவர் சொன்னது ஏதோ ஒரு மூலை(ளை)யில் ஒட்டிக்கொண்டிருந்தது.

"பளிச்"

இந்த கார்பல் கம்பி வெளியே தெரிய ரம்பித்து 10 மணி நேரத்துக்குள் கான்கிறீட்டை கொத்தி,கம்பி கட்டி & சாரம் அடித்து கடைசியாக கான்கிரீட் போடவேண்டும்.
முதல் வேலை-கான்கிரீட்டை உடைப்பது.அந்த சின்ன இடத்தில் பல ட்களை வைத்து வேலை பார்த்தாலும் குறைந்தது 6 மணி நேரம் கும்.இதை குறைத்தாலே பாதி கிணறு தாண்டிய மாதிரி என்று தெரிந்தது.அப்போது தான் மேலே சொன்ன "மணல்-பளிச்" வந்தது.தாவது திரும்ப நிமிர்க்ககூடிய கம்பியை கான்கிறீட் போட்டு மூடாமல் மணலை போட்டு மூடவேண்டும்.சின்ன சின்ன பிளைவுட்டை வைத்து கானிகிரீட்டை தடுத்து மீதமுள்ள இடத்தில் மணலை கொட்டினோம்.

படத்தைப் பார்க்கவும்.(Plan-பறவைப்பார்வையில்)
Photobucket - Video and Image Hosting

10மணி நேரம் கழித்து அந்த இடம் வெளியே வந்தவுடன் தண்ணீர் குழாய் மூலம் அதை கழுவிவிட்டால் முடிந்தது கதை.இதை செய்வதற்கு அரை மணி நேரம் கூட காது.

5 1/2 மணி நேரம் மிச்சம் பிடித்தாயிற்று.

கம்பியை நிமிர்த்துவது,கட்டுவது,சாரம் அடிப்பது என்ற மற்ற வேலைகள் சுலபமாக எங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி அமைக்கமுடிந்தது.

நிமிர்த்து கட்டிய கம்பியை படத்தில் பார்க்கவும்.(பறவைப் பார்வையில்)

Photobucket - Video and Image Hosting

இது அவ்வளவும் என்னுடைய "பாஸ்"க்கு சொல்லப்பட்டது அதோடு இல்லாமல் எங்கள் Client யிடம் சொல்லி தேவையான அனுமதியையும் வாங்கினோம்.அவர்களும் அவ்வளவு சீக்கிரம் கொடுக்கவில்லை.முதல் தடவை பார்ப்போம் சரியாக வந்தால் மற்ற உயரங்களிலும் போடலாம் என்றார்கள்.முதலில் சொன்ன திரு.சத்தியமூர்த்தியின் பங்கும் இதில் உள்ளது.

இது போட்டால் தான் இதன் தொடர்புள்ள வேலைகளை முன்னமே ஆரம்பிக்க முடியும்.
முதல் தடவை அந்த லெவலை நெருங்கும் போது என்னுடைய shift மாறிப்போனது.சக மேற்பார்வையாளரிடம் கொடுத்துவிட்டு போனேன்.

அந்த சக மேற்பார்வையாளர் பெயர் "ஹரிஸ் சிங் ராவத்"-அப்போது தான் பாலிடெக்னிக் முடித்துவிட்டு நைனிடாலிருந்து மேட்டூருக்கு வந்திருந்தான்.தமிழ் சுத்தமாக தெரியாது.சாப்பாடும் ஒத்துவரவில்லை.எனினும் எங்களுடன் ஒட்டிக்கொண்டுவிட்டான்.

எல்லாம் சரியாக இருந்தாலும் எவ்வளவு முனைப்புடன் செய்வார்கள் என்ற சந்தேகத்துடனே வீட்டுக்கு போனேன்.

மறுநாள் வேலைக்கு போன போது சந்தோஷமான செய்தி சொன்னார்கள்.25 இடங்களில் போட வேண்டியது 16 இடங்களில் மட்டும் தான் முடிந்தது.முதல் தடவை என்பதால் சின்ன சின்ன பிரச்சனைகள்.

பிரச்சனைகளை களைந்த பிறகு... சுமூகமாக எல்லா மட்டங்களிலும் போட்டோம்.இதன் விளைவாக நாங்கள் சேமித்த நாட்கள் சுமார் 60.

1988-நவம்பர் மாதம் வாக்கில் 220மீட்டர் உயரத்தை வெற்றிகரமாக தொட்டுவிட்டோம்.
பலர் முகங்களில் சந்தோஷக்களை தாண்டவமாடியது.

சுமார் 2 மாதங்களை சேமித்தாயே ஏதாவது கிடைத்ததா?

கிடைத்தது. அது அடுத்த பதிவில்.

Thursday, September 07, 2006

சிமினி-விளக்கம்.

இரண்டாவது முறையாக கான்கிரீட் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே எந்தெந்த வேலைகளில் கவனம் செலுத்தி இழந்த காலத்தை பிடிக்க முடியும் என்று எங்கள் மேலதிகாரிகள் விவாதம் நடத்த தொடங்கினார்கள் அது அப்படியே எங்கள் நிலைக்கும் வந்தது.
பலர் பலவித யோஜனைகளையும் முன்வைத்தபோது என்னுள்ளும் ஒரு யோஜனை தோன்றியது.அந்த யோஜனை சொல்வதற்க்கு முன்பு நான் Training எடுத்த டெல்லி site பக்கம் மீண்டும் ஒரு தடவை போய்விட்டு வருவோம்.அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியை வேண்டுமென்றே எழுதாமல் விட்டுவிட்டேன்.இங்கே போடுவதற்காக.

அது இது தான்..

டெல்லியில் இருந்தவர்களில் ஒரு தமிழ் மேற்பார்வையாளர், பெயர்:சந்திரசேகர்.வயதில் இளையவர்.
அவருக்கு கம்பிகட்டும் வேலைகளை மேற்பார்வையிடும் பணி கொடுக்கப்பட்டிருந்தது.அதில் ஒரு சிறிய சிக்கல் அதற்காக சில வேலை ஆட்களை வைத்துக்கொண்டு அதனுடைய Modelஐ கீழே கட்டிக்கொண்டிருந்தார்.
ஏதோ வேலையாக நான் கீழே போனபோது வேலை மும்மரத்தில் இருந்த அவரைப்பார்த்து என்ன ஏதாவது பிரச்சனையா? என்றேன்.

அதற்கு முன்னால்..

கீழே உள்ள படத்தை பாருங்கள்,

Photobucket - Video and Image Hosting

இது சிமினியின் குருக்கு வெட்டு தோற்றம்,தாவது சிமினியை குருக்காக வெட்டி பார்த்தால் இப்படி தான் இருக்கும்.
சின்ன சின்ன கட்டமாக உள்ளவைக்களுக்கு Corbel என்று பெயர்.இது நாங்கள் இப்போது கட்டிக்கொண்டிருக்கும் கான்கிரீட் சுவற்றின் உள் பக்கம் சுமார் 30 செ.மீ அளவுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்.

படத்தை பார்க்கவும்.

Photobucket - Video and Image Hosting

அதை இப்போது பண்ண முடியாததால் அதற்கு வேண்டிய கம்பிகளை மடக்கி வைத்து சுவர் கான்கிரீட் போடுவோம்.பிறகு அது வெளியே வந்த பிறகு அந்த இடத்தை கொத்தி கம்பியை வெளியே எடுத்து தேவையா அளவுக்கு போட்டுக்கொள்வோம்.இந்த Corbel கான்கிரீட் போட இப்போது நேரம் கிடைக்காது என்பதால் அதை இந்த வெளிச்சுவர் வேலை முடிந்த பிறகு தனியாக வேறு முறையில் கட்டுவோம்.அதை பிறகு சொல்கிறேன்.

ஆமாம் எதுக்கு இந்த கார்பெல்?

சிமினி கட்டுமான தொழிற் நுட்பத்தில்,முதலில் வெளிச்சுவர்(இதைத்தான் Slipform முறையில் கட்டுவோம்),பிறகு இந்த கார்பெல்.கார்பெலுக்கு மேல் ஒரு பீம்.அந்த பீமுக்கு மேல் Fire Brick Work.படத்தை பார்க்கவும்.

Photobucket - Video and Image Hosting

Slipform நடந்துகொண்டிருக்கும் போது இந்த வெளி/உள் சுவரில் இருந்து நீட்டிக்கொண்டிருக்கும் எதையும் இப்போது போட முடியாததால் மேலே சொன்ன மாதிரி தான் கட்டுமானத்தை நடத்தவேண்டும்.
இப்படி பார்க்கையில் ஒரு வேலை முடிந்த பிறகு தான் அடுத்த வேலையை ஆரம்பிக்கமுடியும்.இந்த மாதிரி சமயத்தில் இழந்த 3 மாதங்களை எப்படி ஈடுகட்டுவது?

திரும்ப சந்திரசேகர் பக்கம்.

சந்திரசேகருக்கு இந்த கார்பெல் கம்பி வைப்பதில் தான் பிரச்சனை.அதை திரும்ப சரியாக எடுக்கவேண்டும் என்பதால் ஏதோதோ யோசித்து ஒரு வழியாக கொண்டு வந்திருந்தான்.அப்போது ஏதோ ஞாபகத்தில்" வெங்கடேசா,இதை இப்போதே Slipform ஓடும் போதே போடுகிறமாதிரி இருந்தால் எப்படியிருக்கும்?"என்றான்.
அப்போது வழி தெரியாததால் மறந்துவிட்டோம்.

ஆனால் மண்டை உள்ளே ஏதோ ஒன்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.எப்போதோ யோசித்த கேள்விகளுக்கு எப்போதோ விடை தந்துகொண்டிருக்கிறது.அது தான் இப்போதும் தந்தது.

வழி பிறந்தது.

என்ன அது என்பதை அடுத்த பதிவில்.

Tuesday, September 05, 2006

மூன்று மாதத்திற்கு பிறகு

மேட்டூர் அநுபவங்கள்(1) &(2)

பழைய கான்கிரீடை உடைத்துவிட்டு புதிதாக போட்டு திரும்ப Slipformஐ தேவையான இடத்தில் மாறுதல்கள் செய்துவிட்டு ஆரம்பித்தோம்.

போனதடவை சூடுபட்டுக்கொண்டதால் இந்த தடவை கான்கிரீட் ஆரம்பிப்பதற்கு முன்பே சிமின்ட் மூட்டையில் உள்ள சிமின்ட்ஐ நன்கு சோதனை செய்து பிறகு ஆரம்பித்தோம்.

24 மணிநேர வேலை என்பதால் எங்கள் குழுவை இரண்டாக பிரித்து,ஒவ்வொரு குழுவும் 12 மணி நேரம் வேலை பார்த்தோம்.15 நாட்களுக்கு பின்பு Shift மாறவேண்டும்.அன்று மாத்திரம் 18 மணி நேர வேலை.

உடனே கணக்கு போடாதீங்க!! செம ஓவர் டைம் கிடைத்திருக்கும் என. ஒரு பைசா கிடையாது.நேரத்துக்கு டீயும் பிஸ்கட்டும் தான்.

ஒரு டீமில் கீழே ஒரு பொறியாளர்,ஒரு ·போர்மேனும் இருப்பார்கள்.இவர்களுடைய வேலை கான்கிரீட் மெசின்கள் ஒழுங்காக வேலை செய்கிறதா,அளவாக தண்ணீர் விட்டு கலக்குகிறார்களா மற்றும் ஜல்லி,மணல் மற்றும் சிமின்ட் தேவையான அளவு உள்ளதா என்று பார்க்கவேண்டும்.

மேலே தேவைப்படுகிற கான்கிரீட்டு,கம்பி & தேவையான Shutters கீழேயிருந்து Lift மூலம் தான் போகும்.அதே Lift ட்களும் உபயோகிப்பதால் அதையும் ஒழுங்கு படுத்தவேண்டும்.அவ்வப்போது கான்கிரிடின் தரக்கட்டுப்பாட்டுக்காக சின்ன சின்ன க்யுபு(Cubes) போடுவார்கள் (படத்தைப் பார்க்க).அதையும் கவனிக்கவேண்டும்.

Photobucket - Video and Image Hosting

அப்படியே மேலே போவோம்..

இங்கு தான் கான்கிரீட் போடுவார்கள் அதற்கு முன் இதன் அமைப்பை தோராயமாக சொல்லுகிறேன்.இந்த Slipform முன்றடுக்கு கொண்டது.
மேல் அடுக்கு:இங்கு தான் Lift மூலம் கான்கிரீட் வரும் இடம்.மேலே வருகிற கான்கீரிட்டை ·பனல் மூலம் Tube வழியாக இரண்டாவது தளத்திற்கு வரும்.கம்பி கட்டும் வேலையும் பாதி இங்கிருந்தும் 2வது தளத்தில் இருந்தும் நடக்கும்.

நடுத்தளம்:இதில் தான் பல வேலைகள் நடக்கும் இடம்.மேல் தளத்தில் இருந்து வரும் கான்கிரீட்யை Vibrate செய்யவும்.இந்த Slipform மொத்தத்தையும் தூக்கப்பயன்படும் Jack,Hydralic Pumps எல்லாம் இருக்கும்.சிமினி நேராகத்தான் போகிறதா என்று சோதனையிடவும் இந்த தளம் தான் உதவும்.கட்டுமானத்துக்கு வேண்டிய கம்பிகளை தரையிலிருந்து இந்த தளத்திற்கு மற்றொரு Winch மூலம் வரும்.

Photobucket - Video and Image Hosting

கீழ்தளம்:இங்கு வெளியே தெரியும் கான்கிரீடை Finishing செய்யும் இடம்.மற்றபடி தேவையான கான்கிரீட் கொத்தும் வேலைகளை செய்யும் இடமும் இதுவே.

இப்படி பல வேலைகளையும் முடித்துவிட்டு ஒரு நல்ல நாளில் 24 மீட்டரில் இருந்து கான்கிரீட் போட ஆரம்பித்தோம்.

நாங்க எல்லோரும் சேர்ந்து முழுங்கிய 3 மாதத்தை மீட்டோமா,இல்லையா?

EB க்கு அபராதம் கட்டினோமா?

வரும் பதிவுகளில்.

Friday, September 01, 2006

திரு.சத்தியமூர்த்தி-தொடர்சி

இதன் முதல் பகுதி
இங்கே


இவர் இரவு வேலைக்கு வந்தால் அவர் shift முடியும் வரை தூங்க மாட்டார், ஏதாவது பேசிக்கொண்டு இருப்பார்.சில சமயம் தனியாக உட்கார்ந்துகொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருப்பார்.

ஒரு நாள் இரவு பணியில் இருந்தபோது நான் ஏதோ Drawingஐ வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தேன்.எனக்கு முன்னால் அவர் புருவத்துக்கு மத்தியில் தனது இரு விரல்களை வைத்துக்கொண்டு டேபிள் மீது கையை ஊன்றிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டிருந்தார்.எனக்கு ஏதோ சந்தேகம் வந்து அவரை "சார்,இதிலே ஒரு சந்தேகம்" என்றேன்.

அவர் தூக்கிவாரிப்போட்டது போலே முழித்தார்.

சாரி சார்... தூங்கிட்டீங்களா? நான் பார்க்கலை-என்றேன்.ஆனால் அவர் கண்கள் தூங்கியது மாதிரி தெரியவில்லை.அதற்கு பிறகு தான் சொல்லத்தொடங்கினார் அவருடைய தியான வாழ்கையை.

அந்த நாள் வரை எனக்கு தியானத்தைப் பற்றி அவ்வளவாக தெரியாது.அதை கட்டுப்படுத்தலாம் இங்கு ஒலி /ஒளி தெரியும் என்றெல்லாம் படித்திருக்கிறேனே தவிர அதில் மனது அவ்வளவாக ஈடுபடவில்லை.

அவருக்கு அடிக்கடி ஒரு கனவு வந்து கொண்டிருக்குமாம்,ஏதோ ஒரு மலையில் ஏறுவது போலும்,ஒரு குகையில் பலர் ஏதோ முனுமுனுத்துக்கொண்டு இருப்பார்களாம்.இவர் நுழைவதை கூட யாரும் கண்டுகொள்ள மாட்டார்களாம்.(என்ன திரு ரஜினி ஏதோ பேட்டியில் சொன்னமாதிரி இருக்கா?).
இந்த மாதிரி கனவு வந்ததை ஒரு பெரியவரிடம் கூறிய போது நீ காண்கிற இடங்கள் எல்லாம் நிஜமாகவே இருக்கிறது என்று அந்த இடத்தையும் சொன்னாராம்.இவர் போய் அந்த இடத்தை பார்த்தாரா இல்லையா என்பதை என்னிடம் சொன்னதாக ஞாபகம் இல்லை.

தியானம் செய்பவர்களிடம் சில குணாதிசியங்கள் இருக்கும், அதை அந்த அலைவரிசையில் இருப்பவர்கள் சரியாக கண்டுகொள்வார்கள்.யாரிடம் என்ன பேச வேண்டும் என்று தெரிந்து பேசுவார்கள் அதுவும் இந்த மாதிரியான அநுபவங்களை அவ்வளவு சீக்கிரம் புதியவர்களிடம் கொட்டமாட்டார்கள்.தனக்கு நேர்வது சரியானதா இல்லையா என்ற குழப்பம் இருக்கும்.பல நேரங்களில் நேருக்கு நேர் கண்ணை பார்த்து பேசுவார்கள்.

தியானம் பற்றி பல நாட்கள் பேசுவோம் அப்போது ஒரு நாள் தான் முயன்றுகொண்டிருக்கும் ஒரு முயற்சியை சொன்னார்.

"அதாவது என் மனைவி அல்லது என் பெண் கையை பிடிக்கும் போது எனக்கு எந்த வித்தியாசமும் தெரியக்கூடாது"

இது கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தாலும்-உணர்சிகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றிருக்கிறார்.இதை தான் நமது காந்தி வேறு முறையில் முயற்சி செய்தார்.

"தியானம்"-இதைப்பற்றி.. அதில் ஒருவர் நம் வலைப்பூக்களில் மிகவும் பரிச்சயமானவர்... என்ன சொல்கிறார் என்று இங்கு பார்க்கவும்.

திரு.சத்தியமூர்த்தி, எங்கள் வேலை நின்ற போது Executive Engineer-திரு.மயில்சாமியுடன் (இவர் பெயரை சரியாகத்தான் சொல்கிறேன் என்று நினைக்கிறேன்-நேற்று குளிக்கும் போது ஞாபகம் வந்தது) பேசி ஒப்பந்த அடிப்படையில் என்ன உதவிகள் செய்யமுடியும் என்று பார்த்து திரும்ப வேலை ஆரம்பிக்க உதவினார்.

முழுதாக 3 மாதங்களுக்கு மேல் கான்கிரீட்டை உடைத்து பின்பு போட்டு வேலையை 24 மீட்டரில் இருந்து தொடங்கினோம்.

அந்த வேலை முடிந்த பிறகு நான் எங்கெங்கோ சுத்தியபிறகு,பல வருடங்கள் கழிந்தபிறகு ஒரு நண்பனிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, இவர் எண்ணூர் அனல் மின்நிலையத்தில் வேலை செய்வதாக சொன்னான்.சரி ஒரு தடவை பார்த்திவிட்டு வரலாம் என்று அவர் அலுவலகத்துக்கு போனேன்.இந்த முறை அவர் Exe. Engineer க பதவி உயர்வு பெற்றிருந்தார்.நான் போன சமயம் அவர் வேறு எங்கோ போயிருந்ததால் கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு திரும்பிவிட்டேன்.

அங்கு வேலை செய்த பல நல்ல உள்ளங்களில் இவருக்கு எப்போதும் ஒரு தனியிடம் இருக்கும்.